Translate

Saturday 4 February 2012

சிங்கள தேசத்தின் சுதந்திரநாள் விடுதலை மறுக்கப்பட்ட தமிழினத்தின் துயரநாள்.

சிறீலங்கா அரசு, தனது அறுபத்தி நான்காவது சுதந்திரநாளை, முன்னெப்போதும் இல்லாதவாறு, கோலாகலமாகக் கொண்டாடுகின்றது. 
பெப்ரவரி நான்கு, பிரித்தானிய ஆட்சி அதிகாரத்திடம் இருந்து, தன்னை விடுவித்துக்கொண்ட நாளாக இலங்கைத் தீவு முழுமையும் இந்நாளைக் கொண்டாட வேண்டியதாக இருந்தபோதும், இலங்கைத் தீவில், தமிழர் தாயகம், இந்நாளை துயரநாளாகவும், கரிநாளாகவுமே கடைப்பிடித்துவருகின்றது. 

தமிழ் மக்களைப் பொறுத்தவரை, பானையில் இருந்து வழுவி நெருப்பிற்குள் விழுந்த கதையை நினைவுபடுத்துவதாகவே இந்நாள் அமைந்துள்ளது. 
பிரித்தானிய காலனி ஆதிக்கத்தின் பிடியில் இருந்து விடுபட்டு, பௌத்த சிங்களப் பேரினவாதம் என்ற இனமதவெறிக் கொடுங்கோலாட்சியின் கைகளில் சிக்குண்ட தவிப்பிலேயே இந்நாளைத் தமிழ் மக்கள் எதிர்கொள்கின்றனர். 

தமிழ் மக்களின் தேசிய விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை, மிகக்கொடூரமான முறையில், அனைத்துவகை அநியாய வழிமுறைகளைக் கைக்கொண்டு, அழித்தொழித்த திமிருடன், சிங்களம் தனது சுதந்திரநாளைக் கொண்டாடுகின்றது. 

முள்ளிவாய்க்காலில், நாற்பதினாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களை மிகக்கொடூரமாகக் கொன்றொழித்து, மிகமோசமான போர்க்குற்றங்களை புரிந்து, தமிழ்மக்களை அங்கவீனர்களாக்கி, வகைதொகையின்றிச் சிறையில் அடைத்து, இனஅழிப்புத் தாண்டவம் ஆடிய சிங்கள இனவெறி அரசு, தனது வெற்றி முகத்தை உலகத்திற்குக் காட்டுகின்றது.
சிங்களத்தின் இனவெறி கொடுமையைக் கவனத்தில்கொள்ளாமல், இந்நாளைக் கௌரவப்படுத்த, அனைத்துலக இராஜதந்திரிகள், முக்கிய பிரமுகர்கள், அரச பிரதிநிதிகள் என, பெருமளவிலான வெளிநாட்டவர்கள், சிறீலங்காவில் குவிந்துள்ளனர். 

இலங்கைத்தீவின் ஒருபகுதியில், சுதந்திரநாளுக்குண்;டான கோலாகலங்கள் வெளிப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்க, இன்னொரு பகுதியிலோ சிங்கள இராணுவத்தினரின் அடக்குமுறைக்குள், சுதந்திரத்துக்காகப் போராடும் தமிழினம் தன்நிலையை வெளிப்படுத்த இயலாத கையறுநிலையில் துயரகீதம் இசைத்துக்கொண்டிருக்கின்றது. 

தமிழ் இனம், தனது விடுதலைக்கான போராட்டத்தை, தொடருகின்ற இந்நிலையில், நாங்கள் விடுதலைக்காக ஏங்குகின்ற ஒரு இனம் என்பதையும், சிறீலங்காவின் சுதந்திரநாள் என்பது, தமிழர்களுக்கானதல்ல என்பதையும், இந்நாள் தமிழர்களின் கையில் விலக்குபூட்டப்பட்ட நாள் என்பதையும் சர்வதேசத்திற்குத் தெரியப்படுத்தும் கடப்பாடு புலத்துத் தமிழர்களையே சாரும். 
இந்நாளை துயரநாளாகவும், கரிநாளாகவும் அடையாளப்படுத வேண்டிய பணி புலம்பெயர்ந்த தமிழர்களிடமே உள்ளது. 

உலகமெல்லாம் பரந்து வாழும் தமிழ் மக்களும், தமிழர் அமைப்புக்களும் இதற்கான முன்னெடுப்புக்களை முன்னெடுத்துள்ளமை வரவேற்கத்தக்கது. 
இத்தகைய செயற்பாடுகளுக்கு, புலம்பெயர் தமிழர்கள் தமது முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டும்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
தமிழர் நடுவம் - பிரான்ஸ்.

No comments:

Post a Comment