Translate

Friday 21 October 2011

த.தே.கூட்டமைப்புக்கான அமெரிக்க அழைப்பின் பின்னணி

த.தே.கூட்டமைப்புக்கான அமெரிக்க அழைப்பின் பின்னணி

ஒரு பக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் தீவிரம் பெற்று வருகின்ற நிலையில், அவர்களை நோக்கி சர்வதேச சமூகத்தின் கதவுகள் திறக்கத் தொடங்கியுள்ளன.

அடுத்த வாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் நால்வர் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளப் போவது முக்கியமானதொரு திருப்புமுனையாகவே கருதப்படுகிறது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பின் பேரிலேயே இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை. சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரே அமெரிக்கா செல்லவுள்ளனர்.

இவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு சாதாரணமானதல்ல. அதுவும் முக்கியமானதொரு கட்டத்தில் இந்த அழைப்பு வந்துள்ளது.

பல தசாப்த காலமாகத் தொடரும் இனச்சிக்கலில் தமிழர்தரப்பு எதற்கும், எந்தவொரு கட்டத்திலும் இத்தகைய அழைப்பு அமெரிக்காவில் இருந்து வந்ததில்லை.

இதற்கு முன்னர் எத்தனையோ பேச்சுக்கள், சந்திப்புகள் நடத்திருக்கின்றன. இனப்பிரச்சினை தொடர்பாக, திம்புவில் வட்டமேசை மாநாடு, இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும், ஐரோப்பிய நாடுகளிலும், ஜப்பான், தாய்லாந்து போன்றவற்றிலும் கூட இத்தகைய பேச்சுக்கள், சந்திப்புகள் நடந்துள்ளன.

ஆனால் இலங்கை இனப்பிரச்சினை சார்ந்த ஒரு சந்திப்பு அமெரிக்காவில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது- அதுவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமே இதற்கு ஏற்பாடு செய்துள்ளது இதுவே முதல்முறை.

முன்னர், இந்தியாவும், சில மேற்கு ஐரோப்பிய நாடுகளுமே இதுபோன்ற சந்திப்புகளை ஒழுங்கு செய்தன. இப்போது இந்த விவகாரம் மெல்ல மெல்ல அமெரிக்காவின் கைக்கும் மாறத் தொடங்கியுள்ளது.

இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்ளத் தொடங்கியுள்ளதன் வெளிப்பாடாகவே இதனைக் கருதலாம்.

அடுத்தவாரம் அமெரிக்கா செல்லும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு அங்கு இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன், உதவி இராஜாங்கச் செயலர் ரொபட்ஓ பிளேக் மற்றும் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேச ஏற்பாடாகியுள்ளது.

இத்தகைய சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாகப் பேசப்படுகிறது.

சில வாரங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் ரொபட்ஓ பிளேக் கொழும்பு வந்திருந்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை சந்தித்துப் பேசியிருந்தார்.

இந்தநிலையில் அவசரமாகப் பேசப்பட வேண்டிய அல்லது மேலோட்டமான விவகாரங்களாக இருந்தால், அவரே பேசிவிட்டுப் போயிருந்திருப்பார்.

ஆனால் இது ஒரு ஆழமான விவகாரங்களை ஆராயும்- முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக கருதப்படுகிறது. அதனால் தான் இதற்கு அமெரிக்கா அதிக முக்கியத்துவம் கொடுக்க முனைகிறது.

ரொபட் ஓ பிளேக் அண்மையில் கொழும்பு வரும் போதெல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்து விட்டே, அரச தரப்பினரையோ ஏனைய தரப்பினரையோ சந்திப்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்.

இது அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தமிழர் தரப்பில் பேசக் கூடிய தரப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அங்கீகரித்திருப்பதன் அடையாளமாகும்.

இப்படியானதொரு அங்கீகாரத்தை பெரும் நிலப்பரப்பை தமது ஆட்சிப் பிரதேசமாக வைத்திருந்த புலிகளுக்குக் கூட அமெரிக்கா வழங்கியிருக்கவில்லை. புலிகளை பயங்கரவாத அமைப்பாகவே அமெரிக்கா கருதியது. கடைசி வரையில் புலிகள் அமைப்பின் அழிவு குறித்து அமெரிக்கா கவலைப்படவும் இல்லை.

ஆனால், ஒரு விடயம் அமெரிக்காவினால் தட்டிக் கழிக்க முடியாததாகி விட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழர் தரப்பின் பேசவல்ல சக்தியாக அடையாளம் காணும் விடயமே அது.

பொதுவாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புலிகளின் பினாமி என்று அரசாங்கம் கூறிவந்தாலும், அவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டிய தவிர்க்க முடியாத சூழல் ஏற்பட்டு விட்டது.

இதற்குக் காரணம் அமெரிக்காவோ அல்லது இலங்கை அரசாங்கமோ கூட்டமைப்புடன் பேசியே ஆக வேண்டியது அவசியம் என்றாகி விட்டது. தமிழ் மக்களும் விரும்பியோ விரும்பாமலோ தமது அரசியல் தலைமையாக அவர்களை ஏற்கும் நிலை வந்துள்ளது.

இதனால் தான் ஏராளமான பிரச்சினைகள், பிளவுகள் பூசல்கள் இருந்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் நின்று நிலைக்க முடிகிறது. தாக்குப் பிடித்து அரசியல் நடத்த முடிகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக, தமிழர் தரப்புக்குள்ளேயே பலத்த விமர்சனங்கள் உள்ளன. கடுமையான அதிருப்திகள் நிலவினாலும் கூட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வைத்தே எந்தக் காய்களையும் நகர்த்தியாக வேண்டும் என்ற உண்மை அனைத்துத் தரப்பினராலும் உணரப்பட்டுள்ளது.

அந்தவகையில் தான் அமெரிக்காவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இனம் கண்டுள்ளது.

ஜனநாயக ரீதியாக- தேர்தல்களில் தமிழ்மக்கள் வெளிப்படுத்திய கருத்தை அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகம் புரிந்து கொண்டுள்ளது.இதன் அடிப்படையில் தான் கூட்டமைப்பை வைத்து பேச்சுக்களை தொடங்கியுள்ளது.

அமெரிக்காவில் நடைபெறவுள்ள சந்திப்புகளில் அமெரிக்கா எதனை எதிர்பார்க்கிறது, எதனைப் பற்றிப் பேசப் போகிறது என்பதெல்லாம் தெரிய வரவில்லை.

ஆரம்பத்தில் அரசியல் தீர்வு தொடர்பாகப் பேசப்படும் என்ற தகவல் வெளியானது.அரசியல்தீர்வு தொடர்பாக அமெரிக்கா பேசப் போகின்ற விடயம் என்றால் அது நிச்சயம், ஏதோ ஒரு வரைபை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்க வேண்டும்.

இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல்தீர்வு தொடர்பாக பேச்சுக்களை நடத்திக் கொண்டிருக்கிறது.

ஏற்கனவே, இந்தப் பேச்சுக்களில் முன்னேற்றம் காணப்படவில்லை என்று கூட்டமைப்பு ஒதுங்கிக் கொண்டபோது, பேச்சுக்களை மீளத் தொடங்குமாறு கடும் அழுத்தங்களைக் கொடுத்த சக்திகளில் அமெரிக்காவும் ஒன்று.

ஒரு பக்கத்தில் அரசியல்தீர்வு பற்றிய கலந்துரையாடல்கள் நடைபெறும் சூழலில், அதுபற்றி விவாதங்கள் எழுகின்ற சூழலில் இந்த அமெரிக்கப் பயணம் நடக்கப் போவது பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இன்னொரு பக்கத்தில் சர்வதேச அரங்கில் இலங்கை அரசு கடும் அழுத்தங்களுக்கு முகம் கொடுத்துள்ளது.

போர்க்குற்றச்சாட்டுகளை முன்வைத்து இலங்கை அரசுக்கு எதிரான நகர்வுகளை மேற்குநாடுகள் மேற்கொண்டு வரும் நிலையில், அதனை முறியடிக்கும் வியூகங்களை இலங்கை அரசு செய்து கொண்டிருக்கிறது.

இலங்கை அரசு நம்பகமான போர்க்குற்ற விசாரணைகளை நடத்த வேண்டும் அல்லது சுதந்திரமான விசாரணைகளை நடத்த இணங்க வேண்டும் என்று அமெரிக்கா கடுந்தொனியில் வலியுறுத்தி வருகிறது.

கடந்தவாரம் கூட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மார்க் ரோனர் இந்தக் கருத்தை வெளியிட்டிருந்தார்.

வெளிப்படையான, நம்பகமான விசாரணைகளை நடத்த இலங்கை அரசு தவறினால், சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றுக்குள் செல்வது தவிர்க்க முடியாததாகி விடும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.

எதிர்வரும் நவம்பர் 15ம் திகதி வரப் போகும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை மீது தமக்கு நம்பிக்கையில்லை என்று ஏற்கனவே அமெரிக்கா கூறியிருந்தாலும், இப்போது அந்த அறிக்கையை எதிர்பார்த்திருப்பதாக கூறி வருகிறது.

இந்த அறிக்கை போதுமானதா என்பதை பொறுத்தே அமெரிக்காவின் அடுத்த நகர்வு அமையும்.

நல்லிணக்க ஆணைக்குழு மூலம் நம்பகமான அறிக்கை ஒன்றைப் பெறுவதற்கான அமெரிக்காவின் இன்னொரு முயற்சியாகக் கூட, தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கொண்டுள்ள உறவுகளைக் காட்டி இலங்கை அரசைப் பணிய வைக்கின்ற முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளதா என்றும் சிந்திக்க வேண்டியுள்ளது.

எவ்வாறாயினும் அமெரிக்காவின அண்மைய நகர்வுகள் இலங்கை அரசுக்கு சார்பானதொன்றாகத் தெரியவில்லை. அத்துடன் இலங்கை விவகாரத்தில் தனியான கவனத்தை செலுத்தத் தொடங்கியுள்ளது அமெரிக்கா.

அதற்கு மற்றுமொரு காரணம் ரொபட் ஓ பிளேக் என்று கருதப்படுகிறது.இவர் போரின் இறுதிக்கட்டத்தில் கொழும்பில் தூதுவராகப் பணியாற்றியவர். போரின் போது என்ன நடந்து என்பது குறித்தும், அதன் பின்னணிகள் குறித்தும் நன்றாக விபரம் அறிந்தவர்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு ஒன்றைக் காணுதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே பிளேக்கின் நகர்வுகள் அமைகின்றன.

இந்தநிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான அழைப்பு அமெரிக்காவுடன் நெருக்கமான தனிப்பட்ட உறவுக்கு களமாகுமா அல்லது அரசாங்கத்தை மிரட்டுவதற்கான நகர்வா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

எந்த நோக்கத்துடன் அமெரிக்கா அழைத்திருந்தாலும் இது தமிழர் தரப்புக்கான முக்கியமான அங்கீகாரமாகவே பேசப்படுகிறது.

இந்த அங்கீகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுமா என்ற சந்தேகத்தை ஒரு தரப்பினர் எழுப்பாமல் இல்லை.

குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போர்க்குற்ற விவகாரத்தைக் கைகழுவி விடுமா என்ற அச்சம் பலரிடமும் உள்ளது.

அதாவது அரசியல்தீர்வு ஒன்றுக்கு பரிகாரமாக- பிரதியீடாக போர்க்குற்றச்சாட்டுகள் கைகழுவி விடப்பட்டு விடுமோ என்று பலரும் கருதுகின்றனர்.

அவ்வாறானதொரு சூழல் ஏற்பட்டால், அது சில வேளைகளில் தவிர்க்க முடியாத ஒரு இராஜதந்திர நகர்வாகவும் அமையலாம்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வரப்போகின்ற சூழலில், தமிழர் தரப்பின் எதிர்பார்ப்பு என்ன என்பதை நாடி பிடிப்பதில் தான் அமெரிக்கா ஈடுபடப் போகிறது.

போர்க்குற்ற விசாரணைகளுக்குப் பதிலீடாக அரசியல் தீர்வுக்கான உறுதிப்பாட்டைப் பெற்றுக் கொடுக்கஅமெரிக்கா முனையலாம்.

ஆனால் போர்க்குற்ற விசாரணைக்கான அழுத்தங்களை கைவிட்டு விடக் கூடாது என்று சில தமிழர் அமைப்புகள் வலியுறுத்துகின்றன.

போர்க்குற்றச்சாட்டுகள் மற்றும் அரசியல் தீர்வு சார்ந்த நகர்வுகள் அனைத்துலக அளவில் முனைப்படைந்துள்ள சூழலில் அமெரிக்கா எடுக்கப் போகும் முடிவும், அது வகிக்கப் போகும் பாத்திரமும் முக்கியமான இடத்தைப் பெறக் கூடும்.

அதற்கான முதற்படியாக அல்லது களமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்அமெரிக்கப் பயணம் அமையப் போகிறது.

ஒருவகையில் இது கூட்டமைப்புக்கான ஒரு இராஜதந்திரப் பரீட்சையாகவும் அமையலாம்.

கத்தி மேல் நடக்க வேண்டிய இந்தப் பயணத்தில் கூட்டமைப்பு எவ்வாறு நடந்து கொள்ளப் போகிறது? பொறுத்திருந்து பார்க்கலாம்.
http://www.tamilmirr...9-19-20-53.html 

No comments:

Post a Comment