Translate

Friday 13 April 2012

தன் பக்கம் பிழையினை வைத்துக்குகொண்டு அரசு நியாயம் பேசுவதில் அர்த்தமில்லை -இரா.சம்பந்தன்


பேச்சுவார்த்தையினை உடனடியாக ஆரம்பிக்கும் அறிகுறி எதுவும் அரசாங்கத்திடம் இல்லை. அவ்வாறான முயற்சிகள் எதனையும் அரசு இதுவரை மேற்கொள்ளவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழு விவகாரத்தில் எழுந்த முரண்பாடுகள் காரணமாக இடைநிறுத்தப்பட்ட பேச்சுக்கள் மீண்டும் ஆரம்பிக்கும் சாத்தியம் உள்ளதாகவும் அது தொடர்பில் கூட்டமைப்பின் தலைமைப் பீடத்திடமிருந்து சாதகமான சமிக்ஞை கிடைத்துள்ளதாகவும் அரச தரப்புப் பேச்சுக்குழுவின் பிரதிநிதி நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேயசிங்க குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் பேச்சு ஆரம்பமாகும் சாத்தியம் உள்ளதாக அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஜீவ விஜேயசிங்க தெரிவித்திருக்கும் கருத்து அடிப்படையற்றது என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
பேச்சு இடைநிறுத்தப்பட்டு நான்கு மாதங்கள் கடந்துவிட்டன. மீண்டும் பேச்சை ஆரம்பிப்பதற்கான செய்திகள் எவையும் அரசிடம் இருந்து எமக்குக் கிடைக்கவில்லை.
அரசாங்கத்துடனான பேச்சுக்களில் இருந்து கூட்டமைப்பு விலகிக் கொள்ளவில்லை. அரசுதான் தம்பாட்டில் பேச்சை இடைநிறுத்தியது. எனவே அவர்கள் தான் அதனை மீள ஆரம்பிப்பது தொடர்பிலும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பேச்சுக்களுக்கு நாம் எப்போதும் தயாராகவே உள்ளோம். தன் பக்கம் பிழையினை வைத்துக்குகொண்டு அரசு நியாயம் பேசுவதில் அர்த்தமில்லை என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment