Translate

Saturday 5 May 2012

பேச்சளவில் மட்டும் இருந்துவிடல் ஆகாது

பேச்சளவில் மட்டும் இருந்துவிடல் ஆகாது

அனலை நிதிஸ் ச. குமாரன்
தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமையில் ஏப்ரல் 30-ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற ரெசோ கூட்டத்தில் கி.வீரமணி, பேராசிரியர் க. அன்பழகன்,சுப. வீரபாண்டியன், கவிஞர் கலி.பூங்குன்றன், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டனர். தனித் தமிழீழம் விரைவில் அமைந்திட ஐ.நா. சபை, தமிழர்கள் வாழும் பகுதிகளில் பொது வாக்கெடுப்பினை விரைவிலே நடத்திட வேண்டுமென்றும் அதற்கு இந்தியா எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மே 1985-இல் கருணாநிதி, வீரமணி மற்றும் பழ நெடுமாறன் இணைந்து ரெசோ என்கிற தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு என்று தமிழிலும்இ வுயஅடை நுநடயஅ ளுரிpழசவநசள ழுசபயnணையவழைn (வுநுளுழு) என்று ஆங்கிலத்திலும் பெயர் சூட்டப்பட்டு குறித்த அமைப்பு உருவாக்கப்பட்டது. குறுகிய காலத்திற்குள் குறித்த அமைப்பு செயலிழந்தது.அமைப்பின் தலைவராக கலைஞரும், உறுப்பினர்களாக நெடுமாறன் மற்றும் வீரமணி இருந்தார்கள். இருவருக்கும் முன்னறிவித்தல் கொடுக்காமலே ரெசோ இனி இயங்காது என்று கருணாநிதி அப்போது அறிவித்தார்.
சமீபத்தில் இடம்பெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்தது கலைஞர் தலைமையிலான தி.மு.க. இந்தவொரு சூழ்நிலையிலேயேதான் மீண்டும் ரெசோவை இயங்க வைப்பதென்றும், தமிழீழமே இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுத்தரும் என்று சமீபத்தில் அறிக்கை விட்டார் கலைஞர். அறிக்கை வெளிவந்த சில தினங்களுக்குள்ளேயே அமைப்பின் முதலாவது கூட்டத்தையும் கூட்டினார். ரெசோவின் அதிகார பூர்வமான அறிக்கை உலகத் தமிழர்களுக்கு ஒருவிதத்தில் மகிழ்ச்சியாக இருந்தாலும், இன்னொரு புறத்தில் கலைஞரின் செயற்பாடுகளுக்கு பின்னால் ஏதேனும் உள்விவகாரம் இருக்குமோ என்கிற பீதியும் இருக்கிறது.
வெளிநாட்டுத் தமிழர்களின் ஆதரவு அவசியம்
தமிழ் நாட்டு அரசியல் என்பது அது உள்விவகாரமாகவே வெளிநாடு வாழ் தமிழர்கள் பார்க்க வேண்டும்.தமிழகத்தில் இயங்கும் அரசியல் கட்சிகள் கலைஞரின் முயற்சிகளை வசை பாடலாம். வெளிநாடு வாழ் தமிழர்கள் கலைஞரின் முயற்சிகளை பாராட்டுவதன் மூலமாக இந்திய மக்களின் ஆதரவை ஈழத் தமிழர்கள் சார்பாக திருப்பலாம் என்பது ஒரு கருத்து. அத்துடன், இது போன்ற செயற்பாடுகள் ஈழத் தமிழர்கள் வெளிநாடுகளில் செயற்படுத்தும் ஜனநாயக செயற்பாடுகளுக்கு உந்து சக்தியாக அமையும். கலைஞர் போன்றவர்களின் கரங்களை பற்றி அவர் வழி சென்று ஜனநாயக விழுமியங்களுக்கு ஏற்றவாறு இராஜதந்திர நகர்வுகளை செய்வதனாலேயே தமிழர்களின் எதிரியை தண்டிக்க முடியும்.
தமிழர்களின் எதிரிகள் சிங்கள அரசியல்வாதிகள் என்கிற கருத்தை ஏற்று, தமிழ் நாட்டு அரசியல்வாதிகளை விமர்சிப்பதனாலையோ அல்லது அவர்களுடைய செயற்பாடுகளை கண்டிப்பதனாலையோ தமிழர்களுக்கு விடிவு பிறக்காது. நரித் தந்திரப் புத்தியைக் கொண்டவரே கலைஞர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.இவர் போன்ற தந்திரவாதிகளினால்தான் அரசியலில் நிரந்தரமாக இருக்க முடியும் என்பதனை இவர் உறுதிப்படுத்தியுள்ளார்.தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் குறிப்பாக எதிர்க் கருத்துக்கள் உள்ள கட்சிகள் இவரை வசைபாடுவதினால் ரெசோவின் செயற்பாடுகளில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
கலைஞரின் செயற்பாடுகளை புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் விமர்சனம் செய்வதனால் மேலும் பின்னடைவையே நாம் சந்திக்க வேண்டிவரும். தமிழர்களின் ஒற்றுமையை வெளிநாடுகளில் பறைசாற்றுவதனால் பிற இனத்தவர்களும் எம்மை மதிக்க மாட்டார்கள். அத்துடன்,எமக்கு தரும் ஆதரவுகளை நிறுத்திவிடும் சந்தர்ப்பமும் அதிகமாக இருக்கிறது. இந்தியாவைப் பகைத்துக் கொண்டு தமிழ் ஈழம் அடைவதென்பது பகல் கனவு. இந்தியாவின் தார்மீக ஆதரவு ஈழத் தமிழர்களுக்கு எப்போதும் தேவை. தமிழ் நாட்டின் ஆதரவினாலேதான் இந்தியா ஈழத் தமிழர்கள் சார்பான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கும்.
மக்களின் நாடித்துடிப்பை அறிந்து அரசியல் செய்யும் பக்குவம் அடைபவர்களே அரசியல் தலைவர்களாக இருக்க முடியும். கடந்த தேர்தலில் ஜெயலலிதா வெல்லுவார் என்று கலைஞர் எண்ணியே இருந்திருக்க மாட்டார். தனது ஆட்சியே இருக்கிறது,தனது அனைத்து செல்வாக்கையும் வைத்து மீண்டும் சுலபமாக ஆட்சிக் கட்டில் ஏறிவிடலாம் என்று கருதினார் கலைஞர். அமைதியாக இருந்த ஜெயலலிதா கச்சிதமாக மக்களின் நாடித்துடிப்பை அறிந்து அதற்கேற்றவாறு கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்து வெற்றியும் கண்டார். ஆகவே, அரசியல் தலைவர்கள் காலத்திற்கு ஏற்றவாறு செய்யும் வேலைகளை நாம் உதாசீனம் செய்துவிடக் கூடாது.
தமிழீழமே இறுதித் தீர்வு
ரெசோவின் வெளியிடப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:“பல்லாண்டுகளாகப் பாரம்பரியமான முறையில் இலங்கையின் தேசிய இனமாக இருந்து வரும் தமிழினம்;மனித உரிமைகளும், குடிமை உரிமைகளும் பறிக்கப்பட்டு, இந்த நூற்றாண்டில் மிகப் பெரிய இனப் படுகொலைக்கு ஆளாக்கப்பட்டு, அணிஅணியான அல்லல்களால் தினமும் அலைக்கழிக்கப்பட்டு வரும் பிரச்சினை தீர்வதற்கு தனித் தமிழ் ஈழம் அமைவதைத் தவிர வேறு தகுந்த வழியில்லை என்ற உண்மை நிலையை இந்தியத் திருநாட்டின் பிற மாநிலங்களிலும், உலக நாடுகளிலும் உணரச் செய்வதற்கும், தக்க ஆதரவு திரட்டுவதற்கும் உகந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்."
இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களுக்காக ஜ.நாவின் வாயிலாக அமைக்கப்பட்ட இந்தோனேசிய அரசின் தலைமை வழக்குரைஞரைத் தலைவராகக் கொண்ட விசாரணைக் குழு, இலங்கை இராணுவத்தினர் ஈழத் தமிழர்கள் மீது நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலை உறுதி செய்திருக்கிறது. வாழ்வுரிமைக்காகப் போராடிய ஈழத் தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொடுமைப் படுத்தப்பட்டதற்கும், மனித உரிமை மீறல்களுக்கும் ஆதாரங்கள் இருப்பதாகக் கூறியுள்ளது. விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கை ராணுவம், 40 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவித் தமிழர்களைக் குண்டு போட்டுக் கொன்றதோடு போர்க் கைதிகளையும் கொடூரமாகச் சுட்டு அழித்தது என்றும்; வீராங்கனைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர் என்றும் அந்த அறிக்கையிலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன."
இலங்கைப் போர்க் குற்றங்கள் பற்றி ஐ.நா. குழு பரிந்துரைத்துள்ளவாறு சர்வதேச விசாரணை ஆணையத்தை அமைத்து விசாரணை நடத்தி, குற்றங்களுக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு வேண்டிய அனைத்து முயற்சிகளிலும் இந்திய அரசு உடனடியாக ஈடுபட வேண்டும் என்றும்; திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை செயல் திட்டக் குழு மத்திய அரசை வலியுறுத்தி ஏற்கனவே தீர்மானம் வாயிலாகக் கேட்டுக் கொண்டுள்ளது. இலங்கையில் போர் முடிந்த பிறகு தமிழர் பகுதிகளை சிங்கள இராணுவம் ஆக்கிரமித்து நிற்கின்றது. தமிழர் பகுதிகள் எல்லாம் சிங்கள மயமாக்கப்பட்டு வருவதாகவும்; தமிழ் ஊர்ப் பெயர்கள் கூட சிங்களப் பெயர்களாக மாற்றப்படுவதாகவும்; இந்துக் கோவில்கள், கிறிஸ்தவத் தேவாலயங்கள் மற்றும் இஸ்லாமியர் மசூதிகள் ஆகியவை புத்த விகாரங்களாக மாற்றப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன.”
இந்த நிலையில் தனி ஈழம் அமைவதற்கு தமிழர்கள் மத்தியில், ஜனநாயக முறையில் பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்திட வேண்டும் என்பது தான் இலங்கைத் தமிழர்கள் பால் அன்பும், அக்கறையும் கொண்டுள்ள அனைவரது கருத்தாக இருக்கிறது. ஜ.நாவின் தலையீட்டினையடுத்து இதைப் போல பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு கொசோவோ, தெற்கு சூடான், கிழக்கு திமோர், மாண்டிநீக்ரோ போன்றவை தனி நாடுகள் என்ற அங்கீகாரத்தை ஏற்கெனவே பெற்றிருக்கின்றன. அதன் அடிப்படையில் இலங்கையில் வாழும் தமிழர்கள் மற்றும் புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்; இலங்கையில் தமிழர் பகுதிகளில் புதியதாகக் குடியேற்றப்பட்ட சிங்களவர்களுக்கு இந்தப் பொது வாக்கெடுப்பில் வாக்குரிமை வழங்கப்படக் கூடாது நடத்தப்படும் பொது வாக்கெடுப்பு முடிவின் அடிப்படையில் தனி ஈழம் அமைவதற்கு ஐ.நா.முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்; அதற்கு நமது இந்திய அரசு தேவையான ஒத்துழைப்பினையும் ஆதர வினையும் நல்குவதோடு ஐ.நா. சபையிலும், உலக அமைப்புகளின் மூலம் சர்வதேச அரங்கிலும் உரிய அழுத்தத்தையும் தர வேண்டும்."
மீண்டும் பிறப்பெடுத்துள்ள ரெசோ தமிழர்களின் கனவை தகர்க்காமல், தமிழீழ தனியரசை நிறுவ அனைத்து வழிகளிலும் உதவ வேண்டும். எட்டுக் கோடித் தமிழர்கள் வாழும் இந்தியாவினால் மட்டுமே ஈழத்தைப் பெற்றுத்தர முடியும் என்கிற கருத்து பல ஈழத்தமிழர்களிடையே பல காலமாக இருந்தது. இந்திரா காந்தி இறந்த பின்னர் மாறிமாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்து வந்தார்கள். தமிழர்களுக்கு தனிநாடு கிடைத்துவிடக் கூடாது என்கிற மனப்பாண்புடனையே செயற்பட்டது இந்திய அரசு. பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தமிழகம் ஈழத் தமிழர்களின் தேசியப் பிரச்சினையில் ஆர்வம் கொண்டு தமது ஆதரவை அளித்தே வந்தார்கள். ராஜீவின் மரணத்தின் பின்னர் இந்திய மத்திய அரசு எதனை செய்ய வேண்டுமென்று முன்னர் கருதியதோ அதனை கச்சிதமாக செய்தது.
முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்பது பழமொழி.இது நூற்றுக்கு நூறு வீதம் உண்மையே. ஒருவருடைய சாவிற்காக ஏறத்தாள ஒரு லட்சம் மக்களை தமிழீழம் இழந்தது. பல்லாயிரம் மக்கள் சொல்லொனாத் துயரை அனுபவித்தார்கள். இந்தியாவின் சதிவலைகளை அறுத்தெறிய, கலைஞர் போன்ற அனுபவமுடைய அரசியல் தலைவர்களினால் தான் முடியும்.பிற அரசியல் கட்சிகளையும் உள்வாங்கி பேதங்களை மறந்து தமிழீழ விடுதலையை துரிதப்படுத்த இதய சுக்தியுடன் செயல்வடிவம் கொடுத்தால் தான் கலைஞர், வீரமணி, நெடுமாறன், வைகோ, திருமாவளவன்,ராமதாஸ் உட்பட பல கோடி தமிழர்களின் அணையாத தாகமாக இருக்கும் தமிழீழ தனியரசு வெகு விரைவிலையே கிடைக்கும்.
இவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றனதொடர்புகொள்ள வேண்டியமின்னஞ்சல்nithiskumaaran@yahoo.com

No comments:

Post a Comment