Translate

Wednesday 18 July 2012

முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுமானால் கிழக்கில் அரசின் செல்வாக்கு உலகிற்கு தெரியவரும் சுமந்திரன் எம். பி

கிழக்கில் முதுகெலும்புள்ள ஒருவர் முதலமைச்சராக இருந்தால் கிழக்கு மாகாணசபை அதன் பதவிக் காலத்திற்கு முன் கலைக்கப்பட்டிருக்க மாட்டாது. சர்வதேசத்தில் இருந்து வரும் அழுத்தத்தை சமாளிப்பதற்கும், உலகை ஏமாற்றுவதற்குமே ஜனாதிபதியும், அரசும் கிழக்குத் தேர்தலை திட்டமிட்டு நடத்துகின்றனர். கிழக்கு மாகாணத்தில் அரசுக்கே பெருமளவு மக்களின் ஆதரவு உள்ளது என்று எடுத்துக்காட்டவே அரசு கிழக்குத் தேர்தலை அவசர அவசரமாக நடத்துகின்றது.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.


கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக கல்முனைப் பிரதேச மக்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:<<
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் 13 ஆவது அரசியல் திருத்த சட்டத்தை ஏற்றுக்கொண்டதாக அர்த்தம் இல்லை. அன்றும்சரி, இன்றும் சரி 13 ஆவது திருத்தத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளவில்லை. இலங்கை அரசு ஜனநாயகத்திற்குச் செய்திருக்கின்ற குந்தகங்களை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக் காட்டவே கிழக்குத் தேர்தலில் போட்டியிடுகின்றோம்.
தமது விருப்பத்திற்கேற்ப மாகாண சபையைக் கலைக்கின்ற அதிகாரத்தை மத்திய அரசிடமோ அல்லது ஜனாதிபதியிடமோ அல்லது ஆளுநரிடமோ கொடுக்கக்கூடாது. அவ்வாறு அதிகாரம் கொடுக்கப்படுமாயின் அதிகாரத்தைப் பரவலாக்குவதில் அது சிக்கலை விளைவிக்கும்.

கிழக்கு மாகாண சபை கலைக்கப்படக்கூடாது என ஏப்ரல் 24 ஆம் திகதி சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதனையும் மீறி இச்சபை சட்டத்திற்கு முரணான வகையிலே கலைக்கப்பட்டுள்ளது. 
இந்த மாகாண சபைக் கலைப்பிற்கும், ஜனாதிபதிக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது எனக் கூறப்படுகின்றது. நிலைமை அவ்வாறு இருக்க, ஒரே நேரத்தில் மூன்று மாகாண சபையின் ஆளுநர்களுக்கும், முதலமைச்சர்களுக்கும் ஒரே சிந்தனை வந்திருக்கின்றது என்றால் இது ஆச்சரியம் தரக்கூடிய விந்தையான நிகழ்வாகும்.

உண்மையான முதுகெலும்புள்ள ஒருவர் முதலமைச்சராக இருந்திருந்தால் கிழக்கு மாகாண சபையை கலைத்திருக்க முடியாது. அரசின் அரசியல் சதுரங்க விளையாட்டில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முக்கியமாக இருக்கின்றது.

இத்தேர்தலில் முஸ்லிம் மக்களுடைய பங்கு மிக முக்கியமானதாகும். இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசோடு சேர்ந்து போட்டியிடுவதென முஸ்லிம் மக்களுடைய விருப்பத்திற்கு எதிரான ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளது கவலையளிக்கின்றது.

இந்நாட்டிலே வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்களை இவ் அரசு எவ்விதமாக ஆளுகை செய்கின்றது என்பது மக்களுக்குத் தெரியும். முஸ்லிம் காங்கிரஸ் அரசோடு சேர்ந்து போட்டியிடுவதென எடுத்த தீர்மானத்தை அடுத்து அக்கட்சிக்குள்ளும் வாதப்பிரதிவாதங்கள் இடம் பெற்றுவருவதாக அறிய முடிகின்றது.

முஸ்லிம் மக்களுடைய தனிப் பெரும் கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருக்கவேண்டும் என்பதே எமது விருப்பமாகும். இன்று ஒரு பத்திரிகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடையப்போவதாக ஆரூடம் கூறப்பட்டுள்ளது. எக்காலத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடையாது. அது தமிழ் மக்களின் தனிப்பெரும் கட்சியாகவே இருக்கும்.

கிழக்குத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டிருந்தால் கிழக்கில் அரசுக்கு எவ்வளவு வாக்கு உள்ளது என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டியிருக்கலாம். இப்போதும் ஒன்றும் நடந்துவிடவில்லை இயன்றளவு கிழக்கின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முஸ்லிம்களையும் சரியாகப் பயன்படுத்தினால், முயற்சி செய்தால் அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்றார்.

No comments:

Post a Comment