Translate

Saturday 4 February 2012

பெப்ரவரி 4 - இலங்கைத்தீவில் தமிழர் உரிமை மறுக்கப்பட்ட நாள்!


பெப்ரவரி 4 - இலங்கைத்தீவில் தமிழர் உரிமை மறுக்கப்பட்ட நாள்!


பிரித்தானிய ஆட்சியின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த இலங்கைத்தீவின் ஆட்சி அதிகாரம் 04.02.1948 இல் பெரும்பான்மை சிங்களவர்களிடம் கையளிக்கப்பட்டது. அன்றைய நாளே ஈழத்தமிழர்களின் உரிமை முழுமையாக மறுக்கப்பட்ட நாளாகவும் ஆனது. 


அந்நியரின் வருகைக்கு முன்பு ஈழத்தமிழர்களின் இராட்சியம் தமிழ் மன்னர்களாலேயே ஆளுகை செய்யப்பட்டது. இலங்கைத் தீவை அடிமைப்படுத்திய அந்நியர்கள் தமது ஆளுகை வசதிக்காக ஒரே அலகாக இலங்கைத்தீவை மாற்றினர். அதன் விளைவு இன்று எம் தமிழினம் எமது சொந்த மண்ணிலேயே வாழ்வதற்காக போராடவேண்டி உள்ளது. 

1948 ற்குப் பின்னர் அறவழியில் ஆரம்பித்த எமது விடுதலைப்பயணம் ஆயுதப்போராட்டமாக மாறி மண்மீட்புப் போரில் வெற்றியின் எல்லையைத் தொட்டிருந்த வேளை அனைத்துலக நாடுகளின் உதவியுடன் அப்போராட்டம் முடக்கப்பட்டது. இன்று மீண்டும் எம்மக்களால் அறவழிப்போராட்டமாக முன்னெடுக்கப்படுகின்றது.

உலகின் பல்வேறு நாடுகள் இலங்கைத்தீவில் யுத்தம் நிறுத்தப்பட்டால் தமிழ் மக்களின் உரிமையினை பெற்றுக்கொள்வதற்கான சமரச முயற்சி செய்வதாகக் கூறின. ஆனால் இன்று ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளை எட்டுகின்ற நிலையில் இலங்கைத்தீவின் இறைமையில் தலையிடமுடியாதென கருதுகின்றன.  

எமது இனதின் இறைமையினையும் அதன் பாதுகாப்பினையும் உறுதி செய்து எமது சொந்த மண்ணிலேயே உரிமையோடு வாழ வழிசெய்யவேண்டிய தார்மீகப் பொறுப்பினை பிரித்தானியா உட்பட உலகநாடுகளே ஏற்கவேண்டும். 

இலங்கைத்தீவில் நிகழ்ந்த தமிழின அழிப்பிற்கும் யுத்தக் குற்றத்திற்கும் நீதி கோரியும்இ நிகழ்ந்துகொண்டிருக்கும் கொடுமைகளை நிறுத்தக்கோரியும்இ தொடர்ந்து குரல் கொடுப்போம். உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் “புலம்பெயர் ஈழத்தமிழர்” எனும் ஒற்றைச்சொல்லிற்கு தகுதியுடைய நாம் தாயகவிடுதலைக்கான மிகப்பெரும் “அரசியற் சக்தி” என்பதை மனதிற் கொண்டு துணிவுடன் உழைப்போம். இந்த உயரிய பணியை முன்னெடுத்துச்செல்லும் அனைத்து தமிழ்த் தேசிய மக்கள் அமைப்பினர்க்கும் அனைத்து மக்களும் இணைந்து தோள் கொடு;ப்போம். இதற்கு சாதகமாக 27.02.2012 அன்று ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமை ஆணைக்குழுவின்  கூட்டத்தொடரினை சாதகமாக்கிக் கொள்வோம். 

இலங்கைத்தீவில் தமிழர் உரிமை மறுக்கப்பட்ட நாளான இன்று கொலைக்கள சிங்கள ஆட்சியாளர்களை சர்வதேச நீதிமன்றின் முன் நிறுத்தி தாயக விடுதலைக்கான தீர்வை பெற்றுக்கொள்ள உறுதியெடுத்துக் கொள்வோம். 

எமது தாயகம் விடுதலை பெறும்வரை எமது விடுதலைப்பயணத்தை முன்னெடுப்போம். 

நன்றி

 “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

நன்றி
பிரித்தானியத் தமிழர் ஒன்றியம்
       0044(0)2087338268

No comments:

Post a Comment