அண்மையில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸில் கூட்டத்தொடரில் இலங்கை பற்றி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை எதுவும் குறிப்பிட்டுக் கூறவில்லை. இருப்பினும் இனி  பிரச்சினை இல்லை என்ற திருப்தியுடன் நாடு இருக்க முடியாது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இந்தமுறை கனடா மாத்திரமே இலங்கை பற்றி சிறிது குறிப்பிட்டுக் கூறியதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணரட்ன அமுனுகம தெரிவித்துள்ளார். ஆனாலும் ஒவ்வொரு நாடுகளினாலும் முன்வைக்கப்படும் அறிக்கைகளை இலங்கை தொடர்ந்து அவதானித்து வருவதாகவும் அவர் கூறினார்.

‘உயர்ஸ்தானிகர் எதனையும் குறிப்பிட்டுக் கூறவில்லை என்பதால் இலங்கையை சர்வதேச சமூகம் மறந்துவிட்டது அல்லது கைவிட்டுவிட்டது எனக் கருதக் கூடாது.  நாங்கள் எச்சரிக்கையுடன் இருக்கின்றோம்’ எனவும் அவர் கூறினார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு நவநீதம்பிள்ளைக்கு 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் விடுத்த அழைப்பு இன்னமும் வலுவுள்ளதாக இருப்பதாகவும்; அவர் கூறினார். அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது.  இந்தத் தீர்மானத்தின்படி இலங்கை தொடர்பான தனது அறிக்கையை உயர்ஸ்தானிகர் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறும் கூட்டத்தொடரில் சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, ஜெனீவாவில் உள்ள இலங்கை தூதுக்குழு,  இந்த கூட்டத்தொடரை பயன்படுத்தி இலங்கையில் கல்வித்துறையை அபிவிருத்தி செய்ய என மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் பற்றி பல்வேறு நாடுகளுக்கு விளக்கியுள்ளது.