Translate

Saturday 17 March 2012

தமிழர்கள் பேசத் தயங்கிய காலம் இன்று மலையேறிவிட்டது.


தமிழர்கள் பேசத் தயங்கிய காலம் இன்று மலையேறிவிட்டது.
இலங்கை ஜனாதிபதி கோபிப்பார், இந்திய பிரதமர் விரும்பமாட்டார் என தமிழர்கள் இனிமேலும் தமது அபிலாசைகளையும், துன்பங்களையும் பகிரங்கமாக எடுத்து கூறத்தயங்கி கொண்டிருக்க முடியாது. அந்த காலம் காலம் இன்று மலையேறிவிட்டது. 

இனிமேலும் நாம் தயங்கி கொண்டு இருந்தால் உலகம் எமக்காக காத்திருக்காது. தமிழர்களாகிய நாம் ஆளுமையுடன் செயல்பட வேண்டிய காலம் வந்துவிட்டது.

பிரிபடாத இலங்கை என்ற கோட்பாட்டை தமிழர்கள் ஏற்றுக்கொண்டு விட்டோம் என்ற அறிவிப்பை எல்லா தமிழ் கட்சிகளும் செய்து விட்டன. அதற்கு மேலும் நாம் இறங்கி, பணிந்து வந்து இரண்டாந்தர குடிமக்களாகத்தான் வாழ வேண்டும் என சிலர் இங்கே எதிர்பார்கிறார்கள். இல்லாவிட்டால் இனக்கலவரம் வரும் எனவும் பயமுறுத்துகிறார்கள்.

இத்தகைய இனவாத சிந்தனைக்கு எதிராக ஜனநாயக போராட்டங்களை இலங்கையிலே தமிழர்கள் முன்னெடுக்க வேண்டும். அதற்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் துணை புரிய வேண்டும். உலகளாவிய மனித உரிமை அமைப்புகளின் அழுத்தம் காரணமாக, இலங்கை அரசை இன்று நன்கு புரிந்துகொண்டுள்ள உலக நாடுகள் எமக்கு துணை வந்தேயாகவேண்டும் என்ற நிலைமை இன்று உருவாகி விட்டது. அதுமட்டுமல்லாமல், தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டுள்ள தென்னிலங்கை முற்போக்கு சக்திகளும் எம்முடன் கரம் கோர்க்கின்ற சூழல் இன்று நிலவுகின்றது .

இத்தகைய உருவாகிவரும் சாதகமான சூழலை உணர்ந்து செயல்படுவதுதான், ஜெனீவா மாநாட்டிற்கு அடுத்த கட்டம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

ஜமமு தலைமையகத்தில் சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற வாராந்தர கூட்டத்தில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

இலங்கையில் மனித உரிமைகளுக்காக பெரும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் குரல் கொடுத்து போராடுகின்ற மனித உரிமை போராளிகளையும், மத தலைவர்களையும், ஊடகவியலாளர்களையும் புலிகளிடம் கையூட்டு வாங்கியவர்கள் என்று இந்த அரசாங்கம் சொல்கிறது.

தேசிய இனப்பிரச்சனைக்கு அதிகார பரவலாக்கலுடன் கூடிய அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என கோருகின்ற அரசியல் செயற்பாட்டாளர்களை புலிகள் என்று இந்த அரசின் வால்கள் சொல்கின்றன.

அதேபோல் எமது உள்நாட்டு பிரச்சினையை ஏன் சர்வதேசத்திற்கு கொண்டு செல்கிறீர்கள் என கேள்வி கேட்டு இவர்கள் எம்மை துளைத்து எடுக்கிறார்கள். எமது தேசிய இனப்பிரச்சினைக்கு உள்நாட்டில் தீர்வை தயாராக வைத்துகொண்டு இருப்பதைப்போல இது இருக்கிறது. ஆனால் எந்த ஒரு தீர்வு திட்டமும் இல்லை என்பதும், அப்படி எந்த ஒரு தீர்விற்கும் இவர்கள் தயாராக இல்லை என்பதும்தான் உண்மை.

அதேபோல் உண்மையில் உள்நாட்டில் தீர்வு இருந்தால் தமிழர்கள் வெளிநாட்டை தேடி போயிருக்க மாட்டார்கள். உள்நாட்டில் தீர்வு இருந்தால் வெளிநாட்டை தேடி தமிழர்கள் ஏன் போக வேண்டும்?

இது ஏதோ செய்யக்கூடாத பாவம் என்பதைப்போல் காட்டுகிறார்கள். 1989 இல் சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டபோது அன்றைய எதிர்க்கட்சி எம்பி மகிந்த ராஜபக்ச ஜெனீவா போனார். அவருடன் கூட இருந்தது வாசுதேவ நாணயக்காரவும், எமது இன்றைய ஜெனீவா பிரதிநிதி தமரா குணநாயகமும்தான். இன்று இவர்களுக்கு தமது கடந்த காலம் மறந்து விட்டது.

இந்த நாட்டிலே தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளுக்கும் தீர்வு இல்லை, மனித உரிமை பிரச்சினைகளுக்கும் தீர்வு இல்லை என்பதுதான் உண்மை. இதை அரசின் தமிழ் வால்கள் உணர்ந்து தமது எஜமானர்களுக்கு எடுத்து சொல்லவேண்டும்.

இன்று உருவாகி இருப்பது ஒரு பொற்காலம். இதை பெறுவதற்காக நாம் கொடுத்த விலை அளப்பரியது. எனவே இதை நம் கவனமாக பயன்படுத்த வேண்டும். அவருக்கு ஒளிந்து, இவருக்கு பயந்து, செய்யவேண்டிய விடயங்களை, செய்யவேண்டிய வேளைகளில் செய்ய மறுத்தால் அல்லது மறந்தால் வரலாறு எம்மை மன்னிக்காது என்பதை நாம் நினைவில் வைத்துகொள்ள வேண்டும்

No comments:

Post a Comment