Translate

Friday 9 September 2011

கொன்ற தமிழர்களின் உயிர் போதவில்லையா?

Posted Imageகொன்ற தமிழர்களின் உயிர் போதவில்லையா?

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் கருணை மனுக்களையும் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் தள்ளுபடி செய்துள்ளார். ‘21 ஆண்டு காலம் சிறையில் வாடிய பிறகும், குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்து, 11 ஆண்டுகளுக்குப் பிறகும் இம்மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது இயற்கை நீதிக்குப் புறம்பானது ’ என 26 தமிழர்கள் உயிர்காப்பு வழக்கு நிதிக்குழுத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் குற்றம்சாட்டியிருக்கின்றார்.


1992ம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் 26 பேருக்கும் ஒட்டு மொத்தமாக மரண தண்டனை விதித்தபோது, நிரபராதிகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், பழ.நெடுமாறன் அவர்கள் 26 உயிர்காப்பு அமைப்பை நிறுவி, இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், வழக்கறிஞர் நடராசன் மூலமாக வழக்கை நடத்த ஏற்பாடு செய்தார்.

1999 மே மாதம், உச்சநீதிமன்றம், 19 பேரை விடுதலை செய்தது. மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது, முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன் நால்வருக்கும் மரண தண்டனையை உறுதி செய்தது. அதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழக ஆளுநர் பாத்திமா பீவி அவர்களிடம் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டது. அவர், தமிழக அரசின் கருத்தைப் பெறாமலேயே, தாமாகவே கருணை மனுவைத் தள்ளுபடி செய்தார். இதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் பழ.நெடுமாறன் தொடுத்த வழக்கில், ஆளுநர் தாமாக முடிவு எடுக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. பின்னர் நளினிக்குத் தண்டனை குறைப்பு வழங்கப்பட்டு விட்டது.

இப்போது எஞ்சியிருக்கும் மூவரையும் கழுவேற்றத் துடிக்கின்றது இந்திய மத்திய அரசு. தமிழக ஆளும் அ.தி.மு.கவிற்கும் கொங்கிரசிற்கும் இடையில் இறுகிவரும் முரண்பாட்டிற்குள் இந்த கருணை மனு நிராகரிப்பு அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இலங்கை இனப்படுகொலையில் சிறீலங்கா அரசுடன் கைகோர்த்து நின்று தமிழின அழிப்பிற்கு உதவியது கொங்கிரஸ் அரசு. ராஜீவ் கொலைக்கு பழிக்குபழி வாங்கவே கொங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இவ்வாறான ஒரு முடிவை எடுத்ததாக விமர்சகர்கள் பலராலும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுவருகின்றது. ஒன்றரை இலட்சம் தமிழ் மக்கள் இந்த இன அழிப்புப்போரில்சிக்கி பலியாகியுள்ளனர்.

ஆனாலும், கொங்கிரஸ் அரசுக்கு இன்னமும் தமிழ் மக்களின் உயிர்கள் போதவில்லைப்போலும். மேலும் மேலும் தமிழர்களின் உயிர்களை பறித்துவிடவே அது விரும்புகின்றது என்பதைத்தான் இந்த கருணை மனு தள்ளுபடியும் சொல்லிநிற்கின்றது. ராஜீவ் கொலையில் இன்னமும் கண்டுபிடிக்கப்படாத மர்மங்களும், குழப்பங்களும், குழறுபடிகளும் நிறைய இருப்பதாக குற்றம்சாட்டப்படுகின்றது. அவை கண்டுபிடிக்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. அத்துடன், இந்த வழக்கு விசாரணைகள் இன்னமும் முடிவுக்கு வந்துவிடவில்லை என்றும் கூறப்படுகின்றது. முடிவுறாத ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றிவிடத் துடிக்கின்றது கொங்கிரஸ் அரசு.

ஆனாலும், சட்டரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை 26 தமிழர்கள் உயிர்காப்பு வழக்கு நிதிக்குழு விரைந்து எடுக்கும் என பழ.நெடுமாறன் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்த வழக்கு வெற்றி பெறவும், மூன்று உயிர்களை மரணக் கயிற்றில் இருந்து மீட்டெடுக்கவும் உலகெங்கும் பரந்துவாழும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மட்டுமல்ல, மரண தண்டனைக்கு எதிராக குரல் எழுப்புகின்ற அனைத்து மனிதநேய அமைப்புக்களும் முன்வரவேண்டும்.
http://www.tamilkath...58//d,view.aspx 

No comments:

Post a Comment