Translate

Wednesday 23 May 2012

கோதாவின் போர் நூலிலிருந்து ஒரு குறிப்பு

essay தமிழர்கள் வசிக்கும் மாகாணங்களுக்குப் பொலிஸ் அதிகாரம் வழங்குவது மிகப்பெரிய அச்சுறுத்தலாக முடியும் என்று கோத்தபாய கூறுவதை 100% ஏற்பதாக அலோக் பிரசாத் வெளிப்படையாக அறிவித்தார்.

""கருணாநிதிதான் தங்களைக் காக்கக்கூடிய ஒரே தலைவர்'' (ஹீரோ) என்று விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தயாரித்த அறிக்கை கருணாநிதியை அடைவதற்கு முன்னால், இலங்கை அரசின் போர்ச் சலுகை அறிவிப்பு கருணாநிதியை எட்டுமாறு பார்த்துக் கொள்ளப்பட்டது.
 


2008 ஒக்ரோபர் மாதத்தில்தான் இராணுவ ரீதியாகவே புலிகளை ஒடுக்கிவிட முடியும் என்ற நம்பிக்கை இந்திய அரசியல் தலைவர்களுக்கு ஏற்பட்டது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சாமர்த்தியமாக இந்திய அரசை சேர்த்தது எப்படி என்பதையும், இந்திய அரசியல் தலைவர்களுக்கு அதில் முக்கிய பங்கு இல்லாமல் தவிர்த்தது எப்படி என்பதையும் புதிய புத்தகம் ஒன்று விவரிக்கிறது.
 
விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு போர் நடத்தி அதில் வெற்றியும் பெற்ற 3ஆவது ஆண்டு தினத்தையொட்டி இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டிருக்கின்றது. சி.ஏ. சந்திரபிரேம என்ற பத்திரிகையாளர் எழுதிய இந்த நூலுக்கு "கோதாவின் போர்'' என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது.
 
இலங்கையின் பாதுகாப்புச் செயலராக இருக்கும் கோத்தபாய ராஜபக்ஷதான் "கோதா'' என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறார். இவர் மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர். 
இரு நாடுகளின் அரசியல் தலைவர்களைச் சேர்க்காமல் அரசு அதிகாரிகள் நிலையில் இரு நாடுகளிலும் ஒருங்கிணைப்புக் குழுக்களை அமைத்து தங்களுக்குள்ளேயே பேசி முடிவெடுத்து ஒருங்கிணைத்தால் விடுதலைப் புலிகளை ஒடுக்கிவிடலாம் என்று கோத்தபாய திட்டமிட்டுச் செயல்பட்டதையும், அதற்கு இந்திய அரசின் மூத்த அதிகாரிகள் ஒத்துழைத்ததையும் நூல் விவரிக்கிறது.
 
அரசியல் தலைவர்களின் குறுக்கீடு இருக்கக்கூடாது என்பதை இலங்கைக்கான இந்தியத் தூதர் அலோக் பிரசாத் என்பவரும் ஏற்றுச் செயல்பட்டிருக்கிறார். 2005 டிசம்பரில் இலங்கை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உடனே மஹிந்த ராஜபக்ச, இந்தியா சென்றபோது அவருடைய பயணத்தின் நோக்கம் அரசியல் குறுக்கீடுகளால் தடைப்பட்டது. 
 
எனவேதான் அரசியல் குறுக்கீடுகளைத் தவிர்க்கும் உத்தி வகுக்கப்பட்டது. 2006 மே 15ஆம் திகதி இலங்கை இராணுவச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ இந்தியாவுக்குச் சென்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளியுறவுத்துறை செயலர் சிவசங்கர் மேனன், இராணுவச் செயலர் விஜய்சிங் ஆகியோரையும் இந்திய இராணுவத்தின் முப்படைத் தளபதிகளையும் சந்தித்துப்பேசினார். ஆனால் இந்தச் சந்திப்பும் தோல்வியில்தான் முடிந்தது.
 
13ஆவது திருத்தம்
 
ராஜீவ் ஜெயவர்த்தன உடன்பாட்டின்படி இலங்கை அரசியல் சட்டத்துக்குக் கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தத்தின்படி தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்பட்டால்தான் இலங்கை அரசுடன் ஒத்துழைக்க முடியும் என்று நாராயணன் கண்டிப்பாகக் கூறிவிட்டார். எனவே தோல்வி ஏற்பட்டது.
 
