Translate

Wednesday 25 May 2011

மதிமுகவின் தேர்தல் புறக்கணிப்பு: 75% மக்கள் ஆதரவு-வைகோ

சிவகாசி: சட்டமன்ற தேர்தலில் மதிமுக போட்டியிடாமல் புறக்கணித்ததை 75 சதவீத மக்கள் வரவேற்றுள்ளனர் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

மதிமுக 18ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ஆலங்குளத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகையில், வெற்றி, தோல்விகளை சமமாக கருதுபவன் நான். என் அரசியல் பயணம் ஒளி மண்டலமாகவும், இருள் சூழ்ந்ததாகவும் இருந்து வருகிறது. 18 ஆண்டுகளுக்கு முன்பு கொலைப் பழி சுமத்தப்பட்டு வெளியேற்றப்பட்ட நாள் முதல் இன்று வரை எனக்கு மக்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.



இதுவரை நாங்கள் யாரையும் பகைத்துக் கொண்டதில்லை. ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறேன். ஏனெனில் இதனால் அங்குள்ள மக்களுக்கு நோய்கள் ஏற்பட்டு வருவதோடு இயற்கை வளமும் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்கால தலைமுறை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகதான் இந்த போராட்டங்களை நடத்தி வருகிறேன்.

இதுதொடர்பாக கோர்ட்டில் வாதாடும்போது, இந்த போராட்டத்தில் மக்கள் உங்களோடு சேர்ந்து ஏன் ஆதரவாக போராடவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினர். அதற்கு நான், சுதந்திரம் வேண்டும் என்பதற்காக 1,000 பேர் தான் போராட்டம் நடத்தினார்கள். அதில் வெற்றியும் கண்டார்கள். உடன் சேர்ந்து போராடவில்லை என்பதற்காக அவர்கள் எனக்கு ஆதரவு தரவில்லை என்பதாக எடுத்துகொள்ள கூடாது என்றேன். இதை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.

மதிமுக விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கட்சி என விமர்சனம் உள்ளது. நாங்கள் ஈழ மக்களுக்கு என்றும் ஆதரவாக இருப்போம். தமிழ்நாட்டில் வன்முறை இருக்ககூடாது என நினைப்பவர்கள் நாங்கள். இதனால் பல சந்தர்ப்பங்களில் நான் கைது செய்யப்பட்டபோது மதிமுகவினர் எந்த வன்முறையிலும் ஈடுபட்டதில்லை. 

மக்கள் நலனுக்காக மதிமுக தொடர்ந்து போராடும். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மதிமுக போட்டியிடாமல் புறக்கணித்ததை 75 சதவீதம் மக்கள் வரவேற்று உள்ளனர். அதேநேரத்தில் இந்த தேர்தலில் பணம் மூலம் ஜனநாயகத்தை விலைக்கு வாங்க முடியாது என்பதை மக்கள் நிரூபித்துள்ளனர். இதற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

என்னை வருங்கால முதலமைச்சர் என சிலர் வரும்போது வாழ்த்தி கோஷம் போட்டனர். இது என் மீது உள்ள அன்பால், பாசத்தால் கூறுகிறார்கள் என்பதை உணர முடிகிறது. ஆனால் அதே நேரத்தில் புகழ் போதை பள்ளத்தில் தள்ளிவிட்டு விடும் என்பதால் அந்த வார்த்தையை நான் கவனத்தில் கொள்வது இல்லை.

ராமன்-ராவணன் இடையே நடந்த யுத்தம் 18 மாதம் நடந்தது. குருஷேத்திர போர் 18 நாட்கள் நடந்தது. அதேபோல் மதிமுக 18ம் ஆண்டுவிழா தொடங்க விழாவை கொண்டாடி வருகிறோம். நேர்மையான, ஊழலற்ற, சுயநலமற்ற அரசியல் நடத்தி தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்றார் வைகோ.

No comments:

Post a Comment