Translate

Wednesday 13 June 2012

வட மாகாண சபை தேர்தல் கூறும் செய்தி என்ன?

வடக்கு மாகாண சபை தேர்தலை இன்னமும் தள்ளி வைக்காமல், உடனடியாக நடத்தி வைக்க வேண்டும் என்று அமெரிக்க அரசு - இலங்கைக்கு அறிவுறுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தேர்தலை தள்ளி வைப்பதற்கு எந்தவிதமான முகாந்திரமும் இல்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு கருதுவதாகவும் அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. அரசும் தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் வாக்காளர் சேர்க்கை போன்ற பணிகள் முடிவடைந்ததும் தேர்தலை நடத்தப் போவதாக கூறி வருகிறது. இதன் சாராம்சம் என்ன? வடக்கு மாகாண சபை தேர்தலால் யாருக்கு என்ன பயன்? குறிப்பாக, போரினால் பாதிக்கப்பட்டு, வடக்கு மாகாணத்தில் தொடர்ந்து வாழக்கையை போராட்டமாகவே நடாத்தி வரும் தமிழ் சமுதாயம் நேரடியாக அடையப் போகும் பயன் என்ன?


வடக்கு வாழ் மக்களை பொறுத்த வரையில் அவர்களது அன்றாட தேவைகளுக்கு குறைவே இல்லை. இன்றைய சூழ்நிலையில் அரசாங்கத்தினால் மட்டுமே அவர்களது தேவைகளுக்கான வடிகால்களை அமைத்துக் கொடுக்க முடியும். அது மத்தியில் இருந்தாலும் மாகாண அரசாங்கமாக இருந்தாலும் நிதி நிறைந்த அரசாங்கத்தால் மட்டுமே அவர்களது தேவைகளுக்கு ஈடு கொடுக்க முடியும். மாகாண சபை தேர்தல் முடிந்து வடக்கில் பதவிக்கு வரும் அரசு, ஒன்றில் மத்திய அரசோடு சேர்ந்து செயலாற்றி, தங்களது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முயல வேண்டும். இல்லையென்றால், எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை கூறியே தங்களது பதவிக் காலத்தை பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். அதன் அடிப்படையிலேயே அடுத்த முறையும் மக்கள் வாக்களித்தால், மீண்டும் ஆட்சிக்கு வந்து செயல்பட முயல வேண்டும்.

இதற்காக, தற்போது அரசு சார்ந்த கட்சிகளை மட்டுமே வடமாகாண மக்கள் பதவிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அல்ல பொருள். ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் கூட்டமைப்பே வட மாகாண மக்களின் நம்பிக்கையை அதிகமாக பெற்றிருந்தது. அந்த ஆதரவு தொடருமேயானால் வட மாகாண சபையில் கூட்டமைப்பு ஆட்சிக்கு வரும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் ஆட்சிக்கு வந்த பின் கூட்டமைப்பும் அதன் அமைச்சர்களும் சாதிக்கப் போவது என்ன? இது குறித்து மக்கள் தெளிவாக இல்லை என்றாலும், கூட்டமைப்பு அரசியலை புறம் தள்ளி, மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை முன் வைத்து தேர்தல் களத்தில் இறங்க வேண்டும். பல்வேறு தட்டுகளிலும் உள்ள தனது தலைவர்களுக்கு சரியான அறிவுரை வழங்கி, அவர்களை தேர்தலுக்கும் தேர்தலுக்கு பிற்பட்ட காலகட்டத்திற்கும் தயார் படுத்த வேண்டும். 

ஆனால், அண்மைக்காலத்தில் கூட்டமைப்பின் உட்கட்சி விவகாரங்கள் அதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துமா என்ற கேள்வியையே எழுப்புகிறது. உதாரணத்திற்கு, கூட்டமைப்பின் ஒரு தலைவருக்கு எதிராக அண்மைக் காலத்தில் உருவபொம்மைகள் மூலம் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னால் யார் இருந்தார்கள் என்பது ஒரு கேள்வி. ஆனால், அது குறித்து கூட்டமைப்பின் எந்தவொரு தலைவரும் கண்டனம் தெரிவிக்கவில்லை என்பது வருந்தத்தக்கது. இதுவே, இந்த எதிர்ப்பிற்கு பின்னால் கூட்டமைப்பின் சில - பல தலைவர்கள் இருந்தார்களா என்ற கேள்வியை எழுப்புகிறது. எது எப்படியோ, இந்த போராட்டத்தை கூட்டமைப்பு தலைவர்களும் ரசித்தார்களோ என்ற கேள்வியும் உடன் எழும்புகிறது.

'மே தினம்' அன்று யாழ்பாணத்தில் அரங்கேறிய 'கொடி பிரச்சினை' உள்கட்சி விவகாரங்களை, விவகாரமாகவும் விவாத விடயமாகவும் வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது. அதைவிட முக்கியமாக, வட மாகாண மக்களின் அன்றாட பிரச்சினைகளை விட, கூட்டமைப்பு தலைவர்களுக்கு இன்னமும் உணர்வு பூர்வமான அரசியல் பிரச்சினையிலேயே நாட்டம் அதிகம் என்ற எண்ணத்தையும் வெளியுலகில் ஏற்படுத்தியது. அதிலும் கூட்டமைப்பின் மூத்த தலைவர்களான சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமசந்திரன் போன்றவர்களிடையே கருத்து வேற்றுமை வளர்ந்து வருவதான எண்ணம் தோன்றுவது நல்லதல்ல.

