Translate

Friday 30 March 2012

திரு. சிறீதரன் M.P அவர்களுக்கு


திரு. சிறீதரன் M.P அவர்களுக்கு

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிறீதரன் அவர்களுக்கு வணக்கம்.
முதலில் உங்களுக்கு தமிழீழ புரட்சிகர மாணவர்கள் சார்பாகவும் புலம்பெயர் சமூகம் சார்பாகவும் வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
சமீபத்தில் உங்களுடைய நேர்கானல் ஒன்றை பார்த்து நாம் மட்டுமல்லாது தமிழர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்வுற்றுள்ளார்கள்.
காரணம் அடக்குமுறைகள் மிகுந்த இடத்தில் இருந்துகொண்டு மிக தைரியமாக தமிழர்களின் கோட்பாட்டை அவர்களின் விருப்பத்தை, இலட்சியத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழர்கள் எவ்வாறு நோக்குகின்றார்கள் தெளிவாக உலகறியச் செய்துள்ளீர்கள்.

ஒரு தமிழனாக அதுவும் தமிழர்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராக உங்கள் கடமை சிறப்பாக செய்து வருகின்றீர்கள்.. தமிழ்த் தேசியக் கூட்மைப்பை தமிழ் மக்கள் எதற்காக தெரிவு செய்தார்கள் என தெரிவு செய்யப்படாத உறுப்பினர்கள் பிதற்றித் திரிந்த போது பல உறுப்பினர்கள் வாய்மூடி மவுனமாக இருந்தார்கள், இப்போது உங்களின் உண்மையான கருத்தின் ஊடாக உண்மையை உறக்க உணர்த்தியுள்ளீர்கள்.
தமிழீழ தேசியக் கொடியை உயர்த்திப் பிடிக்கச் சொன்ன நீங்களும் எம் முன் உயர்ந்து நிற்கின்றீர்கள். கோழை ஒவ்வொரு நாளும் மரணிக்கின்றான் வீரன் ஒரு முறைதான் மரணிக்கின்றான் இது தேசியத் தலைவரின் சத்திய வாக்குகளில் ஒன்று.
பலர் கூறுகின்றார்களே தேசியக் கொடியை உயர்த்திப்பிடி என்று இவருக்கு மட்டும் என்ன பாராட்டு என பலர் கேட்கலாம் ஆனால் எங்கிருந்து அந்தக் கருத்தை கூறுகின்றீர்கள் என்பதே முக்கியம். தமிழீழத்தில் வாழும் அனைத்து மக்களின் விருப்பம் அது ஆனால் செயலில் காட்ட முடியாது காரணம் அடக்குமுறை.
இதே தைரியத்தை மேடைப் பேச்சுக்கள் ஊடாக மக்களிடம் மீண்டும் விதைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றோம். இதனூடாக உங்களுக்கு பல மிரட்டல்கள் வரலாம் என்பதையும் நாங்கள் அறிவோம். உங்களுக்கு வரும் மிரட்டல்களை நாம் வாழும் நாடுகளில் ஊடாக உலகின் கவனத்திற்கு கொண்டு சேர்ப்போம் என உறுதியளிக்கின்றோம். நீங்களும் உங்களுக்கு வரும் மிரட்டல்களை அனைத்து நாட்டு தூதுவரலாயங்களுக்கு தெரியப்படுத்துவீர்கள் என நம்புகின்றோம். இச்செயல் ஊடாக உங்கள் பாதுகாப்பபை உறுதி செய்ய முடியும் என நாம் நம்புகின்றோம்.
எம்மைப் பொறுத்தவரை ராஜபக்சவின் வீழ்ச்சியும் தமிழர்களின் எழுச்சியும் ஒரு சேர நிகழப்போகின்றது உலகம் இதைக் பார்க்கப்போகின்றது. உங்கள் பணி தொடர வாழ்த்துவதோடு தேசிய விடுதலையின் பாதையில் பயணிக்கும் உங்களோடு நாமும் கரம் கோர்ப்போம் எனவும் உங்களுக்கு அச்சுறுத்தல்கள் வரும்போது அதை பேச்சு வடிவில் அறிக்கைகள் மட்டும் விட்டுக் கண்டிக்காமல் நேரடியாக உலக நாடுகளின் கவனத்திற்கு கொண்டு சென்று தமிழர்களுக்காக பாடுபடும் உங்களின் பாதுகாப்புக்கு நாங்களும் பாடுபடுவோம் என உறுதிகூறுகின்றோம். இச்செய்தியை அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரிவிக்க விரும்புகின்றோம்.
நன்றி
நாங்கள்
தமிழீழ புரட்சிகர மாணவர்கள்

No comments:

Post a Comment