Translate

Monday 16 April 2012

இந்திய எம்.பிக்கள் குழுவின் புதிய பயணத் திட்டம் இதுதான்!

கொழும்பு: இந்திய எம்.பிக்கள் குழுவின் இலங்கை பயணம் தொடர்பான புதிய நிகழ்ச்சி நிரலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று இரவு வெளியிட்டது. அதன்படி முள்வேலி முகாம் என்று அழைக்கப்படும் மாணிக் பார்ம் முகாமுக்கும் இந்தியக் குழு போவதாக கூறப்பட்டுள்ளது.



முதல் நாள் நிகழ்ச்சிகள்:

ஏப்ரல் 17ம் தேதி காலை காலை 8.15 மணிக்கு இலங்கைக்கான இந்திய தூதர் அசோக் கே. காந்தாவுடன் சந்திப்பு. இலங்கையின் பொருளாதார வளர்ச்சித் துறை அமைச்சர் பசில் ராஜபக்சேவுடன் சந்திப்பு. இலங்கை மக்களவைத் தலைவர், எம்.பி.க்களுடன் சந்திப்பு.

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் 1987-ம் ஆண்டு இலங்கைத் தமிழர் பகுதியில் செயல்பட்ட இந்திய அமைதிப் படையின் நினைவிடத்துக்குச் சென்ற பின்னர், இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரிஸை எம்.பி.க்கள் குழு சந்திக்கும்.

மலையகத் தமிழர்களுடன் சந்திப்பு

மாலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், இலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் மற்றும் சிறிய தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்த பின்னர் இந்தியத் தூதர் அசோக் கே. காந்தா அளிக்கும் இரவு விருந்தில் இந்தியக் குழு பங்கேற்கும்.

2ம் நாள் நிகழ்ச்சிகள்:

ஏப்ரல் 18ம் தேதி புதன்கிழமை, ஹெலிகாப்டர் மூலம் மாணிக் பார்ம் பண்ணைக்கு சென்று முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களின் நிலையை எம்.பி.க்கள் குழுவினர் பார்வையிடுகின்றனர்.

முல்லைத் தீவுக்கு சென்று இந்திய அரசு அமைத்துள்ள மாவட்ட மருத்துவமனை, வீடுகள், தமிழ்ப் பள்ளிகள் ஆகியவற்றைத் தொடங்கி வைக்கின்றனர். அந்தப் பகுதி மாவட்ட ஆட்சியர், தமிழர் அமைப்புகள் ஆகியவற்றுடன் ஆலோசித்து விட்டு யாழ்ப்பாணத்தில் அன்று இரவு தங்குகின்றனர்.

3ம் நாள் நிகழ்ச்சிகள்:

ஏப்ரல் 19-ம் தேதி, யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் கோயில், காங்கேசன்துறை துறைமுகம், கழுத்துறை துறைமுகம் ஆகியவற்றைப் பார்த்துவிட்டு ரணில் விக்ரமசிங்கவுடன் இரவு விருந்தில் பங்கேற்கின்றனர்.

4ம் நாள் நிகழ்ச்சிகள்:

ஏப்ரல் 20-ம் தேதி, நுவரேலியாவில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை இந்தியக் குழுவினர் தொடங்கிவைக்கின்றனர். கிழக்கு மாகாணத் தமிழ் முதல்வர் சிவநேச துரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு தமிழர் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்திக்கின்றனர்.

அங்கிருந்து கொழும்பு திரும்பியுடன் மாலையில் ராஜபக்சேவைச் சந்திக்கின்றனர். இதற்கு முன்பு இந்தச் சந்திப்பு ஏப்ரல் 21-ம் தேதி காலை சிற்றுண்டியுடன் அமைவதாக இருந்தது. தற்போது அது ரத்தாகி விட்டது.

இரவு இலங்கைப் பெண்கள் அமைப்பு நடத்தும் நிகழ்ச்சியில் சுஷ்மா ஸ்வராஜ் மட்டும் பங்கேற்கிறார்.

5ம் நாள் நிகழ்ச்சிகள்:

ஏப்ரல் 21-ம் தேதி காலை இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகளைச் சந்தித்துவிட்டு தங்கள் நான்கு நாள் இலங்கைப் பயணம் குறித்த தங்கள் கருத்துகளை ஊடகங்களிடம் தெரிவித்துவிட்டு இந்திய எம்.பி.க்கள் குழுவினர் நாடு திரும்புகின்றனர்.

No comments:

Post a Comment