Translate

Friday 18 May 2012

பிரான்ஸ் மனித உரிமைச் சதுக்கத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நிகழ்வெழுச்சி(படங்கள்)

பிரான்சின் வரலாற்றுப் புகழ்மிக்க மனித உரிமைச் சதுக்கத்தில், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழ்வு மிகவும் எழுச்சியுடனும் உணர்வுபூர்வமாகவும் இடம்பெற்றது. நாடுகடந்த தமிழீழ அரசு, தமிழர்நடுவம், சொலிடாரித்தே தமிழீழம், லாம் தூ லா பே ஆகிய அமைப்புக்கள் கூட்டாக இந்நிகழ்வை ஒழுங்குசெய்து நடாத்தியிருந்தன.


பிற்பகல், 5.15 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பித்த நிகழ்வு, மாலை 6.30 மணியளவில் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற தேசிய விடுதலையை மீட்டெடுக்கும் நம்பிக்கையை விதைக்கும் பாடலுடன் சிறப்புற நினைவுபெற்றது.


அகவணககத்தைத் தொடர்ந்து, நினைவேந்தல் வணக்கப்படாடல் ஒலிக்கவிடப்பட்டது. தொடர்ந்து, தமிழர்நடுவம் கலைபண்பாட்டுத்துறைப் பொறுப்பாளர் பரா அவர்கள், நினைவுத் தூபிக்கு மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். கைகளில், மக்களின் அழிவுகளையம், தேசத்தின் இழப்புக்களையும் படங்களாகத் தாங்கியபடிக்கு அங்கு திரண்ட மக்கள், நினைவுத் தூபிக்கு மலர்தூவி வணக்கம் செலுத்திய நெகிழவைக்கும் காட்சிகளை, பிரெஞ்சு ஊடகவியராளர்கள் பலர் பதிவாக்கிக்கொண்டனர்.

நிகழ்வை, நாடுகடந்த தமிழீழ அரசின் பிரான்சுக்கான பிரதிநிதி சிவசுப்பிரமணியம் மகிந்தன் அவர்கள் பிரெஞ்சுமொழியில் தொகுத்து வழங்கியதுடன், தனது கருத்துக்களையும் முன்வைத்தார்.

நூவோ சோந்ர் அரசியல் கட்சியின் பாரிசுக்கான பிரதிநிதி கீ கப்பித்தநியோ அவர்கள், தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து தனது கவலைகளை வெளிப்படுத்தியதுடன், தமிழ்மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதை வலியுறுத்திப்பேசினார்.

நாடுகடந்த தமிழீழ அரசின் உள்துறை அமைச்சர் நாகலிங்கம் பாலச்சந்திரன், நாடுகடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகள் குறித்து தெளிவாக விளக்கியிருந்தார். தகவல்துறை துணை அமைச்சர் சுதன்ராஜ் உரையாற்றுகையில் தமிழ்மக்கள் இனப்படுகொலைக்கு ஆளாகியுள்ளனர் என்பதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளச் செய்யும் வகையில் எமது பணிகள் அமையவேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வுக்கு நோர்மன்டியில் இருந்து, வருகைதந்திருந்த, சொலிடாரித்தே தமிழீழம் அமைப்பின் தலைவி லூசி உயத் அவர்கள், தமிழ்மக்களின் பிரச்சினையை நன்கு அறிந்தகொண்டிருப்பதையும், தமிழ்மக்களிற்கு துணைநிற்போம் என்ற உறுதிமொழியும் தெரிவித்ததுடன், லிசே நொத்திர்டாம் தூ பிடெலித்தே கான் என்ற அமைப்பின் இந்த நிகழ்விற்கான ஆதரவையும் இச்சந்தர்ப்பத்தில் தெரியப்படுத்தினார்.

எப்.எஸ்.ஈ மாணவர் ஒன்றியம் மற்றும் நோர்மன்டி பிரெஞ்சுக் கலைஞர்கள் சார்பில் வரையப்பட்ட சிறப்பு அறிக்கைகளை, நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி வள்ளுவன் பாக்கியசோதி வாசித்ததுடன், தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்தை நடத்தவேண்டிய பெரும்பொறுப்பைச் சுமந்துள்ள இளம் சந்ததி, எதிர்காலத்தில், இதுபோன்ற நிகழ்வுகளுக்கு பெரிதும் பங்காற்றவேண்டும் எனவும் அங்கு வந்திருந்த இளம் சந்ததியினரை நோக்கி வேண்டுகோள்விடுத்தார்.

லூம் தூ லா பே அமைப்பின் சார்பில், பாரிஸ் பல்கலைக்கழக சட்டக்கல்லூரி மாணவரான சமி அவர்கள் உரையாற்றினார்.

தமிழர் நடுவப் பிதிநிதி ஜெயா தனது உரையில், இனப்படுகொலை நிகழ்வுகள், அதன் கனதி குறையாமல், அதன்வலி குறையாமல் அடுத்தடுத்த சந்தத்தி;க்கும் எடுத்துச்செல்லப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப்பேசினார்.

இசைக்கலைஞர் இந்திரன் அவர்கள், முள்ளிவாய்க்கால் அவலத்தை மனக்கண்முன் நிறுத்தும் உருக்கமான பாடல் ஒன்றைப் இசைச்சேர்க்கையுடன் சிறப்புறப் பாடினார்.

குறிப்பாக, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக் கொடுமைகளைச் சித்தரிக்கும் காட்சிகள், மற்றும் தகவல்கள் பொறிக்கப்பட்டு. சிறப்பாக அமைக்கப்பட்ட ஊர்த்தி புதன் வியாழன் ஆகிய இரு தினங்களும், பாரிசில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் கொண்டு செல்லப்பட்டதுடன், பிரெஞ்சு மக்களுக்கான பரப்புரைப் போராட்டமும் மேற்கொள்ளப்பட்டது.
Posted Image
Posted Image
Posted Image

மேலதிகமாக படங்களைப் பார்க்க இங்கே செல்லவும்

http://www.pooraayam...8-06-06-39.html

No comments:

Post a Comment