Translate

Saturday 4 February 2012

பத்தி எழுத்தாளர் கஜேந்திரகுமாரின் கயிறு திரிப்பு!


 பத்தி எழுத்தாளர் கஜேந்திரகுமாரின் கயிறு திரிப்பு!
திருவிளையாடல் திரைப்படத்தில் ஒரு நகைச் சுவைக் காட்சி.  மதுரையை ஆண்ட சண்பக பாண்டியனுக்கு ஓர் அய்யம்.
பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உள்ளதா?’ என்பதே சண்பக பாண்டியனின் அய்யம்.  ‘உண்டு’ என்பது மதுரை இறையனார் கருத்து.  ‘இல்லை’ என்பது புலவர் நக்கீரரின் வாதம்.

அய்யத்தைப் போக்கும் புலவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு எனப் பாண்டிய மன்னன் முரசு அறிவிக்கிறான். இதைக் கேட்ட ஏழைப் புலவன் தருமி அந்தப் பரிசைப் பெற ஆசைப்படுகிறான். தருமியின் புலம்பலைக் கேட்ட  இறைவன் அவனுக்கு ஒரு பாடலை எழுதிக் கொடுக்கிறார்.  தருமியாக நாகேசும் இறைவனாக சிவாஜி கணேசனும் நடித்திருந்தார்கள்.
நாகேஷ் ஓலையைப் பார்த்து "கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ...." என்று தொடங்கும் பாடலைப் படிக்க   அதைக் கேட்டு அய்யம்  தீர்ந்த அரசன் ஆயிரம் பொற்காசுகள் கொண்ட பொற்கிழியை நாகேசின் கையில் கொடுக்கப் போகிறார். அப்போது நக்கீரர் இடைமறித்து "புலவரேஉமது பாடலில் பிழை இருக்கிறதுஎன்கிறார்.  நாகேஷ், "இருந்தாலென்னஎவ்வளவு பிழை இருக்கிறதோ அதற்குத் தகுந்த படி பரிசைக் குறைத்துக் கொள்ளுங்களேன்என நக்கீரர்  "புலவரேஇச்சபையிலே முறையானதொரு பாட்டுக்கு எம்மன்னவன் பரிசளிக்கிறாரென்றால் அதைக் கண்டு சந்தோஷப்படும் முதல் மனிதன் நான் தான்ஆனால் அதே சமயம் இறையனாரும் எம்பெருமான் முருகவேளும் அகத்தியரும் கட்டிக் காத்த தமிழ்ச் சங்கத்திலே பிழையான ஒரு பாட்டுக்குப் பாண்டியன் பரிசளிக்கிறானென்றால் அதைக் கண்டு வருத்தப் படுபவனும் அடியேன் தான்எனநாகேஷ், "இங்கே எல்லாமே நீர் தானோ?" என்று கேட்டுவிட்டு "ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமையாபாட்டெழுதிப் பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்எழுதிய பாட்டில் குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்" எனக் கூறிவிட்டு  எனக்குப் பரிசு வேண்டாம்என்று அவையை விட்டு பின்னங்கால் பிடரியில் பட ஓடுவது நகைச்சுவையின் உச்சம்.
"கூட்டமைப்பின் ஆபத்தான அணுகுமுறைகள்" என்ற தலைப்பில்  பத்தி எழுத்தாளராக மாறிவிட்ட அரசியல்வாதி  திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எழுதியதை படித்தபோது இந்தத் திருவிளையாடல் திரைப்பட நகைச்சுவைக் காட்சிதான் மனத்திரையில் ஓடியது.
"பாட்டெழுதிப் பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்எழுதிய பாட்டில் குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள் என்று நாகேசு சொல்வது திருவாளர் திரு கஜேந்திரகுமார் பொன்னப்பலத்துக்கு மிகப் பொருத்தம்.
ததேகூ மேற்கொள்ளும் ஒவ்வொரு நகர்வுகளுக்கும் திரு சம்பந்தன், திரு சுமந்திரன் போன்ற தலைவர்கள் பேசும் ஒவ்வொரு பேச்சுக்கும் அரசியல் உள் நோக்கம் கற்பித்து, அதைத் திரித்து அவர்களைத் தூற்றுவதையே திரு கஜேந்திரகுமார் இன்று தனது முழுநேரத் திருப்பணியாக மேற்கொண்டுள்ளார்!
அவரது தொடர் பத்திகளைப் படிக்கும் போது 2010 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்வாக்காளப் பெருமக்களிடம் சிக்காராக வாங்கிக் கட்டியதை  அவர் இன்னமும் மறக்கவில்லை - கட்டுக்காசை இழந்ததை மறக்கவில்லை -  எல்லாவற்றையும் மனதில் புதைத்து வைத்திருக்கிறார் என்றே நினைக்கத் தோன்றுகிறது.
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியை விலைப்படுத்த முடியாது என்பதால்தான் திரு கஜேந்திரகுமார் தேர்தல் மழைக் காலத்தில் இன்னொரு தமிழ்  தேசிய மக்கள் முன்னணி என்ற கட்சியை 2010 மார்ச்சு மாதம் இரவோடு இரவாகத் தோற்றுவித்தார்.  சரியாக ஒரு ஆண்டு கழித்து அந்தக் கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் போன்றோர் தெரிவு செய்யப்பட்டனர்.  அதன் பின் அந்தக் கட்சி மூச்சுப் பேச்சற்றுப் படுக்கையில் கிடக்கிறது. அதற்கு எப்போது சங்கு ஊதப்படும் என்பது தெரியவில்லை.  அல்லது அதற்கு இறுதிச் சடங்குகள் நடந்து முடிந்துவிட்டதா என்பதும் தெரியவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத்திலும் திருகோணமலையிலும் கட்டுக்காசை இழந்து கூண்டோடு கயிலாசம் போன கட்சி பின்னர் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் "சே இந்தப் பழம் புளிக்கும்" என்று சொன்ன நரி மாதிரி போட்டி போடாமல் பின்வாங்கி விட்டது.
இப்போது திரு கஜேந்திரகுமார் தமிழ் சிவில் சமூகம் என்ற அட்டைக் கத்தியைத் தூக்கியுள்ளார்.  இந்தத் தமிழ் சிவில் சமூகம் அறிக்கை விட்டு ஊடகங்களில் விளம்பரப் படுத்தியதோடு சரி.  அடுத்த அறிக்கை எந்த ஊழியில் வரும் என்பது  தெரியாது.  அது அந்தப் பரமண்டலத்தில் இருக்கும் எமது பிதாவுக்குத்தான் வெளிச்சம்!
இந்த அழகில் திரு கஜேந்திரகுமார் ததேகூ இன் அரசியல் பற்றித் தொடர்ந்து விமர்ச்சிப்பது அதிகப் பிரசங்கித்தனமானது. வாலறுந்த நரி மற்ற நரிகளைப் பார்த்து வாலை அறுக்குமாறு கேட்டது போல - அப்போதுதான் வடிவாக இருக்கும் - திரு கஜேந்திரகுமார் ததேகூ தனது ஒட்டாண்டி அரசியல் சித்தாந்தத்தின் படி நடக்க வேண்டும் என்று விரும்புகிறார். இனி கஜேந்திரகுமாரின் கயிறுதிரிப்பை, உபதேசத்தை, வயிற்றெரிச்சலைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
வெறும் வாயை மெல்லும் கஜேந்திரகுமாருக்கு இந்த வாட்டி கிடைத்திருக்கிற அவல்  திரு சுமந்திரன்  கனடிய  தமிழர் பேரவை நடத்திய   தைப்பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினரகாகக் கலந்து கொண்டு ஆற்றிய சிறப்புரை!
எடுத்த எடுப்பிலேயே "மிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துக்களும் செயற்பாடுகளும் தமிழ்மக்கள் ஆக்கபூர்மான பணிகளில் ஈடுபடுவதனை திசைதிருப்பும் கபடநோக்கம் கொண்ட உத்திகளே ஆகும்" என்ற தூற்றலோடு தொடங்குகிறது.
கபடம் என்றால்  சூதுடைமை, பொய் (falsehood   நேர்மையின்மை (feint போலி , பாசாங்கு ,  சூழ்ச்சிக்காரன் , நரி , கபடி ,  ஏமாற்று எனப் பல பொருள் உண்டு.
இவர் ஏதோ அரசியலில் மாற்றுக் குறையாத  தங்கம் என்றும் தான் மட்டும் உத்தமர்  ததேகூ இனர் பாசாங்குக்காரர்கள், கபடர்கள் ஏமாற்றுப் பேர்வழிகள், சூழ்ச்சிக்காரர்கள் என்றும் நினைக்கிறார்.  சிலருக்கு தங்களைப் போலவே மற்றவர்களை நினைக்கிற பெருந்தன்மை உண்டு.  சரி ததேகூ "தமிழ்மக்கள் ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடுவதனை திசை திருப்பும் கபட நோக்கம் கொண்ட உத்திகளை" க் கையாள்கிறது என்றால்முதலில் அந்த மக்கள் யார்?   ததேகூ இன் கபடத்தை வடக்கிலும் கிழக்கிலும்  கூட்டங்கள் போட்டு மக்களுக்குச் சரியானதைச்சொல்வதுதானே?  அதுதானே அறம். அதுதானே அழகு. அதை விடுத்து  சாய்மனை நாற்காலியில் ஓய்வாக இருந்து கொண்டு பத்தி எழுதிக் கொண்டிருந்தால் எப்படி?
"கடந்த வாரம் கனடா தமிழ் காங்கிரஸ் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வருடாந்த தைப்பொங்கல் விழாவில் கலந்து கொண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் சிறப்புரை ஆற்றியிருந்தார்.
அந்த உரையில் அவர் கூறுகின்ற ஒருசில விடயங்கள் தொடர்பாக இந்தப் பத்தி ஆராய உள்ளது. இதற்குக் காரணம் சுமந்திரன் அவர்கள் கூட்டமைப்பில் மிகவும் அனுபவம் குறைந்த பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக இருந்தாலும் கூட, கூட்டமைப்பின் தலைமைப்பீடம் இவருக்கு அளித்துள்ள முக்கியத்துவத்தினை நோக்கினால் அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சித் தலைவர்கள் அனைவரையும் விட கூடுதல் அதிகாரமும் முக்கியத்துவமும் உடைய ஒருவராக கருதப்படுவதாலேயாகும். காரணம் உத்தியோக பூர்வமான அழைப்புக்களின் பெயரில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்ற சந்திப்புக்களில் அவர்களுக்கு இணையாக சுமந்திரன் அவர்களும் கலந்து கொள்வதுண்டு.
அது மட்டுமன்றி வேறு சந்தர்ப்பங்களில் ஏனைய தலைவர்கள் அழைத்துச் செல்லப்படாது சுமந்திரன் அவர்களை மட்டும் சந்திப்புக்களுக்கு சம்பந்தன் அவர்கள் அழைத்துச் செல்வது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமன்றி அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் இடம்பெறும் பேச்சுக் குழுவின் உறுப்பினராகவும் சுமந்திரன் அவர்கள் உள்ளார். அந்த அடிப்படையிலேயே கனடாவில் அவர் ஆற்றிய உரை முக்கியத்துவம் பெறுகின்றதுஎன்று திரு கஜேந்திரகுமார் எழுதியுள்ளார்.
அவர் எழுதியதைப் படிக்கும் எவருக்கும் சுமந்திரன் மீது அவருக்கு  இருக்கும் காய்ச்சல் மற்றும் வயிற்றெரிச்சல் தெட்டெனத் தெரியவரும். அவர் விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி திரு சுமந்திரன் இன்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். ததேகூ இன் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். கட்சி செயற்பாடுகளில் அதன் கொள்கை வகுப்பில் அவர் பெரும் பங்கு வகிக்கிறார்.  ததேகூ பிரதிநித்துவம் இல்லாத அம்பாரை தேர்தல் மாவட்ட அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.  ததேகூ இன் வளர்ச்சிக்குத்  தனது நேரத்தையும் உழைப்பையும் நல்குகிறார்.  சட்டம் படித்துத் தொழில் செய்து கொண்டிருந்த போதே அவர் ததேகூ க்கு  ஆதரவாக இருந்திருக்கிறார். அவரது நுண்மாண் நுழைபுலத்தை ததேகூ நீண்ட காலமாகப் பயன்படுத்தி வந்திருக்கிறது. அவற்றை எல்லாம் மனதில் வைத்துத்தான்  ததேகூ நா.உ. பதவியை தானாக முன்வந்து கொடுத்தது.  திரு சுமந்திரன் அதற்கு ஆசைப்படவில்லை. அதைக் கெஞ்சிக் கேட்டுப் பெறவில்லை. நியமனத்துக்கு இரண்டு நாள் இருக்கும் போதுதான் அவர் தனது ஒப்புதலை நல்கினார். இதனால் தொழில் அடிப்படையில் அவருக்கு பொருள் இழப்புத்தான்.  ஆனால் அதையிட்டு அவர் கவலைப் படவில்லை.
திரு சுமந்திரனுக்கு ததேகூ இன் தலைமை  இன்று மதிப்புக் கொடுக்கிறது என்றால், அதிகாரம் கொடுக்கிறது என்றால் அவை அவரது அறிவுக்கும் உழைப்புக்கும்  கொடுக்கிற மதிப்பளிப்பு என்றே நல்லோர்கள் வல்லோர்கள் சொல்வார்கள்.  ஆனால் திரு கஜேந்திரகுமார்   அவருக்குக் கொடுக்கிற மதிப்பையும் அதிகாரத்தையும் பார்த்து வயிற்றெரிச்சல் அடைகிறார்.  திரு கஜேந்திரகுமார் ததேகூ இல் இருந்து கேட்பார் புத்தியைக் கேட்டு விலகாமல் இருந்திருந்தால் - இலண்டனில் உள்ள சிலர் அவருக்குக் கொம்பு சீவி விடாமல் இருந்திருந்தால் - அவரைப் பப்பாளி மரத்தில் ஏற்றி விழுத்தாது இருந்திருந்தால் - அவருக்குத் திரு சுமந்திரனை விட  அதிக அல்லது சமமான மதிப்பும் அதிகாரமும் கிடைத்திருக்கும்.  ததேகூ உடைத்துக் கொண்டு வெளிவரும் வரை தலைவர் சம்பந்தன் திரு கஜேந்திரகுமார் மீது மிகுந்த அன்பும் மதிப்பும் வைத்திருந்தார்.  அதையிட்டுக் காலம் சென்ற மாமனிதர் ரவிராஜ் அவர்களுக்கு ஆதங்கம் இருந்தது எல்லோரும் அறிந்த உண்மை.
திரு சுமந்திரன் மீது திரு திரு கஜேந்திரகுமார் காய்கிறாரே?  திரு சுமந்திரனும் அவரைப்  போல பத்தி அரசியல் நடத்திக் கொண்டு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாரா?  திரு  சுமந்திரன் கடந்த ஒக்தோபர் மாதக் கடைசியில் அமெரிக்கா, கனடா,  பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கு ததேகூ நா.உறுப்பினர்களோடு செலவு மேற்கொண்டிருந்தார். இந்த நாடுகளில் கிட்டத்தட்ட இரண்டு கிழமைகள் தங்கி நின்ற காலத்தில் இராசாங்க திணைக்களத்தில் தொடர்ந்து நடந்த மூன்று நாள் பேச்சு வார்த்தை, கனடாவில் ஒக்தோபர் 30 மாலை நடந்த பொதுக் கூட்டம், இரவு ததேகூ (கனடா) அளித்த விருந்து,  அடுத்தநாள் ஒட்டாவாவில்  கனடிய வெளியுறவு அமைச்சு அதிகாரிகளோடான சந்திப்பு,  மீண்டும்  திரு சம்பந்தரோடு அமெரிக்கா சென்று அய்யன்னா அதிகாரிகளோடு சந்திப்பு, அமெரிக்க தமிழ்ச் சங்க ஆண்டுக் கூட்டத்தில் பேச்சு, பின்னர் பிரித்தானியாவில் ததேகூ (பிரித்தானியா) அளித்த விருந்து,  ஊடகவியலாளர் சந்திப்பு,  தொலைக்காட்சி, வானொலிகளில் நேர்காணல் என ஓய்வு உறக்கமின்றிச்  செயல்பட்டார்.
இப்போது மீண்டும் கனடாவுக்கு கடந்த சனவரி இரவு வந்த  சுமந்திரன் அடுத்த நாள் சனிக்கிழமை மாலை ஒன்ரேறியோ மாகாண முதல்வர் டோல்ரன் மக்கின்ரியோடு சந்திப்பு,  இரவு கனடிய தமிழர் பேரவை பொங்கல் விருந்தில்  பேச்சு, அடுத்த நாள் ஞாயிறு பகல் ததேகூ (கனடா) சந்திப்பு,  மாலை கனடிய சட்டத்தரணிகள் சங்கம் அளித்த விருந்து,  இரவு மணிக்கு தமிழ்த் தொலைக்காட்சியின் வெளிச்சம் நிகழ்ச்சியில் பங்கேற்பு.  அடுத்த நாள் திங்கள்கிழமை காலை அமெரிக்க இராசாங்க திணைக்கள அதிகாரிகளோடு நியூயோர்க்கில் சந்திப்பு, அதற்கடுத்த நாள் காலை கனடா வந்த திரு சுமந்திரன் ஆளும் கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரோடு சந்திப்பு.  இறுதியாகப் பிற்பகல் விமானத்தில் கொழும்பு போய்ச் சேர்ந்தார்.
சேர்ந்தவர் ஓய்வு எடுத்தாரா? இல்லை.   முருகண்டிப் பிள்ளையார் கோயில் காணியை கலாச்சார அமைச்சு கையகப்படுத்துவதற்கு எதிரான வழக்கில் அறங்காவல் அவை சார்பாக யாழ்ப்பாண மாவட்ட  நீதிமன்றத்தில் தோன்றி வாதாடினார்.
ஆனால் கஜேந்திரகுமாரின்  கதை என்ன?   அவர்  நா.உ. ஆக இருந்த காலத்தில் அமெரிக்கா வந்தால் ஒரு நாளில் ஒரேயொரு சந்திப்புக்கு மட்டும் ஒத்துக் கொள்வார்.   அதற்கு மேல் எந்தச் சந்திப்புக்கும்   ஒத்துக் கொள்ள மாட்டார்.   
புறநானூற்றில் ஒரு பாடல். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாடியது.   திரு கஜேந்திரகுமார் அதனைப் படித்திருப்பதற்கு வாய்ப்பில்லை.  அந்தப்பாடல் இது.
.........................................பிறப்போரன்ன உடன்வயிற்றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்
ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்
முத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்

...............................................................................     (புறம் 183)
ஒரே குடும்பத்தில் பிறந்தாலும் கற்றவனையே தாய் விரும்புவாள்ஒரு குடும்பத்தில் அகவையால்  மூத்தவனைக் காட்டிலும் கற்ற ஒருவனையே,இளையவனே ஆகினும் முந்துரிமை தந்து போற்றுவாள்.  அறிவுடையோன் வழியில்தான் ஆட்சி செல்லும்!
திரு சுமந்திரன் 'கூட்டமைப்பில் மிகவும் அனுபவம் குறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக இருந்தாலும்' அவர்  அரசியலுக்குப் புதிதென்றாலும்  அவரது படிப்பு, நேர்மை, முயற்சி, வினைத்திறன் காரணமாக அவர் எல்லோராலும் மதிக்கப்படுகிறார். திரு சம்பந்தன் போன்ற மூத்த அரசியல்வாதிக்கு திரு சுமந்திரனின் சட்ட அறிவு தேவைப்படுகிறது. அதனல் அவரைப் பேச்சு வார்த்தைகளின் போது தன்னோடு கூட்டிப் போகிறார். இது என்னைப் போன்றோருக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும்  இருக்கிறது. திரு சுமந்திரன் ததேகூ க்கு கிடைத்த  ஒரு சொத்தாக (Asset)நினைக்கிறோம். ஆனால் திரு திரு கஜேந்திரகுமார் மட்டும் பொறாமையால் வயிற்றெரிச்சல் படுகிறார். வசைமாரி பாடுகிறார்.  திரு சுமந்திரன் மிகவும் அனுபவம் குறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் என எள்ளி நகையாடுகிறார்.  ஏதோ தான்  இருபது, முப்பது  ஆண்டு பட்டறிவு வாய்ந்த  நாடாளுமன்ற உறுப்பினர் போலப் பேசுகிறார்.   இந்த மனப்போக்கு  திரு கஜேந்திரகுமார் போன்ற ஒருவருக்கு அழகல்ல. ஆண்மையும் அல்ல.
"நான் எழுதிய (?)  பத்தியில் சுமந்திரனைப் பாராட்டி எழுதியிருக்கிறேன். படிக்கவில்லையா?" என  திரு கஜேந்திரகுமார்  கேட்பது தெரிகிறது.  ஆனால் அது வஞ்சகப் புகழ்ச்சி. ஒருவரைத் தாழ்த்த வேண்டும் என்றால் அவரை வஞ்சகமாக புகழ்ந்துவிட்டு வீழ்த்துவது ஒரு வகை உத்தி. இந்த உத்தியைத்தான்  திரு கஜேந்திரகுமார் கடைப்பிடித்துள்ளார்.
"தத்துவரீதியாக சுமந்திரன் அவர்கள் மேலே கூறியுள்ள விடயங்களுடன் முரண்பட முடியாது. ஆனால் அவர்கூறும் இன மீள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் என்பதன் பிரதான இரு விடயங்களான, நீதி நியாயங்களை அடைந்து கொள்ளுவது தொடர்பாகவும் இனப்பிரச்சினைக்கான தீர்வை அடைந்து கொள்வது தொடர்பாகவும் அவர் முன்வைத்துள்ள ஆபத்தான அணுகுமுறைகள் பற்றியே நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது" என்பது கஜேந்திரகுமாரின் விமர்சனம்.  அந்த ஆபத்தென்ன?
"புலம்பெயர் தமிழ் மக்கள் சர்வதேச மட்டத்தில் அரசாங்கத்திற்கு எதிராகவும் ராஐபக்சவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இராணுவத் தளபதிகளுகு எதிராகவும் மேற்கொள்ளும் வழக்குத் தாக்கல் நடவடிக்கைகளும் ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான ஏனைய நடவடிக்கைகளும் சர்வதேச சமூகத்திடமிருந்து வரும் அழுத்தங்களும் சிறீலங்கா அரசாங்கத்தினதும் ராஐபக்கசவினதும் செல்வாக்கை சிங்கள மக்கள் மத்தியில் அதிகரிக்கவே செய்கின்றது என்றும் கூறியுள்ளார். இந்த விடயத்திற்கு நாம் ஓர் தீர்வு காணவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இவரது உரையூடாக அவர் கூற முற்படும் விடயம் நீதிநியாயம் பெறுவதற்கும் தீர்வு பெறுவதற்கும் முதற்கட்டமாக ஆட்சி மாற்றம் தேவை என்பதாகும். அவ்வாறு ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு ஆட்சியிலுள்ள ராஐபக்சவின் செல்வாக்கை அதிகரிக்கும் வகையிலான செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடாது. ஆனால் புலம்பெயர் தமிழ் மக்களது செயற்பாடுகள் ராஐபக்சவின் செல்வாக்கை வளர்ப்பதாகவே அமைக்கின்றது என்றும் குறிப்பிடுகின்றார். இவ்வாறு செயற்பட்டால் ஓர் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது கடினம் என்றும் சுட்டிக்காட்டுகின்றார்."
இதைப் படிக்கும் போது "எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கெடுத்தான்" என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. அல்லது "வேண்டாப் பெண்ணுக்கு கால் பட்டாலும் குற்றம் கை பட்டாலும் குற்றம்" என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது. திரு திரு கஜேந்திரகுமார் எந்த வெட்கமோ துக்கமோ இல்லாமல் வேண்டும் என்று திட்டமிட்டு திரு சுமந்திரன் சொல்லாததைச் சொன்னதாகப் பொய் பேசுகிறார். திரித்துப் பொருள் கொள்கிறார்.
உண்மையில் திரு சுமந்திரன் தனது ஆங்கில உரையில் என்ன சொன்னார்?  அதனை அப்படியே கீழே தருகிறேன்.  படித்துப் பாருங்கள். 
My dear friends in most other places where post-conflict  there has been  true reconciliation there has been a regime change first, there has to be  a change in the political order first  and then as they step into a new order they look back and wonder how to deal with all these evils of the past and they have worked out various forms of reconciliation. But in Sri Lanka, it is the same government that led the onslaught during the war that is still in office. In point of fact - this is a matter I want you to consider carefully - each time there is some action taken internationally against the government of Sri Lanka the government gets more popular back home.  Each time a case is filed in another country against president Rajapakse or any of his brothers or his military commanders their popularity back home increases tremendously.   We have  to find a solution for this phenomenon.    We have to not just   inform the world outside but also the people back home our Sinhala brethren the true picture must be shown to them.
"அருமை நண்பர்களே! வேறு இடங்களில் மோதலுக்குப் பின்னர் உண்மையான நல்லிணக்கத்திற்கு முதலில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டிருக்கிறது.அரசியல் ஒழுங்கில் மாற்றம் தேவை. அவர்கள் ஒரு புதிய ஒழுங்கமைப்பை உருவாக்க எத்தனிக்கும் போது கடந்த காலங்களில் நடந்த தீவினைகளை எப்படிக் கையாள்வது என்பதைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு இணக்கத்துக்கான பல்வேறு வடிவத்தில் தீர்வுகளை வகுத்தார்கள்.  ஆனால் சிறிலங்காவில் எந்த அரசு கடுந்தாக்குதலை நடத்தியதோ அந்த அரசு ஆட்சியில் இருக்கிறது.  இன்னும் சொல்ல வேண்டும் என்றால் - இதை நீங்கள் கவனமாக ஆராய வேண்டும் - ஒவ்வொரு முறையும் அனைத்துலக சமூகம் சிறிலங்கா அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் போது நாட்டில்  அரசின் செல்வாக்கு மேலும்  அதிகரிக்கிறது.  ஒவ்வொரு முறையும்  ஆட்சித்தலைவர் இராசபக்சே அல்லது அவரது உடன்பிறப்புக்கள் அல்லது இராணுவ தளபதிகள் ஆகியோருக்கு எதிராக  நாட்டுக்கு வெளியே வழக்கு வைக்கும் போது அவர்களுடைய செல்வாக்குப் பயங்கரமாக அதிகரிக்கிறது.  இந்தக் காரண காரியத் தொடர்புக்கு நாம் ஒரு தீர்வைக் காண வேண்டும்.  வெளியுலக நாடுகளுக்கு மட்டும் சொன்னால் போதாது.  நாட்டில் உள்ள சிங்கள உடன்பிறப்புக்களுக்கும் உண்மையான நிலைமையை விளக்க வேண்டும்."
இந்த உரையில் திரு திரு கஜேந்திரகுமார் சொல்வது போல்  "இவ்வாறு ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு ஆட்சியிலுள்ள ராஐபக்சவின் செல்வாக்கை அதிகரிக்கும் வகையிலான செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடாது. ஆனால் புலம்பெயர் தமிழ் மக்களது செயற்பாடுகள் ராஐபக்சவின் செல்வாக்கை வளர்ப்பதாகவே அமைக்கின்றது என்றும் குறிப்பிடுகின்றார். இவ்வாறு செயற்பட்டால் ஓர் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது கடினம் என்றும் சுட்டிக்காட்டுகின்றார்" என திரு சுமந்திரன் பேசியிருக்கிறாரா? பின் ஏன்  திரு கஜேந்திரகுமார் நாசி கிட்லரின் பரப்புரை அமைச்சரை விஞ்சும் வண்ணம் திரு சுமந்திரன் சொல்லாததை எல்லாம் சொன்னதாக எழுதுகிறார்? அவருடைய  பேச்சை ஏன் திரிக்கிறார்? ஆங்கிலமொழிப் பஞ்சம்  காரணம் இல்லை.  அதில் அவருக்கு ஆளுமை இருக்கிறது. அப்படியென்றால் தமிழறிவுப் பஞ்சம் காரணமா? அல்லது வேறு யாராவது அவர் பெயரில் எழுதுகிறாரா?
அண்மையில் தென்னாபிரிக்கா, எகிப்து, லிபியா, துனீசியா போன்ற நாடுகளில் நிலைகொண்டிருந்த  கொடுங்கோல் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னரே முன்னைய ஆட்சியாளர் அரங்கேற்றிய மனித உரிமை மீறல்களை, போர்க்குற்றங்களை,  மானிடத்துக்கு எதிரான குற்றங்களை விசாரித்து நியாயம் வழங்க வழி பிறந்தது.  இதில் தென்னாபிரிக்கா ஏனைய நாடுகளுக்கு வழிகாட்டியாக விளங்கியது.
மணலில் கயிறு திரிக்கும் திரு கஜேந்திரகுமாருக்கு இன்னொரு அவலும் கிடைத்திருக்கிறது.  "நாம் விளக்காவிட்டால் அந்த மக்கள் சிங்கள அரசியல்வாதிகள் சொல்லும் வடிகட்டிய செய்திகளைத்தான் கேட்பார்கள்.  சிங்கள அரசியல்வாதிகள் தமிழர்கள் என்ன கேட்கிறார்கள் என்பதைச் சொல்கிறார்கள்.  தமிழர்கள் நாட்டைப் பிரிக்க முயற்சிக்கிறார்கள் என அவர்களைப் பயமுறுத்துகிறார்கள். ஆம் நாங்கள் நாட்டைப் பிரிக்க முற்பட்டது உண்மைதான்.  ஆனால் இன்றைய சூழலில் நாம் எமது நிலைப்பாட்டை மிகத் தெளிவாக சிறிலங்கா அரசுக்கு எடுத்துச் சொல்லியுள்ளோம்.  அனைத்துலக சமூகத்துக்கும் தெளிவாகச்  சொல்லியுள்ளோம்.  தீர்வு தேவை என நினைக்கும் ஏனையோருக்கும் ஒன்றுபட்ட நாட்டில் ஒரு தீர்வை எட்ட நாம் அணியமாக இருக்கிறோம் எனச் சொல்லியுள்ளோம். அது எங்களது உரிமை.  எமது உரிமைகளை உள்ளக தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் பெற்றுக் கொள்ள வழி இருக்கிறது. ...."  என்ற திரு சுமந்திரனின் பேச்சு. 
If we don't tell them, they get a distilled form of information from the Sinhala politicians.     They tell them what the Tamils' want.  They frighten them that the Tamils are trying to divide the country. Well we did do that.    But,  in the present context  we have very clearly articulated  our stand to the government of  Sri Lanka,  we have articulated our stand  to the international community  and to every one willing to find a solution within an undivided country.  That is our right. Our right to self- determination can be exercised in that manner internally. 

இவ்வாறு திரு சுமந்திரன் சொல்லியதை வைத்துக்கொண்டு "பார், பார் தமிழ் மக்கள் வேலைத்திட்டமொன்றை மேற்கொள்ள வேண்டுமாம். அதாவது நேரடியாக சிங்கள மக்களிடம் சென்று தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சினை உள்ளது, என்ன வேண்டும் ஏன் வேண்டுமென்ற நியாயங்களை தெளிவுபடுத்த வேண்டுமாம். தமிழ் மக்கள் நாட்டைப் பிரிப்பதற்கு முற்படுகின்றார்கள் என்று சிங்கள தலைவர்கள் சிங்கள மக்களுக்கு பொய்களை கூறி வருகின்றனர். அதனால் தற்போதுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு பிரிக்கப்படாத நாட்டுக்குள் தீர்வைக்காண வேண்டும் என்பதாகும் என்பதனை தெளிவுபடுத்தியுள்ளோம் என்றும் கூறியுள்ளார். அத்துடன் இவ்விடயங்களை நேரடியாக சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்" என திரு கஜேந்திரகுமார் புலம்புகிறார்.
முன்னைய காலங்களில் மேற்கொண்ட சில நடவடிக்கைகள் சரிவராது தோற்றுப் போய்விட்டால் அதனை மீண்டும் கையில் எடுக்கக் கூடாதா? தந்தை செல்வநாயகம் காலம் தொட்டு நாம் அனைத்துலக சமூகத்திடம் எமது நிலைப்பாட்டை விளக்கி வருகிறோம்.  அதற்காக இப்போது சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லியாகி விட்டது,  இனிச் சொல்லத் தேவையில்லை, அது வீண்வேலை" என்று சொல்ல திரு  கஜேந்திரகுமார் தயாரா?
ஆயுத முனையில் தமிழீழம் கேட்டால் சிங்கள மக்களது விருப்பு வெறுப்புப் பற்றி தமிழர் தரப்பு கவலைப்படத் தேவையில்லை. அப்படியிருந்தும் வி.புலிகள் புலிகளின் குரல் வானொலியில் சிங்கள மக்களுக்கு தங்கள் பக்க நியாயத்தை எடுத்துச் சொல்ல சிங்களத்திலும் ஒலிபரப்புச் செய்தார்கள். அதனை திரு கஜேந்திரகுமார் வசதியாக மறந்துவிட்டார்.
ததேகூ தலைவர் திரு சம்பந்தன் படித்தபாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் அறிக்கை பற்றி 105 பக்க பகுப்பாய்வு அறிக்கையை சிங்களத்திலும் வெளியிட்டார்.  அப்படிச் செய்வதுதான் புத்திசாலித்தனம். அரசியல் இராசதந்திரம். ஆனால் இவை தேவையில்லை என்று திரு கஜேந்திரகுமார் வீம்புக்கு வாதிடுகிறார். "இக்கருத்தானது, தமிழ்மக்கள் ஆக்கபூர்மான பணிகளில் ஈடுபடுவதனை திசைதிருப்பும் கபடநோக்கம் கொண்ட உத்திகளே ஆகும்" எனப் பிதற்றுகிறார்.
திரு சுமந்திரன் தனது 40 மணித்துளி பேச்சில் இறந்த கால, சமகால,  எதிர்கால அரசியல் பற்றித்   தெளிவான விளக்கம் கொடுத்தார். 13 ஆவது சட்ட திருத்தத்தை வரலாற்று அடிப்படையில் நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆன காரணத்தினால்தான் நாம் அரசோடான பேச்சு வார்த்தையின் தொடக்கத்தில் எமது முன்மொழிவுகளை அரசிடம் சமர்ப்பித்தோம் என்றார்.
திரு சுமந்திரன் தனது பேச்சின் முடிவில் புலம்பெயர் தமிழர்களது கடமை பற்றிச் பேசினார். அவர்கள் தாயக மக்களைத் திரும்பவும் அவர்கள் காலில் நிற்பதற்கு புலம்பெயர் தமிழர்கள் கைகொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். புலம்பெயர் தமிழர்களது இலக்கும் ததேகூ இலக்கும் ஒன்றேதான் என்றும் சொன்னார்.
I thank you for this opportunity  given to me  to address you and bring  the concerns  back home to you.     And  I am  looking forward for greater participation. You also would have seen  the most recent     statement by the Global Tamil Forum    supporting the    talks  the TNA is having  with the government. We need to consolidate this more so that  the strength of the     Diaspora  community will be a political strength -   I know it is already there -   but it needs to  be demonstrated  in a  very real way to  the world. It must be a political strength of our  people   back  home who are  struggling to  get up  - stand up  - from what happened to them     3 years ago. We need     that help  and that    will be converted to    real strength   when we act in unison -   when we act with understanding -   not necessarily  saying the same thing   tactically   you might have to say it  differently - but understanding each other and  knowing our goal is one.
"இங்கு பேசுவதற்கு என்னை அழைத்தற்கும் அதன் மூலம் எமது தாயக மக்களின் இடர்ப்பாடுகளை முன்வைப்பதற்கும் வாய்ப்பளித்த உங்களுக்கு  எனது  நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  எதிர்காலத்தில் நீங்கள் பெரியளவில் (போராட்டத்தில்) பங்குகொள்வீர்கள் என எதிர்பார்க்கிறேன். அனைத்துலக தமிழர் அவை அண்மையில் விடுத்த அறிக்கையைப் படித்திருப்பீர்கள். அந்த அறிக்கையில் ததேகூ அரசோடு நடத்திக் கொண்டிருக்கும் பேச்சு வார்த்தைக்கு அனைத்துலக தமிழர் அவை தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. அதை நாம் மேலும் பலப்படுத்தல் வேண்டும். புலம்பெயர் சமூகத்திடம் அரசியல் பலம் இருக்கிறது. அதனை நான் அறிவேன்.   ஆனால் அந்தப் பலம் உலகத்துக்குச் செயல்வடிவத்தில்  மெய்ப்பித்துக் காட்டப்பட வேண்டும்.  அது எமது தாயகத்தில்  மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அழிவின் பின்  தங்கள் சொந்தக் காலில் மீண்டும்  எழுந்து நிற்கப் போராடும் எமது தாயக மக்களின் அரசியல் பலத்துக்கு வலு சேர்க்கும்.  அந்த உதவி எமக்குத் தேவை. அந்த உதவி உருப்படியான பலமாக மாற்றப்பட வேண்டும்.  நாங்கள் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும்.  நாம் ஒன்றுபட்டு நல்ல புரிந்துணர்வோடு - இதன் பொருள் ஒரே மாதிரிப் பேசுவதல்ல  நீங்கள் தந்திரத்தோடு வேறுமாதிரி சொல்ல வேண்டியிருக்கும் - ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு  தெரிந்து கொண்டு   செயல்பட வேண்டும். எமது இலக்கு ஒன்றுதான்."  
திரு சுமந்திரன் தனது பேச்சை முடித்த போது அரங்கில் அமர்ந்திருந்த மக்கள் எழுந்து நின்று கை தட்டித்  தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். பாவம் திரு கஜேந்திரகுமார். அந்தக் காட்சியை அவர் காணவில்லை. கண்டிருந்தால் அவரது வயிற்றெரிச்சல் எல்லை கடந்து போயிருக்கும்.

No comments:

Post a Comment