Translate

Tuesday 18 September 2012

ராஜபக்சே இந்தியா வருவதை கண்டித்து நாம் தமிழர் கட்சி அழைப்பு விடுத்திருந்த முழு அடைப்பு போராட்டம் பெருவெற்றி..

ராஜபக்சே இந்தியா வருவதை கண்டித்து புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

முழு அடைப்பு போராட்டம் : 
மத்திய பிரதேச மாநிலத்தில் பவுத்த கல்வி நிலையங்களின் அடிக்கல் நாட்டு விழா வருகிற 21-ந் தேதி நடைபெற உள்ளது. விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்று அடிக்கல் நாட்ட உள்ளனார். இதற்காக இந்தியா வர உள்ள இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த ராஜபேக்சே இந்தியாவிற்கு வரக்கூடாது என்று கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர்.


இந்த நிலையில் ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் புதுவையில் நேற்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த போராட்டத்திற்கு புதுச்சேரி ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவு தெரிவித்து இருந்தது. மேலும் நாம் தமிழர் கட்சி சார்பில் வணிகர் சங்கங்கள், வியாபாரிகள், தனியார் பஸ், ஆட்டோ, டெம்போ ஓட்டுனர்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டிருந்தனர்.

பஸ்கள் ஓடவில்லை

புதுச்சேரியில் நேற்று காலை 6 மணி முதல் பெரும்பாலான தனியார் பஸ்கள் ஓடவில்லை. ஒரு சில தனியார் பஸ்கள் மட்டுமே ஓடியது. சிறிது நேரத்தில் அந்த பஸ்களும் நிறுத்தப்பட்டது. ஆனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசு பேருந்துகள் வழக்கம் போல் ஓடின. அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது. 6 அல்லது 7 அரசு பேருந்துகள் ஒன்றாக இயக்கப்பட்டன. புதுச்சேரி பஸ்நிலையத்தில் இருந்து தமிழக எல்லை வரை போலீசார் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது.

புதுச்சேரி மாநிலத்தில் தனியார் பேருந்துகளே அதிகம் என்பதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் புதுச்சேரி பஸ் நிலையத்திலும், பஸ் நிறுத்தங்களிலும் பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்கு செல்வோர் காலை முதல் காத்திருந்தனர். புதுச்சேரியில் தனியார் பள்ளிகள் பெரும்பாலும் நேற்று விடுமுறை விடப்பட்டது. ஒரு சில தனியார் பள்ளிகள் மட்டும் இயங்கியது. ஆனால் அரசு பள்ளிகள் வழங்கம் போல் இயங்கியது. ஆனால் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

கடைகள் அடைப்பு

நகரின் முக்கிய வீதிகளான நேருவீதி, அண்ணாசாலை, காந்திவீதி, மறைமலை அடிகள் சாலை, காமராஜர் வீதி உள்பட பல சாலைகளில் பெரும்பலான கடைகள், ஓட்டல்கள், பெட்ரோல் பங்குகள் அடைக்கப்பட்டு இருந்தது. இதனால் தெருக்களில் ஆள்நடமாட்டம் குறைவாக காணப்பட்டது. பெரியமார்க்கெட், நெல்லித்தோப்பு, சின்னமணிக்கூண்டு ஆகிய மார்க்கெட்டுகளில் ஒரு சில கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. சில கடைகள் திறந்து இருந்தன.

நேற்று அதிகாலை புதுச்சேரியில் இருந்து வழுதாவூர் சாலை வழியாக திருக்கனூருக்கு சென்ற தனியார் பேருந்து பத்துக்கண்ணு அருகே சென்ற போது ஒரு கும்பல் மறைந்து கல்வீசி தாக்கியது. இதில் அந்த தனியார் பேருந்தில் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இதே போல் கோரிமேடு அருகே தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான பஸ் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது. இதே போல் கவுண்டன்பாளையத்தில் உள்ள ஒரு சாராயக்கடையும், முருகா தியேட்டர் அருகே உள்ள டீக்கடையும் அடித்து நொறுக்கப்பட்டது. புதுச்சேரி நகரில் உள்ள திரையரங்குகளில் நேற்று 2 காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

போலீஸ் பாதுகாப்பு

புதுச்சேரியில் உள்ள மத்திய மாநில அரசு அலுவலகங்களும், தொழிற்சாலைகளும் இயங்கின. புதுச்சேரியில் நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நகரில் முக்கிய இடங்களில் ஆயுதம் தாக்கிய போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். நகர் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

வில்லியனூர்-திருக்கனூர்

வில்லியனூரில் நேற்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கம் போல் செயல்பட்டன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

திருக்கனூரில் பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தன. அரசு மற்றும் தனியார் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கின. புதுச்சேரிக்கு செல்லும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அரசு பஸ்கள் இயங்கின. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

No comments:

Post a Comment