Translate

Thursday 21 June 2012

வடக்கில் இடம்பெறும் காணி அபகரிப்புக்கள் நிறுத்தப்பட வேண்டும் சுவாமிநாதன் எம்.பி. _


  வடக்கில் இடம்பெற்று வரும் காணி அபகரிப்புகள் உடனடியாக நிறுத்தப்பட்டு, மக்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழக்கூடிய சூழலை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம். சுவாமிநாதன் கோரியுள்ளார். 


இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அதிகரித்து வரும் வாழ்க்கைச் சுமையினால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்ற இச்சந்தர்ப்பத்தில் வடக்கில் இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்பு மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

குடாநாட்டில் தனியார் காணிகள் மற்றும் கட்டிடங்கள் 1000த்திற்கும் அதிகமான இடங்களில் இராணுவம் நிலை கொண்டுள்ளது. இராணுவம் இவ்வாறு நிலை கொண்டுள்ள நிலையில் தென்மராட்சி பிரதேசத்தில் 300 ஏக்கர் நிலத்தையும் தெல்லிப்பழை பிரதேசத்தில் 61 ஏக்கர் நிலத்தையும் கைப்பற்றுவதற்கு இராணுவம் முயற்சி செய்து வருவதாக எழுந்துள்ள செய்தியினால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

தற்போது யாழ். மாவட்டத்தில் வீட்டுடன் இணைந்த காணிகள் 57இலும், 5 காணிகளிலும், அரச காணி 1இலும், வியாபார நிறுவனம் 1இலும் காவற்றுறையினர் குடி கொண்டுள்ளனர்.

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் 716 காணிகள் உள்ளதாக கருதப்படுகிறது. இதில் வீட்டுடன் இணைந்த காணிகள் 378வும், காணிகள் 283இலும், அரச காணிகள் 9வும், வியாபார நிறுவனங்கள் 46வும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.

கடற்படையினரின் கட்டுப்பாட்டில் மொத்தம் 253 காணிகள் உள்ளதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. இதில் வீட்டுடன் இணைந்த காணிகள் 123வும், தனியார் காணிகள் 104வும், அரச காணிகள் 19வும், வியாபார நிறுவனங்கள் 7வும் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளன.

தேசிய பாதுகாப்புக்கு எதுவித இடையூறுகளுமின்றி யாழ். குடாநாட்டின் பாதுகாப்பை உறுதி செய்து பாதுகாப்புத் தரப்பு நிலை கொண்டுள்ள அனைத்து பொதுமக்கள் காணிகளையும் உரிமையாளர்களுக்கு வழங்கி தமிழ் மக்களின் வாழ்விடங்களை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். வடக்கில் இராணுவத்தினரின் செயற்பாடுகள் தொடர்பாக சர்வதேச மட்டத்தில் பேசப்படும் இச்சந்தர்ப்பத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து இராணுவ கெடுபிடிகளை நிறுத்தி சுமுக நிலையை வடக்கில் உருவாக்க வேண்டும். 

No comments:

Post a Comment