Translate

Monday 9 April 2012

குணரட்ணம் கடத்தப்பட்ட சம்பவம்: கிரிபத்கொடவில் நடந்தது என்ன?; வெளிவரும் புதிய தகவல்கள்


குணரட்ணம் கடத்தப்பட்ட சம்பவம்: கிரிபத்கொடவில் நடந்தது என்ன?; வெளிவரும் புதிய தகவல்கள்
news
முற்போக்கு சோசலிசக் கட்சியின் தலைவர் பிறேமகுமார் குணரட்ணம், அந்தக் கட்சியின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவரான திமுது ஆட்டிக்கல ஆகியோரை தாம் கைது செய்யவில்லை என்று இலங்கை பாதுகாப்புத் தரப்புகள் கைவிரித்துள்ள நிலையில், இவர்கள் கடத்தப்பட்ட சூழல் பற்றிய பின்னணித் தகவல்கள் பல வெளியாகியுள்ளன.
ஆயுதம் தாங்கிய நபர்கள் சிலர் நேற்று அதிகாலை குணரட்ணத்தின் வீட்டுக்குச் சென்றதை அயல்வீட்டுக்காரப் பெண் ஒரு வர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து வெளிவந்துள்ள மேலதிக தகவல்கள் வருமாறு:
இன்று திங்கட்கிழமை நடைபெறவிருந்த முற்போக்கு சோசலிசக் கட்சியின் முதலாவது மாநாடு தொடர்பாக, வெள்ளிக்கிழமை மாலை மடிவெல என்ற இடத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட குணரட்ணமும், திமுது ஆட்டிக்கலவும் அதன் பின்னரே இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டனர் என்று கூறப்படுகிறது.
குறித்த கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை மாலை 6. 30 மணியளவில் முடிவடைந்தது. அதையடுத்து இருவரும் தத்தம் வீடுகளுக்குப் புறப்பட்டுச்சென்றனர். குணரட்ணம் கட்சிச் செயற்பாட்டாளரான மெய்க்காவலர் ஒருவருடன் தனியான வாகனம் ஒன்றில் புறப்பட்டுச் சென்றார்.
அவர்கள் இருவரும் நேராக கிரிபத்கொட பகுதியில் உள்ள வீட்டுக்குச் சென்றனர்.
கிரிபத்கொடவில் இலக்கம் 291/1 கெமுனு மாவத்தையில் உள்ள வீட்டில் குணரட்ணம் தனியாகவே வசித்து வந்தார்.
அவரை அங்கு இறக்கி விட்டபின்னர், அவரது மெய்க்காவலர் வேறு இடத்துக்குச் சென்றார்.
இரவு 11 மணியளவில் தனது மெய்க்காவலருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட குணரட்ணம், தன்னை அதிகாலை 5 மணியளவில் வந்து ஏற்றிச் செல்லுமாறு கூறியிருந்தார்.
குணரட்ணம் வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் கட்சியின் செயற்பாட்டாளர் ஒருவருடன் தொலைபேசியில் உரையாடினார். அதுவே அவருடனான கடைசித் தொடர் பாடலாக இருந்தது. அதன் பின்னர் அவருடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.
அதிகாலை 5 மணிக்கு குணரட்ணத்தை அழைத்துச் செல்ல அவரது மெய்க்காவலர் வாகனத்துடன் அங்கு வந்தார்.
எனினும் நீண்டநேரமாகியும் குணரட்ணம் வெளியே வரவில்லை. சந்தேகம் கொண்ட மெய்க்காவலர் அந்தப் பகுதியை நோட்டமிட்டபோது வீட்டுக்கு வெளியே நான்கு சக்கர வாகனத்தின், சக்கர அடையாளங்களைக் கண்டார். வீட்டின்பின்புறக் கதவு உடைக்கப் பட்டிருந்தது.
குணரட்ணத்தின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கும், அங்கு ஒரு போராட்டம் நடந்ததற்குமான தடயங்களை மெய்க்காவலர் கண்ணுற்றார். அவர் ஏனைய உறுப்பினர்களுக்கு இது தொடர்பாக அறிவித்த பின்னரே குணரட்ணம் கடத்தப்பட்ட விடயம் தெரியவந்தது.
இதேவேளை, குணரட்ணத்தின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் பெண் ஒருவர் பொலிஸாரிடம் பின்வருமாறு சாட்சியம் அளித்துள்ளார்.
"ஆயுதம் தாங்கிய 4, 5 நபர்கள் நேற்று முன்தினம் அதிகாலை 4.30 மணியளவில் குண ரட்ணம் தங்கியிருந்த வீட்டுக்கு வந்தனர். அவர்களில் சிலர் எங்களது வீட்டுக்கு வந்து எரிந்துகொண்டிருந்த மின் விளக்குகளை அணைத்து விட்டு உள்ளே போகுமாறு அச்சு றுத்தும் தொனியில் மிரட்டினர். அதன் பின்னர் வித்தியாசமான சத்தங்களை கேட்க முடிந் தது. ஏதோ ஒரு அசம்பாவிதம் நடப்பதை உணரமுடிந்தது. ஆனாலும் என்ன செய்வதென்று எங்களுக்குத் தெரியவில்லை. 
எனினும் அதிகாலை 5.15 மணிக்கு வெளியே பார்த்தபோது வழக்கத்துக்கு மாறாக எதுவும் தெரியவில்லை. எல்லாமே இயல்பாக இருப்பது போல இருந்தது.'' என்றனர்.
நேற்றுமுன்தினம் அதிகாலை குணரட் ணம் கடத்தப்பட்டபோதும் காலை 8 மணி வரை, அவரது 0713519722 என்ற இலக்கக் கைபேசி இயங்குநிலையில் இருந்தது.
ஆனால் தொடர்பு கொண்டபோது பதில் இல்லை. தற்போது அதன் தொடர்பும் துண்டிக்கப்பட்டு விட்டது. அல்லது அழைப்பு பெறமுடியாத நிலையில் உள்ளது.
நேற்றுமுன்தினம் காலை 8 மணி வரை அந்தக் கைபேசி கிரிபத்கொட பகுதியிலேயே இருப்பதை ஜிபிஎஸ் கணிப்புகள் உறுதிப்படுத்தின என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் மேலதிகமான சான்றுகள் ஏதும் கிடைக்கவில்லை.
அதேநேரம் கலந்துரையாடலை முடித்துக் கொண்டு வெள்ளிக்கிழமை இரவு திமுது ஆட்டிக்கல பஸ் ஒன்றில் தலவத்துகொடவில் உள்ள தனது வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
காணாமற்போயுள்ள திமுது ஆட்டிக்கலவை கடைசியாக பார்த்தவர் கட்சியின் மற்றொரு தலைவரான துமிந்த நாகமுவ.
கொஸ்வத்த பேருந்து நிலையத்தில் அவர் மாலை 6 மணியளவில் திமுது ஆட்டிக்கலவை இறக்கி விட்டார்.
32/14/7 ஹைலெவல் வீதி, ஹெனவத்த, மீகொடவில் உள்ள வீட்டுக்கு திமுது புறப்பட்டுச் சென்றதை நாகமுவ உறுதி செய்துள்ளார்.
ஆனால் மறுநாள் காலையில் அவரது 0770325567 என்ற இலக்க கைபேசிக்கு அழைத்தபோது பதில் கிடைக்கவில்லை.
நேற்றுமுன்தினம் காலை 11 மணிவரை அந்தக் கைபேசி இயங்கிக் கொண்டிருந்தது. அவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீட்டுக்குத் திரும்பவில்லை என்பதும் உறுதி யாகியுள்ளது.
குணரட்ணம் காணாமற் போனதையடுத்து பொலிஸ் மா அதிபரிடமும்,கிரிபத்கொட, பிலியந்தல பொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடு செய்யப்பட்டது. "இந்தக் கடத்தல் அரசியல் நோக்கம் கொண்டது. எமது இன்றைய மாநாட்டை நிறுத்துவதற்கான முயற்சியே இது''என்று தெரிவித்துள்ளார் முற்போக்கு சோ\லி\க் கட்சியின் செயற்பாட்டாளர் சேனாதீர குணதிலக.
அண்மையில் விடுமுறைக்காக இலங்கை வந்த குணரட்ணத்தின் மனைவி ஆஸ்திரேலியா திரும்பும்போது விமான நிலையத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
அதேவேளை, இந்தக் கடத்தல் பற்றிய எந்தவொரு முறைப்பாடும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. குற்றப்புலனாய்வுப் பிரிவினராலோ அல்லது வேறு எந்தக்பொலிஸ் பிரிவினராலோ குணரட்ணம் கைது செய்யப்படவில்லை என்று பொலிஸ் திணைக்களப் பேச்சாளர் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியக் குடியுரிமை பெற்றவரான குணரட்ணம் காணாமற்போன விடயம் குறித்து கொழும்பிலுள்ள ஆஸ்திரேலிய தூதரகத்திடமும் முறையிடப்பட்டுள்ளது.
குணரட்ணத்தை இலங்கை அரச கடுமையாகக் கண்காணித்து வந்ததாக நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளதாக அவரது கட்சியினர்  தெரிவிக்கின்றனர்.
இவர்கள் இருவரையும் அரச படையினரே கடத்தியுள்ளனர் என்று கட்சி உறுப்பினர்கள் நம்புகின்றனர்.
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, குறிப்பாக வடக்கில் தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்து இந்தக் கட்சி பரப்புரைகளை மேற்கொள்ளத் தொடங்கியதன் விளைவாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முற்போக்கு சோசலிசக் கட்சியினர் கருதுகிறார்கள்.        

No comments:

Post a Comment