கோத்தபாய இதனால் மனம் தளரவில்லை. இரு நாடுகளின் முக்கிய அதிகாரிகளைக் கொண்ட உயர்நிலைக் குழுவை அமைத்துப் பரஸ்பரம் ஒத்துழைக்கலாம் என்று ஆலோசனை தெரிவித்தார். அரசியல்வாதிகளின் கவனத்துக்கு வராமலே நாம் செயலாற்ற வேண்டும் என்றார். அது ஏற்கப்பட்டது.
 
தேசியப் பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவுத்துறை செயலர், இராணுவச் செயலர் ஆகியோர் இந்தியத் தரப்பிலும் இலங்கை ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் பாஸில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் இலங்கை தரப்பிலும் இந்தக் குழுக்களில் இடம் பெற்றனர்.
 
இந்தியக் கடற்படை 
செய்த உதவி
 
இந்தக் குழுக்கள் நியமிக்கப்பட்ட பின்னர் இரு நாடுகளுக்கும் இடையில் பிரச்சினைகள் ஏற்படவில்லை. இராணுவ ஒத்துழைப்பு அதிலும் குறிப்பாக இலங்கைக் கடல் எல்லைக்கும் அப்பால் கண்காணித்துக் காவல் காக்கும் பொறுப்பை இந்தியக் கடற்படை ஏற்றது. இதனால் விடுதலைப் புலிகளுக்கு உதவிகள் வராமல் நிறுத்த முடிந்தது.
 
தமிழர் பகுதிகளுக்கு அதிகாரங்கள் தரப்பட வேண்டும் என்று சிவசங்கர் மேனன் தொடர்ந்து வற்புறுத்தினார். மாகாணங்களுக்குப் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று எம்.கே. நாராயணன் வலியுறுத்தினார். அதே சமயம் இலங்கை இனப் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு ஏதும் இல்லை என்று இந்திய அரசு தரப்பில் தொடர்ந்து அறிக்கைகள் வெளியிடப்பட்டன.
 
இந்திய நிலையில் மாற்றம்
 
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை இராணுவம் வெற்றி பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டதும், 2008 பெப்ரவரி மாத நடுப்பகுதியில் இந்திய அரசின் நிலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. தமிழர்கள் வசிக்கும் மாகாணங்களுக்குப் பொலிஸ் அதிகாரம் வழங்குவது மிகப்பெரிய அச்சுறுத்தலாக முடியும் என்று கோத்தபாய கூறுவதை 100% ஏற்பதாக அலோக் பிரசாத் வெளிப்படையாக அறிவித்தார்.
 
வன்னிப் பகுதியில் இலங்கை இராணுவத்துக்குக் கிடைத்திருக்கும் வெற்றி மிகவும் சிறப்பானது, இதனால் விடுதலைப் புலிகளின் முதுகெலும்பு முறிந்திருக்கும் என்று சிவசங்கர் மேனன், கோத்தபாயவிடம் தெரிவித்தார்.
 
ஆனால் கோத்தபாயவோ அந்தக் கருத்தை ஏற்காமல், கிளிநொச்சியில் புலிகள் இன்னமும் வலுவுடன் இருப்பதாலும் வெளிநாடுகளிலிருந்து அவர்களுக்கு ஆதரவு கிடைத்துக் கொண்டே வருவதாலும் இந்த வெற்றி போதாது என்று பதில் அளித்தார்.
 
2008 ஒக்ரோபர் மாதத்தில்தான் இராணுவ ரீதியாகவே புலிகளை ஒடுக்கிவிட முடியும் என்ற நம்பிக்கை இந்திய "அரசியல் தலைவர்களுக்கு'' ஏற்பட்டது. இலங்கைப் பிரச்சினையைப் பேசித் தீர்க்க வேண்டும், சமரசத் தீர்வு காண வேண்டும் என்ற வழக்கமான பல்லவிகளைக்கூட அவர்கள் பொது மேடைகளில் பேசுவதை நிறுத்திவிட்டார்கள்.
 
2008 ஒக்ரோபர் 18இல்தான் இந்தியத் தரப்பில் கடைசியாக, விடுதலைப் புலிகள் பிரச்சினையைத் தீர்க்க இராணுவத் தீர்வு இல்லை என்று கூறினார்கள். 2008 ஒக்ரோபர் 26இல் வெளியிட்ட இந்திய இலங்கை கூட்டறிக்கையிலோ பயங்கரவாதத்தை உறுதியுடன் முறியடிக்க வேண்டும் என்று அறிவித்தார்கள். அப்போதுதான் பஸில் ராஜபக்ஷ புதுடில்லிக்குச் சென்று இந்தியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
 
மக்களவைத் தேர்தலால் அழுத்தம்
 
2009 மக்களவைப் பொதுத் தேர்தல் காரணமாக தமிழ்நாட்டிலிருந்து அரசியல் தலைவர்களால் இலேசாக அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது. இதை புதுடில்லியும் கொழும்புக்கு உணர்த்தியது. கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் தமிழர்கள் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டது.
 
அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி 2009 ஜனவரி 27இல் கொழும்புக்கு வந்து, "தாற்காலிகமாகப் போரை நிறுத்த முடியுமா? பொதுமக்கள் போரில் கொல்லப்படாமல் தப்பிக்க பாதுகாப்பான இடத்தை இலங்கை அரசு ஒதுக்க முடியுமா?'' என்று கேட்டார். இதை ஏற்ற இலங்கை அரசு அவ்வாறே சில நடவடிக்கைகளை எடுத்தது.
 
மக்களவைத் தேர்தல் நெருங்க நெருங்க, "விடுதலைப்புலிகளின் இறுதிக்காலம் வந்துவிட்டது'' என்று புரிந்துகொண்ட தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி, சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துவிட்டு சென்னைக் கடற்கரையில் அண்ணா சமாதி அருகில் ஏப்ரல் 27ஆம் திகதி உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தார்.
 
எம்.கே. நாராயணனும் சிவசங்கர் மேனனும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை உடனே தொடர்புகொண்டனர். இந்திய அரசுக்கு இப்போது நான் எப்படி உதவ வேண்டும் என்று ராஜபக்ஷ கேட்டார். கனரக ஆயுதங்களைப் போரில் ஈடுபடுத்தாதீர்கள், விமானங்கள், உலங்குவானூர்திகள் மூலம் குண்டுவீசியோ, பீரங்கிகளால் சுட்டோ தமிழர்களைக் கொல்லாதீர்கள் என்று கேட்டுக்கொண்டனர். அந்தக் கோரிக்கைகள் ஏற்கப்பட்டன.
 
பிரபாகரன் அறிக்கைக்கு முன்னால்...
""கருணாநிதிதான் தங்களைக் காக்கக்கூடிய ஒரே தலைவர்'' (ஹீரோ) என்று விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தயாரித்த அறிக்கை கருணாநிதியை அடைவதற்கு முன்னால், இலங்கை அரசின் போர்ச் சலுகை அறிவிப்பு கருணாநிதியை எட்டுமாறு பார்த்துக் கொள்ளப்பட்டது.
 
இதற்கு இலங்கை அரசின் "தமிழகத் தொடர்புகள்'' பயன்படுத்தப்பட்டன. கருணாநிதியும் தன்னுடைய உண்ணாவிரதத்தைக் கைவிட்டார், புதுடில்லியும் கொழும்பின் மீது கடுமையான நடவடிக்கை ஏதும் எடுக்க வேண்டிய அவசியமில்லாமல் போனது.
பிரபாகரனே தன்னை ஹீரோ என்று பாராட்டிய அறிக்கை கருணாநிதிக்குக் கிடைத்திருந்தால் அவர் மேலும் தீவிரமாக இந்தப் பிரச்னையில் ஈடுபட்டுவிடுவார் என்று இலங்கை அரசு அஞ்சியது. அப்படி நேராமல் அது தடுத்துவிட்டது.
 
மற்றவர்களால் சாத்தியமே இல்லை என்று கருதப்பட்ட செயல்களை இருதரப்பிலும் ஏற்படுத்தப்பட்ட உயர் அதிகாரிகளைக் கொண்ட குழுக்கள் சாதித்துவிட்டன என்று கோத்தபாயவின் புகழைப் பாடும் இந்தப் புத்தகம் தெரிவிக்கிறது.
இருதரப்பு உயர் அதிகாரிகளின் கடைசிக் கூட்டம் புதுடில்லியில் 2010 ஓகஸ்ட் 26ஆம் திகதி நடைபெற்றது என்ற குறிப்பும் நூலில் உள்ளது.


No comments:

Post a Comment