Translate

Wednesday 8 August 2012

சிறீலங்காவில் தமிழர் சிறையிலும் கொல்லப்படும் அவலம்



வவுனியா சிறைச்சாலையில் சிறை காவலர்களாலும் சிறப்பு அதிரடிப்படையினராலும் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் மஹர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியான பாசையூரைச் சேர்ந்த மரியதாஸ் டெல்றொக்சன் (வயது-37) நேற்று இரவு மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா சிறையில் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் மஹர சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு ராகம மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியான வவுனியாவைச் சேர்ந்த நிமலரூபன் கடந்த மாதம் 3ஆம் திகதி மரணமடைந்தார்.
இந்த நிலையில் கை,கால் முறிந்து கடுமையாகப்பாதிக்கப்பட்டு, கோமா நிலையில் இருந்த மரியதாஸ் டெல்றொக்சன் ஒரு மாதம் கடந்த நிலையில் நேற்று இரவு மரணமாகியுள்ளார்.
வவுனியா சிறைச்சாலையில் இருந்து அனுராதபுரத்திற்கு அழைத்துச் சென்ற மூன்று அரசியல் கைதிகளை மீண்டும் வவுனியா சிறைச்சாலைக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி, வவுனியா சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் போராட்டம் நடத்தியிருந்தனர்.
இதன்போது கைதிகள் மூன்று சிறை அதிகாரிகளை 16 மணிநேரம் பிணையாக பிடித்து வைத்திருந்தாக கூறி, அதிரடிப்படையினரின் உதவியுடன் சிறைச்சாலை சுற்றிவளைக்கப்பட்டு அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த 30 தமிழ் அரசியல் கைதிகளும் கடுமைபாகத் தாக்கப்பட்டதுடன் அவர்களில் 27 பேர் அங்கிருந்து மகர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.
இவர்களில் 3 பேர் கடுமையான பாதிப்பிற்குள்ளான நிலையில் ராஹம வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டனர். இதன்போது சிகிச்சை பயனின்றி வவுனியாவைச் சேர்ந்த நிமலரூபன் மரணமடைந்தார்.
யாழ்ப்பாணம்,மன்னார் ஆகிய இடங்களைச் சேர்ந்த இருகைதிகளும் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று இரவு மரியதாஸ் டெல்றொக்சன் ( புனித செபஸ்தியார் வீதி, பாசையூர் )மரணமாகியுள்ளார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசைய்யப்பட்டிருந்தார்.

No comments:

Post a Comment