Translate

Thursday 28 June 2012

உலகின் இரண்டாவது பலஸ்தீனமாக இலங்கையின் வடபகுதி!


இந்தியாவின் தேவைக்காகவே வடபகுதி தமிழ் மக்களின் காணிகளை அரசாங்கம் பலாத்காரமாக சுவீகரிக்கின்றது என குற்றம்சாட்டும் நவசமசமாஜக் கட்சி, உலகின் இரண்டாவது பாலஸ்தீனமாக வடபகுதி உருவாகியுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பாக நவசமசமாஜக் கட்சியின் தலைவரும், தெஹிவளை, கல்கிஸை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன மேலும் தெரிவிக்கையில்,
தமது சொந்த மண்ணில் வாழ்ந்த தமிழ் மக்களை வெளியேற்றி அக் காணிகளை இந்தியா, மற்றும் அமெரிக்க கம்பனிகளுக்கு விற்பனை செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதன் பின்னணியில் இந்தியாவே உள்ளது. அதன் பலத்துடன் தான் இந்த நடவடிக்கைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
தமிழ் மக்களை அழிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய இந்தியா இன்று அவர்கள் வாழ்ந்த சொந்தக் காணிகளையும் பறிக்கின்றது. வடபகுதியில் சிங்கள மக்களையும் குடியேற்றுவோம் என்ற “மாயையை’ தென்பகுதியில் அரசாங்கம் அரங்கேற்றுகின்றது.
ஆனால் இதில் உண்மையில்லை. இந்திய, அமெரிக்க கம்பனிகளுக்கு காணிகளை விற்றுவிட்டு எஞ்சிய காணிகளில் இராணுவத்தினரைக் குடியேற்றும் திட்டமே முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
உலகின் இரண்டாவது பலஸ்தீனமாக இலங்கையின் வடபகுதி உருவாகி வருகிறது. இதற்கு இஸ்ரேலின் உதவியும் பெற்றுக்கொள்ளப்படுகிறது.
அதற்காகவே இலங்கையில் இஸ்ரேலிய தூதரகமும் இரகசியமாக இயங்கி வருகிறது. எனவே தமிழ் மக்களின் மண் மீட்புப் போராட்டத்தை சர்வதேச மயப்படுத்த வேண்டும்.
அதன் மூலம் அரசாங்கத்திற்கு அழுத்தத்தை ஏற்படுத்தி தமிழ் மக்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும். இதற்காகவே நாமனைவரும் இணைந்து போராடுகிறோம்.
தமிழ் மக்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம் என்றார்.

No comments:

Post a Comment