Translate

Friday 11 November 2011

அமைதி வழிமுறை தோற்றதை நோர்வே ஆராய்ந்துள்ளது



இலங்கையில் நோர்வேயின் மத்தியஸ்தராக செயல்பட்டவர் எரிக் சொல்ஹைம்
இலங்கையில் நோர்வேயின் மத்தியஸ்தராக செயல்பட்டவர் எரிக் சொல்ஹைம்
இலங்கையில் தோல்வியடைந்த அமைதி வழிமுறை குறித்து நோர்வே ஒரு சுயமதிப்பீட்டைச் செய்துள்ளது.
இலங்கையில் 1997ம் ஆண்டிலிருந்து 2008ம் ஆண்டு வரை அமைதித் தூதுவராக நோர்வே செயல்பட்டிருந்தது.
நோர்வே வெளிநாட்டு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மதீப்பீட்டுப் பணியை, நோர்வேயில் இருந்து இயங்கும் மைகேல்சன் இன்ஸ்டிடியூட் மற்றும் லண்டனில் இருந்து செயல்படும் கீழ்த்திசை மற்றும் ஆப்ரிக்கக் கல்விகள் கழகம் ( சோ-அஸ்) ஆகிய நிறுவனங்கள் இணைந்து செய்திருந்தன.

இந்த அறிக்கை வெளியீட்டு நிகழ்வில், இலங்கைக்கான முன்னாள் சமாதானத்தூதரும், நோர்வேயின் சர்வதேச மேம்பாட்டு அமைச்சருமான, எரிக் சொல்ஹெய்ம், அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை துணைச்செயலர், ரிச்சர்ட் ஆர்மிட்டேஜ், இலங்கையின் முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இலங்கையில் நடந்த மோதலுக்கு முடிவு காண எடுக்கப்பட்ட இந்த அமைதி வழிமுறை தோல்வியில் முடிந்ததற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன என்று இந்த அறிக்கை கூறுகிறது.

மத்தியஸ்தம் தோற்றதன் காரணங்கள்

இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்களை விவரித்த மிக்கெல்சன் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த குன்னார் செர்போ, அமைதி முயற்சி தோல்வியடைந்ததற்கு நான்கு காரணங்களை முக்கியமாகக் குறிப்பிட்டார்.
முதலாவதாக, இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் இந்த அமைதி முயற்சிகளில் இறங்கியபோது கூட, தங்களது லட்சியங்களை நிலைப்பாடுகளை கைவிடாமலேயே வந்தனர். இதனால் அவர்கள் ஒரு அரசியல் தீர்வைக் காணும் முயற்சியில் உளச்சுத்தியுடன் ஈடுபடவில்லை என்று கூறிவிட முடியாது என்று இந்த அறிக்கை கூறுகிறது.
ஆனால் இந்த அமைதி முயற்சி எப்படி அரசியல்ரீதியாக முடியவேண்டும் என்று இந்த இரு தரப்புகளுமே அவர்கள் வரையறுத்துக்கொண்ட நிலையிலிருந்து குறிப்பிடத்தக்க அளவில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யவில்லை என்று அது தெரிவிக்கிறது.

இரண்டாவதாக, இலங்கை நாடு மற்றும் அரசியலில் இருந்த கட்டமைப்பு ரீதியான அம்சங்களும் இந்த அமைதி வழிமுறையைப் பாதித்தன.
இலங்கையில் நிலவும் பரம்பரை அரசியல், உட்கட்சி போட்டிகள், வேண்டியவர்களுக்கு அனுகூலம் செய்யும் அரசியல், தேசியவாத அரசியல் அணி திரட்டல் ஆகியவை நாட்டை சீர்திருத்துவதற்கும் சர்வதேச நாடுகள் தலையிடுவதற்கும் இடைஞ்சலாக இருந்தன.
மூன்றாவதாக, ஒரு பேச்சுவார்த்தை ரீதியிலான தீர்வுக்கு இருந்த வாய்ப்பு என்பது மிகவும் குறுகிய வாய்ப்புதான் என்று இந்த அறிக்கை கூறுகிறது.
அரசியல் மற்றும் ராணுவரீதியிலான சமநிலை இருக்கும் ஒரு நிலை, மேலை நாடுகளோடு ஒத்த கருத்துணர்வில் இயங்கும் ஒரு அரசு இருப்பது, பல தரப்பட்ட சர்வதேச நாடுகளின் ஆதரவு பேச்சுவார்த்தைகளுக்கு இருந்தது என்று ஒரு சாதகமான சூழ்நிலை போன்றவை மிக விரைவிலேயே மாறிவிட்டன.

மிக முக்கியமாக, 2004ம் ஆண்டில் விடுதலைப்புலிகள் இயக்கம் பிளவுண்டது, ராணுவ சமநிலையை, அரசுக்குச் சாதகமாக மாற்றியது என்று இந்த அறிக்கை கூறுகிறது.
இந்த பிளவுக்குப் பிறகு, இரண்டு தரப்புகளுமே மற்ற தரப்புக்கு குறிப்பிடத்தக்க சலுகைகளைக் காட்டவேண்டியதற்கான தேவையைக் குறைத்துவிட்டது என்று இந்த அறிக்கை கூறுகிறது.
நான்காவதாக, ஐக்கிய தேசிய கட்சி அரசு இந்த அமைதி வழிமுறையை, பாதுகாப்பு உத்தரவாதங்கள், சர்வதேச கொடை வழங்கும் நாடுகளிடம் நிதி உதவி, மற்றும் அரசியல் ரீதியாக சிக்கலான பொருளாதார சீர்திருத்தங்கள் ஆகியவை மூலம், சர்வதேச மயமாக்க எடுத்த முயற்சிகள் சிங்கள தேசிய வாத எதிர்வினையைத்தான் தூண்டின என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.
இதன் விளைவாக, ஒரு தேசியவாத முனைப்புள்ள கட்சி இலங்கையில் ஆட்சிக்கு வர உதவியது என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இந்த புதிய அரசு ஆசிய நாடுகளின் ஆதரவுடன் புதிய சர்வதேச பாதுகாப்பு வலையத்தைத் தனக்கு ஆதரவாக அமைத்துக்கொண்டு, விடுதலைப்புலிகள் மீது மேலும் கடுமையான ஒரு அணுகுமுறையை எடுக்கவே உதவியது.
இதன் மூலம் மஹிந்த அரசு இந்த மோதலுக்கு ராணுவ ரீதியான தீர்வை முக்ன்னெடுக்க வழி பிறந்தது.

ஒரு பலவீனமான, மென்மையான நோர்வேயால், இந்த இயங்கு சக்திகளை எதிர்க்க முடியவில்லை என இந்த அறிக்கை கூறுகிறது.
ஒரு கேந்திர தொலை நோக்கு திட்டம் இல்லாமல், துடிப்புடன் செயல்படக்கூடிய சர்வதேச வலையமைப்பு இல்லாமல், இந்த அமைதி வழிமுறை பாதிக்கப்பட்டது என்றும் இருதரப்புகளும், பின் வாங்கமுடியாத விட்டுக்கொடுப்புகளையும், உறுதிமொழிகளையும் தரவைப்பதற்கும் , அவற்றை இருதரப்பும் கடைப்பிடிக்கச் செய்வதற்கும் நோர்வேயால் இயலாமல் போனது என்று இந்த அறிக்கை கூறுகிறது.
மேலும், இலங்கையின் அரசியலில் ஒரு சதுரங்கப் பகடையாக பயன்படுத்தப்படுவதை உணர்ந்து, அதை தடுத்திருக்கவேண்டும். 2006ம் ஆண்டு ஜெனிவா பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தபோது, மத்யஸ்த முயற்சிகளிலிருந்து நோர்வே விலகிக்கொண்டிருக்க வேண்டும் என்று குன்னார் செர்போ தெரிவித்துள்ளார்.
இந்த அமைதி வழிமுறையிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் நிறைய இருப்பதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது..

No comments:

Post a Comment