Translate

Friday 16 December 2011

தமிழர் பிரச்சினைக்கு அதிகார பகிர்வு அவசியம் - நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரை


இலங்கைப் போரின் இறுதி கட்டத்தில் இலங்கை இராணுவம் பொதுமக்கள் தரப்பில் உயிர் இழப்பை தவிர்க்க தம்மால் முடிந்த அனைத்தையும் செய்ததாக இலங்கைப் போரின் இறுதிக் கட்ட நிகழ்வுகள் குறித்து ஆராய்ந்த, இலங்கை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட, படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு கூறியுள்ளது.

இந்த ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் வெள்ளியன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


பொதுமக்கள் பலி

இருந்த போதிலும், மிகவும் முக்கியமாக இந்த இறுதிப் போரின் போது கணிசமான அளவு பொதுமக்கள் இழப்பு ஏற்பட்டதை இந்த அறிக்கை ஒப்புக்கொண்டுள்ளது.

அப்பாவி மக்களை பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மீட்பதற்கான மனிதாபிமான நடவடிக்கையாக இலங்கை அரசாங்கத்தால் விபரிக்கப்பட்டுவந்த இந்தப் போரில், கணிசமான பொதுமக்கள் இழப்பு ஏற்பட்டதை இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட ஒரு ஆணைக்குழு ஒப்புக்கொள்வது இதுதான் முதற்தடவையாகும்.

அத்துடன் விடுதலைப் புலிகள்தான் மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தியதாகவும் ஆணைக்குழுவின் அறிக்கை தெரிவிக்கின்றது.

அதே நேரம் இராணுவம் பொதுமக்கள் இருந்த பகுதிகள் மீது ஷெல் தாக்குதல்களை நடத்தியதாகக் கூறப்படும் குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும், போரின் இறுதி கட்டத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகள் அதன் பிறகு காணமல் போனதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

போர்க் குற்றம் குறித்து சர்வதேச அளவில் அழுத்தங்கள் அதிகமானதை அடுத்தே கடந்த ஆண்டு இலங்கை அரசு இந்த விசாரணைக் குழுவை அமைத்தது.

முன்னணி சட்ட நிபுணரான சி ஆர். டி சில்வா தலைமையிலான இக் குழுவினர் நாடு முழுவதும் பல அமர்வுகளை நடத்தி மக்களிடம் நேரடியாக விபரங்களைக் கேட்டறிந்தனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலர் இந்த ஆணைக்குழு முன்பாக சாட்சியங்களை வழங்கியிருந்தனர்.

இருந்தும் இந்த ஆணைக்குழுவின் அதிகார வரம்பு மற்றும் இதன் பயன் குறித்து எழுந்த ஐயப்பாடுகள் காரணமாக அம்னெஸ்ட்டி இன்டர்நேஷனல், ஹுமன் ரைட்ஸ் வாட்ச் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புக்கள் இந்த ஆணைக்குழுவின் அமர்வில் பங்கு கொள்ள மறுத்துவிட்டன.

இலங்கை அரசாங்கத்தின் இராணுவ யுக்திகள் மிகவும் கவனமாக திட்டமிடப்பட்டிருந்ததாகவும், அதில் பொதுமக்களின் பாதுகாப்புக்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்ததால், பொதுமக்கள் இழப்பை தவிர்ப்பது அல்லது குறைப்பதை அந்த யுக்திகள் மையமாகக் கொண்டிருந்ததாகவும் ஆணைக்குழுவின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

பொதுமக்கள் இழப்பை தவிர்ப்பதற்காக இலங்கை இராணுவத்தின் நடவடிக்கைகள் வேண்டுமென்றே மிகவும் தாமதப்படுத்தப்பட்டதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

எப்படியிருந்த போதிலும் சில தருணங்களில் பலப்பிரயோகம் அளவுக்கு அதிகமாக இருந்ததாகவும், அவை குறித்து மேலதிக புலன் விசாரணைகள் தேவை என்றும் அந்த ஆணைக்குழு கூறியுள்ளது.

அளவுக்கு அதிகமான தாக்குதல்

அதாவது விடுதலைப்புலிகள் பொதுமக்கள் மத்தியில் இருந்து தாக்குதல் நடத்திய காரணத்தால், அதற்கான இலங்கை இராணுவத்தின் பதில் தாக்குதல்கள் சில வேளைகளில் அளவுக்கு அதிகமாக இருந்திருக்கலாம் என்றும், அவை குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அது கூறுகின்றது. அந்தத் தாக்குதல்கள் தேவைக்கு அளவானதாக இருந்ததா என்பது குறித்து ஆராயப்பட வேண்டும் என்றும் அது கூறுகிறது.

இந்த விடயத்தில் இராணுவத்தின் பொதுவான நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக, குற்றங்காணப்படும் இலங்கை இராணுவச் சிப்பாய்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அது பரிந்துரைத்துள்ளது. அதேவேளை பாதிக்கப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு உரிய நட்ட ஈடு வழங்கப்பபட வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.

மருத்துவமனை மீதான தாக்குதல்
போர் வேளையில் மருத்துவமனைகள் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய விவகாரம் குறித்து தனது கருதத்தைக் கூறியுள்ள நல்லிணக்க ஆணைக்குழு, மருத்துவமனைகள் மீது எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்ற போதிலும், அந்தத் தாக்குதலை யார் நடத்தினார்கள் என்று முடிவுக்கு வருவது கடினம் என்று கூறியுள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பு உறுப்பினர் ஒருவரின் சாட்சியின்படி, விடுதலைப்புலிகள் புதுமாத்தளன் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்திவிட்டு அதற்கான மன்னிப்பு கோரியதாகவும் ஆணைக்குழு ஒரு சம்பவத்தை சுட்டிக் காட்டியுள்ளது.

போர்ச் சட்டங்களில் மாற்றம் தேவை

சர்வதேச போர்ச் சட்டங்கள் குறித்து தனது பரிந்துரையில் குறிப்பிட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழு, தற்போதைய சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள், அரசாங்கங்களுக்கும், அரசாங்கம் அல்லாத போராட்டக் குழுக்களுக்கும் இடையிலான போர்களுக்கு உகந்த வகையில் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. அரசாங்கம் அல்லாத குழுக்கள் எந்த விதமான விதிகளையும் பின்பற்றாத காரணத்தால், அதற்கேற்றவாறு சர்வதேச சட்டங்களை மாற்றுவது தொடர்பில் சர்வதேச சமூகம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.

மருந்துப் பற்றாக்குறை

பொதுமக்கள் தஞ்சமடைவதற்காக அறிவிக்கப்பட்ட தாக்குதல் சூனியப் பிரதேசங்களில் போதுமான மருந்து மற்றும் உணவுப்பொருட்களின் விநியோகம் இருக்கவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து கருத்துக் கூறியுள்ள ஆணைக்குழு, அரசாங்கம் போதுமான விநியோகத்தை அங்கு அனுப்பிய போதிலும், அவற்றில் ஒரு பகுதியை விடுதலைப்புலிகள் பறித்துக்கொண்டு விட்டதாக கூறியுள்ளது. இருந்த போதிலும், அங்கு மருந்துப்பொருட்களின் விநியோகம் போதுமானதாக இல்லை என்று அது ஒப்புக்கொண்டுள்ளது.

காணாமல் போனவர்களுக்கான சிறப்பு ஆணைக்குழு

அரசாங்கப் படைகள் நல்ல முன்னுதாரண அடிப்படையில் செயற்பட்ட போதிலும், அங்கு பெருமளவிலான காணமல்போதல்கள், கடத்தப்படுதல் மற்றும் சட்ட விரோத தடுத்து வைப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இவை குறித்து விசாரிக்க காணாமல்போனவர்களுக்கான ஒரு சிறப்பு ஆணைக்குழு அமைக்கப்ப்பட்டு, சூத்திரதாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அது கூறியுள்ளது. இந்த விவகாரங்கள் தொடர்பில் சாட்சியமளித்த சிலர் ஈ பி டி பி, கருணா குழு, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் ஆகிய அமைப்புக்கள் மீது ஆட்கள் கடத்தப்பட்டமை குறித்து புகார் செய்துள்ளதாகவும். ஆனால், அந்த அமைப்புக்கள் அவற்றை மறுத்துள்ளதாகவும் கூறியுள்ள ஆணைக்குழுவின் அறிக்கை, சட்ட விரோத ஆயுதக்குழுக்கள் குறித்த மேலதிக விசாரணைகள் தேவை என்றும் குறிப்பிட்டுள்ளது.

காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றும், பயங்கரவதாத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்றங்களில் குற்றஞ்சுமத்தப்படாமல், பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் விவகாரங்களை ஆராய சுயாதீன ஆலோசனைக்குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என்றும் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

பிரிட்டனின் சானல் 4 தொலைக்காட்சியால் வெளியிடப்பட்ட இலங்கையின் கொலைக்களம் விவரணப்படத்தின் நம்பகத்தன்மை குறித்து ஆணைக்குழு கேள்வி எழுப்பியுள்ளது.

இராணுவ தலையீடு

வடமாகாணத்தில் சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் இராணுவம் தலையீடு செய்வதாக அடிக்கடி வரும் குற்றச்சாட்டுக்கள் குறித்து கருத்துக் கூறியுள்ள ஆணைக்குழு, சிவில் நடவடிக்கைகளில் இராணுவத் தலையீடு இல்லாது செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

அதிகாரப் பகிர்வு தேவை

தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் தற்போதைய ´´வன்செயல்கள், சந்தேகங்கள், தாம் பாரபட்சமாக நடத்தப்படுவதான உணர்வு´´ ஆகியவற்றை நீக்க, மக்களை மையமாகக் கொண்ட அதிகாரப் பகிர்வு முறைமை ஒன்று கொண்டுவரப்பட்டு, அதன் மூலம் உள்ளுராட்சி சபைகள் பலப்படுத்தப்படுவதுடன், தற்போதைய மாகாண சபைகள் முறை திருத்தப்பட்டு, மத்தியில் அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

வெளியுலகுக்கு வெளிப்படையாகத் தெரியும் வகையில் அதிகாரங்கள் பரவலாக்கப்படுதலில் முன்னேற்றம் காணப்பட வேண்டும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment