Translate

Saturday 28 July 2012

பன்நாட்டு பார்வையாளர்களின் கவனத்தையீர்த்த எதிர்ப்பு நிகழ்வுகள்

லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க நாளான இன்று ஒலிம்பிக் விளையாட்டரங்குகள் அமைந்திருக்கும் கிழக்கு லண்டன் பகுதியில் மூன்று இடங்களில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வுகளில் பெருமளவிலான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர்.


ஆரம்ப நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாட்டுத் தலைவர்கள், பிரமுகர்கள் சென்ற பாதையான Aspen Way என்ற பிரதான வீதியின் ஒருமருங்கில் மாலை 5மணியளவில் கூடத்தொடங்கிய மக்கள் பதாகைகளையும், தமிழீழ தேசியக் கொடிகளையும் தாங்கியவாறு கொட்டொலிகளை எழுப்பியபடி இரவு 8.30 வரை தமது போராட்டத்தை தொடர்ந்தனர்.

பிறிதொரு தொகுதி மக்கள் இன்றைய நிகழ்ச்சி நடைபெற்ற உள்ளரங்குக்கு வெளியே கூடியிருந்து இனப்படுகொலை புரியும் சிறிலங்கா நாட்டு தேசிய விளையாட்டு வீர்ர்கள் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதித்தமைக்கு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். இவ்விடத்தில் கூடுவதற்கு குறைந்தளவு மக்களுக்கே லண்டன் மாநகரக் காவற்துறையினர் அனுமதி வழங்கியிருந்தனர்.

மற்றய ஆர்ப்பாட்டம், இன்று ஆறாவது நாளாக உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்ந்து வரும் திரு. கோபி சிவந்தன் அமர்ந்துள்ள Stratford High Street தொடருந்து நிலைய அருகாமையில் நடைபெற்றது. அங்கும் மக்கள் பதாகைகளை தாங்கியபடி, கொட்டொலிகளை எழுப்பி தமது எதிர்ப்பினைக் காண்பித்தனர்.

இன்றைய போராட்டங்கள் ஒலிம்பிக் போட்டிகளை காண வந்திருக்கும் பன்நாட்டவர்களின் கவனத்தை ஈர்த்திருந்தமையை அவதானிக்க முடிந்தது. ஆரம்பநாள் நிகழ்ச்சியில் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த இராஜபக்சவும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டபோதிலும், அவர் லண்டனுக்கு வரவில்லை எனத் தெரியவருகிறது.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இன்றைய ஆர்ப்பாட்ட நிகழ்வுகளில் பிரித்தானியாவில் செயற்படும் அனைத்துத் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே சுவிற்சலாந்து லவுசான் நகரத்தில் அனைத்துலக ஒலிம்பிக் செயற்குழுவின் தலைமைச் செயலகத்திற்கு முன் ஒரு ஆர்ப்பாட்ட நிகழ்வினை அங்குள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழு இன்று நடாத்தியிருந்தது.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=YLuaMCY-VBs

No comments:

Post a Comment