Translate

Sunday 8 April 2012

இலங்கை அரசுக்கு எதிரான விவகாரத்தில் – இராஜதந்திரமாகவே செயற்பட்டுவருகிறோம்! சிதம்பரம்!


இலங்கை அரசுக்கு எதிரான மனித உரிமை மீறல் குறித்த பிரச்னையில் இந்தியா இராஜதந்திர நடவடிக்கையைக் கையாண்டு வருகிறது என இந்திய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்திருக்கின்றார். கூடங்குளம் அணுமின் நிலையம் திறப்பு, இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஐ.நா.வில் அமெரிக்காவின் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு, மத்திய அரசின் நிதிநிலை அறிக்கைக்குப் பாராட்டு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் முப்பெரும் விழா பொதுக்கூட்டம், திருச்சியில்  நடைபெற்றது. அதில் பங்குகொண்டு நிகழ்த்திய உரையின்போதே சிதம்பரம் இதனைத் தெரிவித்தார்.

கூட்டத்தில் ப. சிதம்பரம் மேலும் பேசியது:
“இலங்கைத் தமிழர் பிரச்னையில் ஆளுங்கட்சிக்கும், எதிர்கட்சிகளுக்கும் பொறுப்புகள் உள்ளன. அதைக் காங்கிரஸ் மதித்து நடக்கிறது. இலங்கையும் இறையாண்மை பெற்ற நாடு. எனவே, அயல்நாடு தொடர்பான பிரச்னையில் ஒவ்வொரு கட்டமாகத்தான் நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.
அதன்படி, முதல்கட்டமாக கவனமாகத் தயாரிக்கப்பட்ட அறிக்கையை வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா வெளியிட்டார். தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் இந்தியா முடிவெடுக்கும் எனப் பின்னர் அறிவிக்கப்பட்டது.
பின்னர் மார்ச் 19-ல் ஓர் அறிக்கை தயாரிக்கப்பட்டது, அதைப் பிரதமர் வெளிட்டார். மிகுந்த கவனத்தோடு அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது. அந்த அறிக்கை இந்தியாவுக்கு மட்டுமல்ல. 46 நாடுகளுக்கும் விடுக்கப்பட்ட செய்தி. சில நாடுகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையே அது.
ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை 24 நாடுகள் ஆதரித்தன; 15 நாடுகள் எதிர்த்தன; 8 நாடுகள் நடுநிலை வகித்தன. இந்தியா தனது அறிக்கையை கவனமாகத் தயாரித்திருக்காவிடில் ஆதரவு, எதிர்ப்பு நிலை மாறியிருக்கும். எனவேதான் மிகுந்த ராஜதந்திரத்தோடு இந்த விஷயம் கையாளப்பட்டது.
மோரீஷஸ், ரஷியா, பாகிஸ்தான், சீனா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் அந்தத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன. இந்த தீர்மானத்தின் மீதான அடுத்த நிலையில், இந்த நாடுகளையும் தனது பக்கம் இழுக்கும் இராஜதந்திரத்தையும் இந்தியா கையாளும். அனைத்து மக்களுக்கும் என்ன தேவை என்பதை உணர்ந்து மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாநிலங்களுக்கும் கூடுதலான நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது. கூடங்குளம் அணு மின் நிலையத்தைத் திறக்க வேண்டும் என்பது முடிவான முடிவு. இதை இனி யாராலும் தடுக்க முடியாது என்றார் சிதம்பரம்.
கூட்டத்துக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் தலைமை வகித்தார். மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன், அகில இந்திய காங்கிரஸ் செயலர் சாகர் ரெய்கா, முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ். இளங்கோவன், குமரி அனந்தன், கே.வீ. தங்கபாலு, எம். கிருஷ்ணசாமி, காங்கிரஸ் பிரமுகர்கள் எஸ்.திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் இங்கு உரையாற்றினார்கள்.

No comments:

Post a Comment