யாழ்.குடாநாட்டில் இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது என்று யாழ்.மாவட்டக்கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார். “27 ஆயிரமாக இருந்த இராணுவத்தினரின் எண்ணிக்கை 16 ஆயிரமாகக் குறைக்கப்பட்டுள்ளது” என்றார் அவர்.
தற்போதுள்ள இந்த எண்ணிக்கை எதிர்காலத்தில் மேலும் குறைக்கப்படும் என்றும் அவர் கூறினார். இராணுவத்தினரின் உதவியுடன் ஆசிரி வைத்தியசாலையில் இருதய சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட இளம் பெண்ணை வரவேற்கும் நிகழ்வு படையினரின் யாழ்.பொதுமக்கள் தொடர்பு அலுவலகத்தில் நேற்றுக்காலை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது:
இராணுவத்தினர் மக்களின் வாழ்க்கைக்கு உதவுவதையே குறிக்கோளாகக்கொண்டுள்ளனர். யாழ்ப்பாண மக்கள் கதைப்பது போன்று நாம் மக்கள் விரோதிகளல்லர். நாம் இங்கு ஆட்சி செய்யப்போவதும் இல்லை.
வசதிபடைத்த பலர் இருக்கிறார்கள். பணம் படைத்தவர்கள் நிறையவே பேசுகிறார்கள். ஆனால் கஜேந்தினி போன்றோரின் மருத்துவத்துக்கு அல்லது உயிர் காக்கும் பணிக்கு உதவக்கூடிய கொடையாளிகளைக் காண முடியவில்லை. ஒரு சிலர் மறைமுகமாக உதவுகிறார்கள். கிருபானந்தன் இதற்கு உதவியுள்ளார்.
வசதி குறைந்த குடும்பத்தைச் சேர்ந்த கஜேந்தினியைக் காப்பாற்ற உதவியவர்கள் நன்றிக்குரியவர்கள். ஆசிரி வைத்தியக்குழுவினர், சத்திர சிகிச்சைக்கான கட்டணத்தைப் பெற்றுக்கொள்ளாது இலவசமாக சிகிச்சை வழங்கிய வைத்திய கலாநிதி குப்தா ஆகியவர்களே இந்தப் பிள்ளையின் உயிரைக் காத்தவர்கள். இவற்றையெல்லாம் முன்னின்று நடத்த உதவிய யாழ்.படை அதிகாரி விஜய குணதிலகவையும் பாராட்டுகின்றேன்.
அவரின் முயற்சி, உழைப்பு என்பன இதில் மிக முக்கியமானது. இராணுவம் யாழ்ப்பாண மக்களுக்கு உதவுகிறது என்பதற்கு இந்த ஒரு சம்பவமே நல்லதொரு எடுத்துக்காட்டு. இங்குள்ள மக்கள் மகிழ்ச்சியாக வாழவேண்டும். அதற்கான உதவிகளை நாங்கள் செய்யத் தயாராகவே உள்ளோம். என்றுமே மக்களுக்கு உதவியானவர்களாகவே இருக்கின்றோம் என்றார்.
ஆசிரி இருதய சத்திரசிகிச்சை நிபுணர் குப்தா, இருதய சிகிச்சைப் பிரிவு இயக்குநர் அனில் பெரேரா, யாழ்.சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் ஆகியோரும் நிகழ்வில் பேசினார்கள்.
No comments:
Post a Comment