Translate

Wednesday 21 March 2012

மாநாட்டை குழப்ப சிங்களக் காடையர்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வி!


மாநாட்டை குழப்ப சிங்களக் காடையர்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வி!
ஜெனீவா ஐ.நா மனித உரிமைச் சபையில், திங்கட்கிழமை(19-03-2012) இடம்பெற்ற உப மாநாடொன்றில், சிங்களக் காடையர்கள் மேற்கொண்ட அடாவடித்தனமான நடவடிக்கை ஐ.நா காவல்துறையினரால் அடக்கப்பட்டுள்ளதாக நாதம் ஊடகசேவை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா மனித உரிமைகள் தொடர்பில் இடம்பெற்றிருந்த இந்த உப மாநாட்டுக்கு வந்திருந்த 15க்கும் மேற்பட்ட சிங்களக் காடையர்கள், அடாவடித்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு பலரையும் அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, ஐ.நா காவல்துறையினர் அழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இச்சம்பவம் குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவிக்கையில், சிறிலங்காவில் மனித உரிமை மீறல்கள் மற்றும் சிறுபான்மை இனங்களுக்கான உரிமைகள் குறித்து இந்த உப மாநாட்டினை பல அரசசார்பற்ற நிறுவனங்கள் கூட்டாக நடத்தியிருந்தன. அரச சார்பற்ற நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புக்கள், தமிழர் அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் ஐ.நா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஆகியோர் இந்த உப மாநாட்டில் பங்கெடுத்திருந்தனர்.
இதில் குறிப்பாக சிறிலங்காவில் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக கடத்தப்பட்டு காணாமல் போயிருந்த தனது கணவனைத் தேடிவருவரும் சிங்களப் பெண்ணொருவர் கலந்து கொண்டு நிலைமைகளை விபரித்திருந்தார். மேலும் சிறிலங்காவில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து பேசப்பட்டுக் கொண்டிருந்தபோது, சிறிலங்காவின் அரசின் உத்தியோகபூர்வ பிரதிநிதிகளாக அல்லாமல், பார்வையாளர்களாக பங்கெடுத்திருந்த 15க்கு மேற்பட்ட சிங்களக் காடையர்கள் எழுந்து கூச்சல் போடத் தொடங்கினர். ஐ.நாவுக்கு எதிராகவும், அமெரிக்காவுக்கு எதிராகவும் மிக மோசமான முறையில் தகாத வார்தைகளை பிரயோகித்தனர்.
அடாவடித்தனமான முறையில் நடந்து கொண்டதோடு பலரையும் அச்சுறுத்தும் பாங்கில் செயற்பட்டனர். சிங்களக்காடையர்களின் இந்த நடவடிக்கையினை பங்கெடுத்திருந்த பல மேற்குலக நாட்டவர்கள் வன்மையாக கண்டித்தனர். ‘இது சிறிலங்காவல்ல இப்படி அடாவடித்தனத்தையும், அச்சுறுத்தலையும் விடுப்பதற்கு. இது ஐ.நா மனித உரிமைச் சபை. இங்கு பண்பான முறையில், மரியாதையுடன் நடக்க வேண்டுமென’ சிங்களக் காடையர்களுக்கு மேற்குலக பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்தும் சிங்களக்காடையர்கள் கத்தல், கூச்சலென அடாவடித்தனத்தை மேற்கொண்டனர். ஐ.நா மனித உரிமைச் சபை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்கள், சிங்களக் காடையர்களின் இச் செயலை வன்மையாக கண்டித்ததோடு, ஐ.நா காவல்துறையினர் அழைக்கப்பட்டு சிங்களக் காடையர்களின் அடாவடித்தனம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
குறித்த இந்த சிங்களக் காடையர்களுடன், சமீபத்தில் சனல்-4 தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட புதிய ஆவணப்படத்தில் காட்டப்பட்டிருந்த, மகிந்தவின் வலதுகரங்களான இரண்டு சிங்கள ஊடகவியலாளர்களும் இங்கு இனங்காணப்பட்டதாக தெரியவருகின்றது.
மறுபுறம், ஐ.நா மனித உரிமைச் சபைக்கு வெளியே, ஐ.நா முன்றலில் ஐ.நாவுக்கும் அமெரிக்காவுக்கும் எதிராக ஆர்பாட்டமொன்றை சிங்களவர்கள் நடத்தியுள்ளனர். இந்த ஆர்பாட்டத்தை ஒளிப்பதிவு செய்ய முற்பட்ட, தமிழகத்தின் புதிய தலைமுறை தொலைக்காட்சியினரை அச்சுறுத்தி, தங்களது அடாவடித்தன்தை சிங்களக்காடையர்கள் காட்டியுள்ளதாக நாதம் ஊடகசேவை மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment