Translate

Tuesday 27 March 2012

இந்தியா, முக்கியமான தருணத்தில் இலங்கையைக் கைவிட்டு விட்டது -பீரிஸ்


ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கெதிராக, அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த மற்றும் நடுநிலை வகித்த நாடுகளுக்கு நன்றி தெரிவித்து, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கடிதங்களை அனுப்பியுள்ளார்.

ஆனால், இந்தியாவுக்கு அவர் எந்த நன்றியையும் தெரிவிக்கவில்லை.
ஜெனிவாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்து, இலங்கைக்கு ஆதரவாக நின்ற பங்களாதேஸ், சீனா, ரஸ்யா உள்ளிட்ட 15 நாடுகளுக்கும் அமைச்சர் நன்றி தெரிவித்துக் கடிதங்களை அனுப்பியுள்ளார்.
இந்தியா எதிர்ப்புத் தெரிவித்த பின்னர், தீர்மானத்தைத் தோற்கடித்து இலங்கையைக் காப்பாற்றும் முயற்சியில் சீன வெளிவிவகார அமைச்சர் யங் ஜீச்சி முக்கிய பங்கு வகித்ததாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக சீன வெளிவிவகார அமைச்சருடன், அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் பேசியதை அடுத்தே இலங்கைக்கு ஆதரவு தேடும் தீவிர நடவடிக்கையில் சீனா இறங்கியது.
அத்துடன் அணிசேரா நாடுகள் அமைப்புக்குத் தலைமை தாங்கும் எகிப்து வெளிவிவகார அமைச்சர், இஸ்லாமிய நாடுகள் அமைப்பின் இணைப்புச் செயலராக உள்ள பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஹினா ரபானி கர் ஆகியோருக்கும், கியூபா, ரஸ்யா, சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கும் பீரிஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
எனினும், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில் இருந்த கடுமையைக் குறைக்கும் திருத்தத்தை முன்வைத்த இந்தியாவுக்கு நன்றி தெரிவித்து இலங்கை கடிதம் அனுப்பவில்லை.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சு அதிகாரி,
இறுதி நேரத்தில் இந்தியா கொண்டு வந்த திருத்தத்தினால், இலங்கை மீதான அழுத்தம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் திருத்தத்தை மதிக்கிறோம்.
இதன்மூலம், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று இருந்த வாசகம், இலங்கை அரசின் விருப்பதுடன் என்று மாற்றப்பட்டுள்ளது.
எனினும், விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்கும் போரில் பின்புலமாக இருந்து உதவிய இந்தியா, முக்கியமான தருணத்தில் இலங்கையைக் கைவிட்டு விட்டது என தெரிவித்துள்ளார்.
தீர்மானத்தில் திருத்தங்களை மேற்கொண்டு இந்தியா உதவியதற்கு இலங்கை இதுவரை நன்றி தெரிவித்து எந்தக் கடிதத்தையும் அனுப்பவில்லை.
அதேவேளை தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தது ஏன் என்று விளக்கமளித்து இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்,இலங்கை அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். இதற்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ பதில் அனுப்பவில்லை.
இந்தக் கடிதத்துக்கு பதில் அனுப்ப வேண்டியதில்லை என்று இலங்கை அரசாங்கம் கருதுவதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment