Translate

Thursday 22 March 2012

முள்ளிவாய்க்கால் நிலைமை மீண்டும் தமிழ் மக்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதில் தமிழ்க் கூட்டமைப்பு உறுதி

புலிகளை முள்ளிவாய்க்கால் வரைக்கும் இட்டுச் சென்று அவர்களை சர்வதேசத்திலிருந்து தனிமைப்படுத்தியது போன்ற நிலைமை எமது தமிழினத்துக்கு மீண்டும் வந்து விடக்கூடாது என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் அவதானமாக இருக்கின்றது என்று கூட்டமைப்பின் செயலாளரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.


ஐ.நா. மனித உரிமை பேரவைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செல்லாமைக்கான காரணங்களை விளக்கும் வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மன்னாரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்தில் உரையாற்றும் போதே மாவை சேனாதிராஜா எம்.பி. இவ்வாறு கூறியுள்ளார். மன்னார் மாவட்ட தமிழரக் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் எஸ். சிவஹரனின் ஏற்பாட்டில் மன்னார் நகர சபை கேட்போர் கூடத்தில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது.

இங்கு மாவை சேனாதிராஜா எம்.பி. தொடர்ந்தும் உரையாற்றுகையில், இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணை விவகாரம் இன்று உலக நாடுகள் பூராகவும் சூடு பிடித்துள்ளது. இந்த வேளையில் ஏன் தமிழத் தேசியக் கூட்டமைப்பு அங்கு செல்லவில்லை என்ற வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஒரு விளையாட்டு அணியாக இருக்கலாம். அல்லது வேறு எந்த அமைப்பின் தலைவராகவும் இருக்கலாம். ஓர் இக்கட்டான நிலைமை ஏற்படும் போது தலைவர் கூட்டாகவோ அல்லது தனித்துவமாகவோ ஒரு தீர்மானத்தை எடுத்து செயற்படுவது வழமையாகும்.

அவ்வாறே எமது கூட்டமைப்பின் தலைவரும் பலரை சந்தித்ததிலும் பல விடயங்களை அறிந்ததன் நிமித்தம் ஜெனீவா விடயத்தில் ஒரு தெளிவான முடிவுடன் செயற்பட்டுள்ளார். எமது கூட்டமைப்பின் தலைவர் சிறந்த திறமையானவர் என ராஜதந்திரிகளே எம்மிடம் தெரிவித்துள்ளனர். நாங்கள் இந்த நேரத்தில் ஜெனீவாவுக்கு செல்வதனால் பயனுண்டா இல்லையா என்பதனை கடந்தகால வரலாறுகளை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.

புலிகளை முள்ளிவாய்க்கால் வரைக்கும் இட்டுச் சென்று அவர்கள் சர்வதேசத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டது போன்று நாம் அத்தகைய நிலைக்கு செல்லக் கூடாது. அத்தகைய நிலை தமிழ் மக்களுக்கு ஏற்படாது தடுக்கும் வகையிலேயே நாம் செயற்படுகின்றோம். எமது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் எதிர்பார்ப்புக்களை சர்வதேச மட்டத்தில் நாம் எடுத்தியம்பி வருகின்றோம். 

அதேபோன்று ஆதிக்கமுள்ள நாடுகளின் கருத்துக்களையும் செவி மடுத்து அவர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்படாத நிலையில் செயற்படுகின்றோம்.

தற்போது அமெரிக்காவுக்கும் இலங்கைக்குமிடையே நடப்பது ஆயுதப் போராட்ட மல்ல. இரு இனங்களுக்கிடையில் நடைபெறும் போராட்டமல்ல. மாறாக இது இராஜதந்திரப் போராகும். அன்று எமது அயல் நாடான இந்தியா வெளியுறவுக் கொள்கையில் விட்ட பிழைதான் இன்று பெரும் பூகம்பமாக வெடித்துள்ளது. இதை நாங்கள் இந்தியாவுக்கு மிகத் தெளிவாக எடுத்துக்கூறியுள்ளோம்.

தற்பொழுது எமக்குக் கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை நழுவவிடாது சர்வதேச அக்கறையிலிருந்து நாம் விலகிச் செல்லாது இருப்பதற்கு விழிப்பாக இருக்க வேண்டியது அவசியமாகும். எமது கூட்டமைப்பை உடைப்பதன் மூலம் தமிழினத்தின் ஒற்றுமையை சீர்குலைத்து எம்மை தொடர்ந்தும் அடிமைகளாக வைத்திருக்க முயற்சிகள் இடம்பெறுகின்றன. இதனால் நாம் விழிப்பாக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment