Translate

Friday 17 February 2012

அமெரிக்காவிற்கு ஆப்பு வைக்கப்போகும் மகிந்தர் !

இறுதிப் போரில் நடந்த குற்றங்களை விசாரிக்க இராணுவ நீதிமன்றமொன்றினை அமைப்பதாக, இலங்கையின் இராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூரியா அறிவித்திருந்தார். தற்போது கிளிநொச்சி மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர்.ஜெனரல், கிரிஷாந்த டி சில்வாவை தலைவராகக் கொண்ட ஐந்து பேரடங்கிய குழு, விசாரணைகளை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டது.


இப்போது விடயத்திற்கு வருவோம். சென்ற வாரம் இலங்கைக்கு சென்ற ராபர்ட் ஒ பிளேக் அவர்கள், நல்லிணக்க ஆணைக்குழுவில் சொல்லப்பட்ட பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதன் அடிப்படையில், ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் தீர்மானமொன்றினைக் கொண்டு வரப்போவதாக அறிவித்திருந்தார். அதேவேளை, சுயாதீன விசாரணையொன்று அவசியமென்று ஐரோப்பிய ஒன்றியமும், பிரித்தானியாவும், அவுஸ்திரேலியாவும் வலியுறுத்தின. தீர்மானத்தைக் காட்டி, சரத் பொன்சேக்காவை விடுதலை செய்ய வேண்டுமென அமெரிக்க பேரம்பேச முயல்வதை மகிந்தர் தெரிந்து கொண்டார்.

இதற்கு மகிந்தர் வைக்கும் ஆப்புத்தான் இராணுவ நீதிமன்றம். ஏனென்றால், உள்ளூரில் விசாரணை மேற்கொள்வதற்கு ஆதரவு தெரிவித்த மேற்குலகம் இதனை எதிர்க்க முடியாது. நல்லிணக்க ஆணைகுழுப் பரிந்துரையில் சொல்லப்பட்ட விடயத்தை நிறைவேற்றவே நீதிமன்றத்தை அமைத்துள்ளேன் என்று மகிந்தர் வியாக்கியானம் செய்தால், அமெரிக்காவால் அந்தத் தீர்மானத்தை கொண்டுவர முடியாது. புதிதாகக் காரணத்தையும் கூற முடியாது. அடுத்ததாக, இந்த நீதிமன்றத்தில், போர்க்கால இராணுவத்தளபதியாக இருந்த சரத் பொன்சேக்காவை நிறுத்தி, எல்லாவற்றிக்கும் இவர்தான் பொறுப்பு என்று அவரை தண்டித்தால், மேற்குலகின் ஆட்சி மாற்றக் கனவு சிதறிப் போய்விடும். 

அத்தோடு மகிந்தரைப் பொறுத்தவரை, போர்வெற்றியில் சமபங்கு கேட்கும் ஒரே நபரான பொன்சேக்கா என்ற ஜன்மச்சனியும் அகன்று விடும். மகிந்தரை எதிர்க்கும் சமபலம் கொண்ட ஆள் கிடைக்காவிட்டால், மாட்டு வண்டிச் சவாரிப் போராட்டம் செய்யும் ரணிலை வைத்து ஒன்றுமே பண்ண முடியாது. ஆகவே, பரிந்துரையை நிறைவேற்ற வேண்டுமென்ற தீர்மானத்தை விடுத்து, சுயாதீன சர்வதேச போர்க்குற்ற விசாரணை ஒன்று தேவை என்ற தீர்மானத்தை அமெரிக்க முன்வைத்தால், மகிந்தரின் ஆப்பு உடைபடும். இல்லையேல், மகிந்தர் அமெரிக்காவிற்கு வைக்கப்போகும் ஆப்பு, பெரிய ஆப்பாகத்தான் இருக்கப்போகிறது.

No comments:

Post a Comment