Translate

Friday 18 May 2012

ஆத்ம சாந்திப் பிரார்த்தனை; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு


ஆத்ம சாந்திப் பிரார்த்தனை; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு
news
 2009 மே மாதம் இடம்பெற்ற இனப் பேரழிவின் போது கொல்லப்பட்டோர் மற்றும் காணாமல் போனோர் நினைவாகவும் கடந்த காலங்களில் போரின்போது உயிர் நீத்தவர்கள் நினைவாகவும் நாளை வெள்ளிக்கிழமை ஆத்மசாந்திப் பிரார்த் தனையில் ஈடுபடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா இந்த அழைப்பை விடுத்துள்ளார்.அன்றைய தினம் மாலை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்திலும் இந்த ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் தீபம் ஏற்றும் நிகழ்வும் இடம் பெறும் என அவர் அறிவித்துள்ளார்.
 
தமிழ் மக்களின் மனங்களில் ஆறாத வடுவாக உள்ள முள்ளிவாய்க்கால் படுகொலை களை நினைவு கூர்ந்து புலம் பெயர் நாடுகளில் நாளை நிகழ்வுகளை நடத்துவதற்கு புலம் பெயர் தமிழர் அமைப்புக்கள் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன.
 
இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் அன்றைய தினத்தில் ஆத்மசாந்திப் பிரார்த்தனையில் ஈடுபடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
 
இலங்கையின் இனப்பிரச்சனையாலும் இனக் கலவரங்களாலும், போர்க் காரணங்களினாலும் நம் தமிழ் உடன் பிறப்புக் களான இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும் காணாமல் போயுமுள்ளனர். அதனால் அவர்களின் உறவுகளும் நாமும் ஆறாத் துயரில் மூழ்கியுள்ளோம்.
 
2009 "மே" மாதத்தில் ஏற்பட்ட இனப் பேரழிவில் கொல்லப்பட்டோர், காணாமல் போனோர் நினைவாகவும் கடந்த காலங்களில் உயிர் நீத்தவர்களுக்காகவும் நாளை மே 18 ஆம் திகதி ஆத்மசாந்திப் பிராத்தனையில் ஈடுபடுவது ஆறுதல் தரும் நிகழ்வாகும்.
 
எனவே எதிர்வரும் 2012 நாளை வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையக வளாகத்தில் இடம்பெறும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் தீபமேற்றல் நிகழ்ச்சியிலும் உயிர் நீத்த எம் உறவுகளின் குடும்ப உறுப்பினர்களையும் மற்றும் அனுதாபிகளையும் கலந்து ஆன்ம ஈடேற்றத்துக்காகப் பிரார்த்திக்குமாறு அழைக்கின்றோம்.

No comments:

Post a Comment