இத்தகைய பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவித்த கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் - சம்பந்தன், சுமந்திரன் போன்ற தலைவர்கள் வடக்கு மாகாணத்தில் வாழ்ந்து வராத காரணத்தால் அவற்றின்; தாக்கத்தை சரியாக உணர்ந்து கொண்டு செயல்பட முடியவில்லை என்பது போன்று கருத்தை வெளியிட்டுள்ளதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. அவரது கூற்று உண்மை என்றால், அவரது கருத்து ஏற்றுக் கொள்ளப்படுமேயானால் 'வடக்கு மாகாணத்தவர்' மற்றும் 'பிற பகுதி தமிழர்கள்' என்ற பிரிவினையையும் இது தோற்றுவிக்கிறது. இது தான், தமிழர் அரசியலுக்கு எதிரான எண்ணம் கொண்டவர்கள் எதிர்பார்ப்பதும் கூட.

கூட்டமைப்பை பொறுத்தமட்டிலாவது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மறுபடியும் இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் தொடர்ந்து முன்வைத்து வருகிறது. இனப் போர் முடிந்த இடைப்பட்ட காலகட்டத்தில் அரசு சார்ந்த தமிழ் கட்சிகளும் கூட்டமைப்போடு நடாத்திய பேச்சுவார்த்தைகளின் போது, அந்த கருத்தை முழுமனதோடு ஏற்றுக் கொண்டன. அதே சமயம், கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் பங்கு கொள்ளாமைக்கும் கூட்டமைப்பு இதனையே காரணமாக காட்டியது. அன்று விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்து செயல்பட்டு வந்தது என்பதும் ஒரு காரணம். 

தற்போது, கிழக்கு மாகாண சபைக்கு அடுத்த சுற்று தேர்தல் நடத்த அரசு முடிவு எடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த பின்னணியில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கான தனித்தனி தேர்தல்களை அரசு நடத்துமேயானால், அவற்றில் கூட்டமைப்பு போட்டியிடும் விடயத்தில் என்ன முடிவு எடுக்கும் என்பது தற்போதைக்காவது புதிராகவே உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் கிழக்கு மாகாண சபையில் கூட்டமைப்போ பிற தமிழ் கட்சிகளோ ஆளுமை செலுத்த முடியாத விதத்தில் மாற்று அரசு ஒன்று அமையுமேயானால், அதன் பிறகு வடக்கு - கிழக்கு இணைப்பு என்ற பேச்சிற்கே இடமில்லை என்றாகிவிடும். அல்லது, கிழக்கில் வாழும் அனைத்து தமிழ் வாக்காளர்களும் ஒரு சேர வாக்களிக்க வேண்டும் என்ற நிலை கூட எழலாம். அப்படி என்றால், இது குறித்த கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவாக இருக்க முடியும்?

கூட்டமைப்பின் பிரச்சினை இத்தோடு நின்று போகாது. 'இனப் போர்' காலகட்டம் முழவதுமாக, கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக, அரசுடனும் அரசாங்க அலுவலர்களுடனும் ஒட்டோ உறவோ இல்லாமலே அவர்கள் அரசியல் செய்து வந்துள்ளார்கள். போர் முடிந்த பின்னரும் அவர்கள் இந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாக தெரியவில்லை. ஏன், கட்சியின் முக்கிய பொறுப்புகளில் அல்லது கருத்து கூறும் நிலைகளில் அரசு அதிகாரிகளாக அனுபவம் உள்ள தமிழர்கள் இருப்பதாகவும் கருத இடமில்லை. ஆனால். நாடாளுமன்ற உரைகளில் கூட, கூட்டமைப்பு உறுப்பினர்கள் உரிமை குறித்து குரல் எழுப்பி வருகிறார்களே தவிர, மக்களின் வாழ்க்கை தேவைகள் குறித்து ஆழமாக ஆலோசித்து, அது குறித்த விவரங்களை பட்டியலிட்டு பேசியதில்லை. 

ஆனால், கூட்டமைப்பு வடக்கு மாகாணத்தில் ஆட்சிக்கு வந்தால் மக்கள் அவர்களிடம் இருந்து நிறைய எதிர்பார்ப்பாகள். அதற்கு கூட்டமைப்பு தலைவர்கள் தங்களை முதலில் தயார் செய்து கொள்ள வேண்டும். மாறாக, தேர்தல் முடிந்து அவர்கள் பதவிக்கு வருவார்களேயானால் அப்போது தொட்டதற்கும் வைத்ததற்கும் அவர்கள் மத்திய அரசை மட்டுமே குறைகூறி வருவார்களேயானால், மனம் வெறுத்துப்போன அவர்களது மக்களே அவர்களை அடுத்து வரும் தேர்தல்களில் வீட்டிற்கு அனுப்பி வைக்கும் வேலையை தாங்களே செய்து விடுவார்கள். இது தான் இந்தியா உட்பட்ட பிற நாடுகளில் அரசு எதிர் அரசியல் மட்டுமே செய்துவந்த மக்கள் அமைப்புகள் அரசிற்கு பொறுப்பேற்ற பின்னர் நடந்து வந்துள்ளன. இது குறித்து கூட்டமைப்பு சிந்தித்து ஆவன செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment