Translate

Thursday 9 February 2012

கருணா, டக்ளஸ் போன்ற காடையர்களால் நாம் சிக்கலை எதிர்நோக்க வேண்டியுள்ளது - பசில் ராஜபக்ச

"ஏனைய தமிழ்க் குழுக்களால் நாம் சிக்கலை எதிர்நோக்க வேண்டியுள்ளது" ராஜபக்ச விளக்கமளித்திருந்தார். "அதாவது டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் கருணா குழு ஆகிய தமிழ்க் குழுக்கள் ஆயுதங்களை வைத்திருப்பதால் அவர்களால் நாம் ஆபத்தைச் சந்திக்க வேண்டியுள்ளது" என ராஜபக்ச தெரிவித்திருந்த கூற்றை சிறிலங்காவில் உள்ள அமெரிக்கத் தூதரகம், வோசிங்ரனுக்கு முன்னர் தெரியப்படுத்தியிருந்தது.


இதனுடன் தொடர்புபட்ட இரகசியக் குறிப்பை, 'கொழும்பு ரெலிகிராப்' [Colombo Telegraph] என்னும் ஆங்கில ஊடகம் விக்கிலீக்சின் தரவுத்தளத்திலிருந்து கண்டறிந்துள்ளது. ஒக்ரோபர் 04,2006 அன்று சிறிலங்கா அதிபரின் ஆலோசகரும் அவரது சகோதரருமான பசில் ராஜபக்சவுடன் சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதர் மேற்கொண்ட சந்திப்பை 'இரகசியமானது' என உறுதிப்படுத்தியுள்ள விக்கிலீக்ஸ் இணையத்தளம் அச்சந்திப்பு தொடர்பான விபரங்களையும் வெளியிட்டுள்ளது. சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதராகக் கடமையாற்றிய றொபேற் ஓ பிளேக்காலேயே இவ் இரகசியக் குறிப்பு எழுதப்பட்டுள்ளது.

"டக்ளஸ் மற்றும் கருணாவிற்கு, உங்களது குழுவினரைக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்" என்ற உப தலையங்கத்தில் அமெரிக்கத் தூதர் தனது இவ் இரகசியக் குறிப்பை எழுதியிருந்தார்.

"கப்பம் பெறுவதற்காக கொழும்பு வர்த்தகர் ஒருவரை கடத்திச் சென்ற கருணா குழுவைச் சேர்ந்த ஒருவர் செப்ரெம்பர் 29 அன்று கைது செய்யப்பட்டதாக பசில் தெரிவித்திருந்தார். இந்நபரைக் கைது செய்ததன் மூலம், கடத்தல் சம்பவங்களை விசாரிப்பதற்காக புதிதாக நியமிக்கப்பட்ட 100 காவற்துறை அதிகாரிகளின் உதவியுடன் கருணா குழுவைச் சேர்ந்த மேலும் 13 பேர் கைதுசெய்யப்பட்டனர் எனவும் பசில் தெரிவித்திருந்தார். நீண்ட காலமாகத் தமிழ் வணிகர்களை மிரட்டிப் பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈடுபட்டதாகவும், ஆனால் தற்போது கருணா மற்றும் உள்நாட்டில் சட்டவிரோதமாகச் செயற்படும் குழுக்கள் வணிக நடவடிக்கைகள் முழுவதிலும் தமது அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் செலுத்துவதாகவும் பசில் குறிப்பிட்டிருந்தார்" எனவும் அமெரிக்கத் தூதரின் இரகசிய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.puthinapp...?20120209105544 

No comments:

Post a Comment