Translate

Saturday 19 November 2011

தமிழர்களும் சிங்களவர்களும் இலங்கையில் வந்தேறு குடிகளாம்-அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க

தமிழர்களும் சிங்களவர்களும் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்கள். எக்காரணம் கொண்டும் அவர்கள் இன ரீதியாகப் பிரிக்கப்பட மாட்டார்கள் என உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இணைந்த புதிய மாணவர்களை வரவேற்கும் வைபவம் கடந்த புதன்கிழமை பல்கலைக்கழக மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு பிரதம அதீதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,


நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் சிங்கள, தமிழ், முஸ்லிம் என இனரீதியாக பிரிக்கப்படமாட்டாது. அனைத்து மாணவர்களும் இணைந்து கல்வி கற்கும் பல்கலைக்கழக வலையமைப்பைக் கட்டியெழுப்புவோம்.

இலங்கையில் வாழும் அனைவரும் இந்தியாவிலிருந்து வந்து குடியேறியோர். எனவே நாமனைவரும் ஒரே மனித குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை மறந்து விடலாகாது. 

இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களும் இந்தியாவிலிருந்து வந்தவர்களே. அன்று இந்திய கலாசாரத்திற்கமைய ஆசியாவிலேயே மனிதகுலம் தோன்றியது. யத்ஷ, நாக, வனவாரி கோத்திரங்களில் பிரச்சினையால் தான் சிங்கள, தமிழ் மக்களாக பிரிந்தனர். 

அதன் பின்னர் சிங்கள பௌத்தர்களாகவும் தமிழ் பௌத்தர்களாகவும் வாழ்ந்தனர். பின்னர் தமிழ் மக்கள் இந்துக்களானார்கள். சிங்கள அரசியல் தலைவர்களும் இந்தியாவிலிருந்து இங்கு வந்த பின்னரே சிங்கள பௌத்தர்களானார்கள். இதற்கு சிறந்த உதாரணம் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவும் ஜே.ஆர்.ஜயவர்த்தனவுமாவர்.

பண்டாரநாயக்கவின் தாத்தாவின் பெயர் நீலபெருமாளாகும். இதனை மாற்றியே அவர் பண்டாரநாயக்கா என்ற பெயரைச் சூட்டிக் கொண்டார். 

ஜே.ஆரின் கூற்றுப்படி அவரது தாத்தாவும் தென்னிந்தியாவிலிருந்து இலங்கை வந்து ஜயவர்த்தன பரம்பரையில் திருமணம் செய்து கொண்டதால் ஜயவர்த்தன என்ற பெயர் வந்தது. 

இவையனைத்தையும் ஆராயும் போது சிங்களவர், தமிழர் அனைவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது புலனாகிறது. எனவே இவை தொடர்பில் சிந்தித்து தீர்மானங்களை எடுக்கும் புத்திக் கூர்மை எமது மாணவர்களுக்கு உண்டு. கடந்த காலங்களில் வடக்கு கிழக்கில் புலிகளே பல்கலைக்கழகங்களை நிர்வகித்தனர். 

தெற்கில் ஜே.வி.பி. யினரே பல்கலைக்கழங்களை நிர்வகித்தனர். ஆனால் இந்த நிலைமாறியுள்ளது. மாணவர்களுக்கு கல்வி கற்கக் கூடிய சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. 

சிங்கள தமிழ் மாணவர்களிடையே விரிசல்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்காக பல்கலைக் கற்கை மொழி ஆங்கிலமாக மாற்றப்படவுள்ளது. 

பல்கலைக்கழகமென்பது இனவாதம் மதவாதம் கோத்திரவாதம் இல்லாத புத்திக்கூர்மையுடையோர் இருக்கும் இடமாகும். கிழக்குப் பல்கலைக்கழகம் சிங்கள மயமாக்கப்படுவதாக கடந்த காலங்களில் பொய்ப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. 

பல்கலைக்கழக சட்டங்கள்"இஸட் ஸ்கோர்" பிரதேச இனவிகிதம் தொடர்பான வரையறைகளை பின்பற்றியே மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர் என்றார்.

No comments:

Post a Comment