Translate

Saturday 4 February 2012

தமிழ் சினிமாப் படங்களில் வரும் ரவுடிகள் கடைக்காரரை மிரட்டி மாமுல் வாங்குவது போல ரூற்றிங்- மிச்சம் பகுதியில் 2 தமிழர்கள் மிக மோசமான அடாவடியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் "சேர்ச் மினி மார்க்கட்" என்னும் தமிழருக்குச் சொந்தமான கடை ஒன்றில், உரிமையாளரின் மனைவியை மிரட்டி 6 மாதகாலமாக குடி பாணங்களை இலவசமாகப் பெற்றுவந்துள்ளனர். இந்தியப் படங்களில் வரும் தாதா போல இவர்கள் செயல்பட்டதும் போக, கடைக்குச் சென்று அங்கே பணிபுரியும் உரிமையாளரின் மனைவியையும் வேலைசெய்பவர்களையும் இவர்கள் மிரட்டி வந்துள்ளனர். கடந்த வருடம் ஜனவரிமாதம் 15ம் திகதி மேற்படி இந்த 2 தமிழர்களும் குறிப்பிட்ட கடைக்குள் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அங்கே வேலைசெய்தவர் தலையில் வொட்க்கா போத்தலால் பலமாகத் தாக்கியும் உள்ளனர்.


இதனை அடுத்து வேலைசெய்பவர்களை தாக்கவேண்டாம் எனக் கூறிய, உரிமையாளரின் மனைவியை அவரது 10 வயதுச் சிறுவனுக்கும் முன்வைத்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். 46 வயது நிரம்பிய அப் பெண் பலத்த அடி காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் ஆபத்தான நிலை அனுமதிக்கப்பட்டார். அவர்களின் 10 வயதுச் சிறுவன் மிகவும் பயந்து காணப்பட்டான் என்கின்றனர் பொலிசார். கடை உரிமையாளர் கொடுத்த வாக்குமூலத்துக்கு அமைவாகவும் CC TV கமரா மூலம் பெறப்பட்ட புகைப்படங்கள் மூலமாகவும் பொலிசார் இவ்விருவரையும் கைதுசெய்தனர். அரிகரன் செந்திவேல்(வயது31) சுகுமார் சாந்தரட்ணம்(வயது 37) ஆகிய 2 தமிழர்களுமே கைதுசெய்யப்பட்ட நபர்களாவர். இதில் சுகுமார் சாந்தரட்ணம் இலங்கையில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்ததாகவும் பின்னர் மன நிலை சரியில்லாமல் பிரித்தானியா வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் இவர்கள் இருவரும் தண்ணி அடிப்பதை மட்டும் நிறுத்தவில்லை !

இவ்விருவரும் பிரித்தானியாவில் அகதிகள் அந்தஸ்த்துக் கோரிய நபர்கள் எனப் பொலிசார் தெரிவித்துள்ளனர். இவர்கள் மேல் தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு கடந்த திங்கட்கிழமை கிங்ஸ்டன் கிரவுன் நீதிமன்றில் வழங்கப்பட்டது. யூரிகள் அடங்கிய குழு இவர்கள் குற்றவாளிகள் என இனம் கண்டனர். இவ்விரு தமிழர்களுக்கும் தலா 3 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கித் தீர்பளித்தார் நீதவான் கென்ட் அவர்கள். அவர் மேலும் குறிப்பிடுகையில் இதுபோன்ற காட்டுமிராண்டித் தனங்கள் முற்றாக அழிக்கப்படவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ஆங்கிலப் பத்திரிகைகள் இலங்கைத் தமிழர்கள் அட்டகாசம் என்ற தலைப்பில் செய்தியை வெளியிட்டுள்ளது. 

அதிலும் சில செய்திச் சேவைகள் அகதிகளாக வரும் நபர்கள் இவ்வாறு செயல்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளது. ஒரு சிலர் செய்யும் தவறுகளால் ஒட்டுமொத்த தமிழ் சமூகமே வெட்கித் தலை குனியவேண்டிய நிலை தோன்றியுள்ளது என மிச்சத்தில் வாழும் தமிழர் ஒருவர் விசனம் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment