Translate

Tuesday 21 February 2012

Feb21 ஜெனீவாவில் இலங்கையை இந்தியா ஆதரிக்க கூடாது: வைகோ

ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்தியா செயல்படக்கூடாது என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ வலியுறுத்தினார். 


விடுதலைப்புலிகள் மீதான தடையை ரத்து செய்யக் கோரி, மதிமுக பொதுச் செயலர் வைகோ தொடர்ந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 9-ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று ஒத்திவைத்தது. 

நீதிமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் பேசிய வைகோ, "ஓராண்டுக்கு முன்பு இந்த பிப்ரவரி 20-ஆம் நாள் தமிழர்கள் உள்ளத்தில் துன்பமும் துயரமும் தாக்கிய நாளாகும். தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மையார் மறைந்த துயர நாளாகும். 


அன்னை பார்வதி அம்மையார் மிகவும் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான  நிலையில் சிகிச்சைக்காக தமிழ்நாட்டுக்கு முறையான விசா அனுமதி பெற்று வந்தபோது, சென்னை விமான நிலையத்தில் விமானத்தை விட்டே கீழே இறங்க விடாமல் ஈவிரக்கமின்றி, மனிதாபிமானமின்றி திருப்பி அனுப்பிய கொடுமைக்கு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசும், அன்றைய முதல்வர் கருணாநிதியும்தான் காரணம் ஆவார்கள்.
 

அதன்பின்னர் அன்னை பார்வதி அம்மையார் யாழ்ப்பாணத்துக்கே சென்று சிறுகச் சிறுக உடல் நைந்து, உயிர் நலிந்து தமிழர்களைத் துயரக் கடலில் ஆழ்த்தி மறைந்தார்கள். அவர்களது இறுதிச் சடங்குகளைக் கூட சிங்களக் கொடியோர் நடத்த அனுமதிக்கவில்லை. மூன்று தெரு நாய்களைச் சுட்டுக் கொன்று அந்த நாய்களின் உடல்களை அன்னை பார்வதி அம்மையாரின் சிதையில் போட்ட காட்டுமிராண்டிச் செயல் உலகத்தில் இதுவரை எங்கும் நடைபெறாத ஒன்றாகும்.
 

சிங்கள அரசைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு எதிரே மறியல் போரில் ஈடுபட்ட நானும், பழ. நெடுமாறனும், பெரியார் திராவிடர் கழகத்தின் விடுதலை  ராஜேந்திரன் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்களும் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டோம்.
 

ஈழத் தமிழ் இனத்தை அழிக்கப் படுகொலைகள் நடத்திய சிங்கள அரசுக்கும், அதற்கு உடந்தையாகச் செயல்பட்ட காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுக்கும் வரலாற்றில் மன்னிப்பே கிடையாது.  


ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வின் மனித உரிமைக் கவுன்சில் பிப்ரவரி 27-ஆம் தேதி முதல் கூட இருக்கிறது.
 

ஈழத் தமிழர்களுக்கு விரோதமாக துரோகம் இழைத்து வரும் இந்திய அரசு நடைபெற்ற தமிழ் இனப் படுகொலையில் கூட்டுக் குற்றவாளியாகும் என்பது வரலாற்றில் மறைக்க முடியாத உண்மையாகும்.
 

2009-இல் இந்த மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் கொலைகார சிங்கள அரசுக்கு ஆதரவாகத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய இந்திய அரசு, இப்பொழுது ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்திலும் அத்தகைய துரோகத்தைச் செய்யக் கூடாது என்று இந்திய அரசுக்கு எச்சரிக்கை செய்கிறேன்," என்றார் வைகோ.

No comments:

Post a Comment