Translate

Monday, 12 March 2012

ஜெனிவாவில் அமெரிக்கா முன்வைத்த தீர்மானத்திற்கு எதிராக களமிறங்கும் சீனா!


ஜெனிவாவில் அமெரிக்கா முன்வைத்த தீர்மானத்திற்கு எதிராக களமிறங்கும் சீனா!


ஜெனிவாவில் தமக்கு இக்கட்டானதொரு நிலைமை வரப்போகின்றது என்பதை உள்ளூர அறிந்து வைத்துள்ள இலங்கை அரசு, சீனாவிடம் மண்டியிட்டு விடுத்த அவசர வேண்டு கோளையடுத்தே இவ்வாறு இலங்கைக்கு ஆதரவான பிரேரணை ஒன்றை சீனா தாக்கல் செய்வதற்கு ஆலோசித்து வருகின்றது எனவும் அந்த வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை நிறைவேற்றிக் கொள்வதற்கு அமெரிக்கா தீவிரமாக செயற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையில், இலங்கைக்கு ஆதரவான பிரேரணையொன்றை சீனா முன் வைத்து அதை நிறைவேற்றுவதற்காக அவசர மந்திராலோசனைகளை நடத்திவருகிறது என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா தாக்கல் செய்துள்ள பிரேரணை எதிர்வரும் 22 ஆம் அல்லது 23 ஆம் திகதிகளில் வாக்கெடுப்புக்கு விடப்படலாம் என்பதால் அதற்கு முன்னர் இந்தப் பிரேரணையைக் கொண்டுவந்து இலங்கைக்கு ஆதரவைத் தேடிக்கொடுக்கும் முயற்சியிலேயே சீனா இறங்கும் எனக் கூறப்படுகின்றது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடொன்று சபை அமர்வில் பிரேரணை ஒன்றைத் தாக்கல் செய்ய வேண்டுமாயின் மாநாடு நிறைவடைவதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னரே அறிவிக்க வேண்டும். அந்த அடிப்படையில் எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு முன்னரே இலங்கைக்குச் சார்பான பிரேரணையை சபையில் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உள்நாட்டு போரின் பின்னர் இலங்கை அரசு முன்னெடுத்துவரும் நல்லிணக்க செயற்பாடுகள், மனித உரிமைகள் மேம்பாட்டுத்திட்டம் உள்ளிட்ட கொழும்பு அரசுக்குச் சார்பான பல விடயங்களை பீஜிங் அந்தப் பிரேரணையில் முன்வைப்பதற்கு ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. அதேவேளை, ஐ.நா.மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையைக் கடந்த புதன்கிழமை அமெரிக்கா சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment