Translate

Saturday 12 November 2011

புலிகளை இந்திய உளவுத்துறையே அழித்தொழித்தது - நோர்வே


இலங்கைச் சமாதான முயற்சிகள் இடம்பெற்ற காலத்தில் இம்முயற்சிகளை ஆதரிப்பதாக இந்தியா வெளிப்படையாக கூறினாலும் தமிழீழ விடுதலைப் புலிகளை உரிய இடத்தில் அடக்கி வைக்க வேண்டும் என நோர்வேயிடம் இந்தியா அந்தரங்கமாக கூறியது என நோர்வேயில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கையில் சமாதான முயற்சிகள் தோல்வியுற்றது ஏன் என்பதை கண்டறிவதற்கு நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கை இன்று வெள்ளிக்கிழமை ஒஸ்லோவில் வெளியிடப்பட்டது.

இவ் அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 2003-2004 இல் சமாதான முயற்சிகள் மெதுவாக சிக்கறுக்கப்பட ஆரம்பித்தபோது கொழும்பு மீது புதுடில்லி அனுதாபம் கொண்டிருந்தது.
2004 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன் தமிழர் அபிலாஷைகளை நிறைவேற்றுமாறு தொடர்ச்சியாக கோரி வந்தது.

ஆனால் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது அதன் இராணுவ ரீதியிலான தெரிவு தொடர்பாக எந்த அழுத்தத்தையும் பிரயோகிக்கவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனிப்பட்ட சந்திப்புகளின்போது எல்.ரி.ரி.ஈ.யுடன் அதிக நட்பாக இருப்பது குறித்து நோர்வேயை இந்தியா விமர்சித்தது.

அத்துடன் எல்.ரி.ரி.ஈ.யை உரிய இடத்தில் வைக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியது' என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 202 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையானது நோர்வே வெளிவிவகார அமைச்சின் ஆவணங்கள் மற்றும் சமாதானச் செயற்பாட்டில் முக்கிய பாத்திரம் வகித்த நபர்களுடனான செவ்விகள் ஆகியவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. 


இலங்கைப் படைகளுக்கு இந்தியா ராடர் மற்றும் புலனாய்வுத் தகவல்களை வழங்கியது. இலங்கைக்கு இராணுவ தாக்குதல் கருவிகளை தான் வழங்கமாட்டாது என இந்தியா கூறிவந்தது. ஆனால் அவற்றை இலங்கை வேறெங்காவது வாங்கிக் கொள்வதை அது ஆட்சேபிக்கவில்லை.

மிக முக்கியமாக, எல்.ரி.ரி.ஈ. மீதான இந்தியாவின் எதிர்ப்பானது இலங்கை அரசாங்கத்திற்கான உறுதியான ஆதரவாக மாறியது' என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் உயிரிழப்புகளை மட்டுப்படுத்துமாறு இந்தியா சில கோரிக்கைகளை விடுத்தாலும் எல்.ரி.ரி.ஈயை தோற்கடிப்பதற்கான இராணுவ நடவடிக்கைகளை தொடர்வதற்கு தாம் ஆதரவளிப்பதை இந்தியா மிகத் தெளிவாக்கியது என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்.ரி.ரி.ஈ.யின் இறுதி நாட்கள் தொடர்பாக இவ்வறிக்கையில் குறிப்பிடுகையில், 'இக்கிளர்ச்சியாளர்களை சூழ்ந்த வலை இறுகிவரும்போது எல்.ரி.ரி.ஈ. சரணடைவது என்பது கொழும்புக்கு மிக மிக குறைந்த ஈர்ப்புடையதாக மாறி வந்தது.

யுத்தத்தின் இறுதியில் எல்.ரி.ரி.ஈ. தப்பியிருப்பதில் இந்தியாவுக்கு ஆர்வம் எதுவுமிருந்ததா என்பதும் சந்தேகமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தேர்தலில் தோற்கடிக்கப்பட்டால் இக்கிளர்ச்சியாளர்களின் உதவிக்கு எவரும் வந்துவிடக் கூடும் என இலங்கை கவலை கொண்டிருந்ததாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இந்திய அமைச்சர் பி. சிதம்பரம் பிரபாகரனுடன் தொடர்புகொண்டு, ஆயுதங்களை கீழே வைப்பார்கள் என்ற முன்னதாகவே தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்றை எல்.ரி.ரி.ஈ. ஏற்றுக் கொள்ளுமாறு யோசனை கூறியதாகவும் நோர்வேயின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
(ஆனால் அவர் எவ்வாறு பிரபாரகரனை தொடர்பு கொண்டார் என்று கூறப்படவில்லை.) எனினும் இந்த நடவடிக்கை விடயம் புலிகள் சார்பு தமிழக அரசியல்வாதியான வைகோவுக்கு கசிந்தது.
'அவர் இதை காங்கிரஸின் ஒரு தந்திரம் எனக்கூறி நிராகரித்ததுடன் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று புலிகளை மீட்கும் என எல்.ரி.ரி.ஈக்கு உறுதியளித்தார்' என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது நடைபெறவில்லை..

No comments:

Post a Comment