விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் 55ஆவது டிவிசனுக்கும், 59ஆவது டிவிசனுக்கும் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா, பெருமளவு பொதுமக்கள் கொல்லப்படக் காரணமாக இருந்தவர் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார்.
மருத்துவமனைகள்,. மற்றும் பாதுகாப்பு வலயங்கள் மீதான பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டு தமிழ்மக்களைப் படுகொலை செய்து போர்க்குற்றம் இழைத்த இவர் மீது பிரித்தானியாவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று உலகத் தமிழர் பேரவை கோரியுள்ளது.
போர்க்குற்றங்களுக்கு காரணமானவர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா, லண்டனின் குடும்பத்தினருடன் தங்கியுள்ள போதும், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியதற்கு எதிராக, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹக்கிக்கு எதிராக உலகத் தமிழர் பேரவை சட்ட நடவடிக்கை ஒன்றில் இறங்கியுள்ளது.
அத்துடன் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா மீதான குற்றச்சாட்டுகள் அடங்கிய மனு ஒன்று ஸ்கொட்லன்ட்யார்ட் காவல்துறையிடமும் கையளிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஈஸ்டர் காலம் என்பதால் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இரண்டு வாரங்களாகும் என்று சட்டவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், பிரித்தானியாவில் தாம் விசாரிக்கப்படக் கூடும் என்ற அச்சத்தினால், மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா லண்டனில் இருந்து விரைவில் வெளியேறவுள்ளார்.
இதுகுறித்து அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் தகவல் தெரிவிக்கையில், மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவின் 18 மாதகால பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்காலம் ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில் அவர் நாடு திரும்பவுள்ளதாக கூறியுள்ளார்.
இந்த வழக்கமான மாற்றத்துக்கும் உலகத் தமிழர் பேரவையின் சட்டநடவடிக்கைக்கும் தொடர்பு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment