Translate

Wednesday 25 July 2012

புலம்பெயர் தமிழர்களை குற்றஞ்சாட்டும் கருணா!


இலங்கையில் அல்லலுறும் தமிழர்களுக்கு ஒரு வீட்டைக்கூட புலம்பெயர் தமிழர்கள் கட்டிக்கொடுக்கவில்லை என்று கருணா சாடியுள்ளார். வெளிநாடுகளில் உள்ள சில அமைப்புகள் மட்டுமே வட கிழக்கில் உள்ள தமிழர்களுக்கு வீடுகளையும் சில வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்தது என்று அவர் குறிபிட்டுள்ளார்.

புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து, அவ்வியக்கத்தைக் காட்டிக்கொடுத்து, பின்னர் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படும் கருணா தற்போது அப்பட்டமாக புலம்பெயர் தமிழர்களை குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆயுதப் போராட்டத்துக்கு மட்டுமே அவர்கள் பங்களிப்பை மேற்கொண்டார்கள் என்று குறிப்பிட்டுள்ள கருணா, ஒழுங்காக ஒரு வீட்டைக் கட்டி, அவதியுறும் தமிழர்களுக்கு, புலம்பெயர் தமிழர்கள் கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.
சிங்கள வார ஏடானா லக்பிமவுக்கு வழங்கிய செய்வியிலேயே கருணா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இருப்பினும் இக் குற்றச்சாட்டை உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் திரு சுரேன் சுரேந்திரன் அவர்கள் முற்றாக மறுத்துள்ளார். கருணாவின் கூற்றுக்கு பதிலடிகொடுக்கும் வகையில், சுரேன் லக்பிம வார ஏட்டுக்கு தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
இலங்கையில் உள்ள அனைத்துத் துறைகளிலும், லஞ்ச ஊழல் காணப்படுவதாகவும், ஊழல் நிறைந்த அரசியல்வாதிகளும் தலைவர்களும் இருக்கும் ஒரு நாட்டில், எந்த ஒரு திட்டமும் முழுமையாக நிறைவேறாது எனவும் திரு சுரேன் குறிப்பிட்டுள்ளார்.
புலம்பெயர் தமிழர்கள் இலங்கை அரசு ஊடாக வட கிழக்கு தமிழர்களுக்கு உதவவேண்டிய அவசியம் இல்லை எனக் குறிப்பிட்ட சுரேன் அவர்கள், புலம்பெயர் தமிழர்கள் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களூடாகவும், பல தர்மஸ்தாபனங்கள் ஊடாகவும் உதவிசெய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தமிழர்கள் பல அமைப்புகளை நிறுவி அதனூடாக வட கிழக்கில் உள்ள தமிழர்களைப் பராமரித்து வருவதாகத் தெரிவித்த சுரேன் சுரேந்திரன் அவர்கள், கருணாவின் கூற்று ஒரு அப்பட்டமான பொய் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment