Translate

Friday 16 December 2011

வடமாகாண உள்ளூராட்சி சபைகளை மேம்படுத்த இந்தியா உதவ வேண்டும்; மாவை சேனாதிராசா கோரிக்கை



வடக்கில் உள்ள உள்ளூராட்சி கபைகளை ஜனநாயக ரீதியாக மேம்படுத்துவதற்கும், அபிவிருத்தி வேலைத் திட்டங்களை மேற்கொள்வதற்கும் இந்திய அரசு உதவி புரிய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா யாழ்ப்பாணம் வந்திருந்த இந்தியக் குழுவினரிடம் தெரிவித்திருக்கிறார்.

இலங்கைக்கான இந்தியாவின் பிரதித் தூதர் பி.குமரன் தலைமையிலான குழுவினருக்கும் நடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மற்றும் தமிழரசுக்கட்சியின் இணைச் செயலாளர் சீ.வி.கே.சிவஞானம் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூரகத்தில் நடைபெற்றது. இதன் போதே மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்புத் தொடர்பாக நாடாளளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மேலும் தெரிவிக்கையில்:
எமது தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து மீளக்குடியமராத நிலையில் உள்ளனர். இராணுவம் உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் காணிகளை ஆக்கிரமித்துள்ளது. இதனால் பல மக்களது வாழ்விடங்கள் பறிக்கப்பட்டுள்ளன. இவற்றை விட மாதகலில் பொதுமக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளை கடற்படை சுவீகரிக்க முயல்கின்றது.
இந்திய வீடமைப்புத் திட்டத்தில் சரியான வகையில் பயனாளிகளின் பெயர் உள்வாங்கப்படவில்லை என்று முறைப்பாடுகள் எமக்குக் கிடைத்துள்ளன. உள்ளூராட்சி சபைகளில் ஊடாக நாம் அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்வதற்கு இலங்கை அரசு உதவுமோ தெரியாது. அத்துடன் உள்ளூராட்சி சபைகளை ஜனநாயக ரீதியாகக் கட்டியெழுப்பவதற்கும், அபிவிருத்தி வேலைகளை செய்வதற்கும் இந்தியா உதவ வேண்டும்.
இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று மக்கள் படும் கஷ்டங்களைக் கண்டறிந்து மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று இந்தியக் குழுவினரிடம் கூறியதாகவும் குறிப்பிட்டார்

No comments:

Post a Comment