Translate

Thursday 26 July 2012

இலண்டனிலிருந்து இனப்படுகொலையாளிகளை விரட்ட - அணிதிரண்டுவாரீர்*******

இலண்டனிலிருந்து இனப்படுகொலையாளிகளை விரட்ட - அணிதிரண்டுவாரீர்*******
 

அன்பான ஐரோப்பியவாழ் தமிழீழ உறவுகளே! எதிர்வரும் 27.07.2012 அன்றைய நாள் இலண்டன் ஒலிம்பிக் தொடக்கவிழாக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதற்காக உலகெங்கிலுமுள்ள 120 இற்கும் மேற்பட்ட நாட்டுத் தலைவர்கள் வருகைதரவுள்ளார்கள்.
இதில் சிறீலங்கா இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சவும் வருகைதரவுள்ளார். உலகின் 120 இற்கும் மேற்பட்ட நாட்டுத் தலைவர்கள் இலண்டன் Aspen Way E14 என்னும் வீதிவழியாக ஊர்தியில் சென்று ஒலிம்பிக் தொடக்கவிழாவில் கலந்துகொள்ளவுள்ளனர்.



இந்நிலையில் சிறீலங்கா இனப் படுகொலையாளிகளை பிரித்தானியா மண்ணிலிருந்து விரட்டியடிக்கும் முகமாகவும் எம்மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவழிப்பை சர்வதேச நாட்டுத் தலைவர்கள் மத்தியில் வெளிப்படுத்தும் முகமாகவும் எதிர்வரும் 27.07.2012 வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணியிலிருந்து 9:00 மணிவரை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்வதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.


அனைத்து உலகத் தலைவர்கள் முன் கவனயீர்ப்புச் செய்வதற்கு இது எமக்குக் கிடைத்த ஓர் அரிய வாய்ப்பு! இந்த வாய்ப்பை முறையாகப் பயன்படுத்தி, எமது உரிமைப் போராட்டத்திற்கு வலுச்சேர்ப்பதற்காக அனைத்து பிரித்தானிய வாழ் தமிழீழ உறவுகளும் ஒருமித்த மக்கள் சக்தியாகத் திரண்டு அன்றைய நாள் மாலை 5:00 மணிக்கு Billingsgate Fish Market E14 5ST என்னும் இடத்துக்கு முன்னால் Aspen Way E14 என்ற வீதியருகே ஒன்றுதிரண்டு வருமாறு அன்புடன் வேண்டப்படுகிறீர்கள்.


தமிழீழ மண்ணிலே நாளுக்கு நாள் எங்கள் உறவுகள் படுகொலை செய்யப்படுவதும் எமது தாயக பூமி சூறையாடப்படுவதும் தொடர்கதையாக இருந்துவருகிறது. சிங்கள பேரினவாத அரசு சர்வதேச நாடுகளை ஏமாற்றி, ஈழத்தமிழ் இனத்தின் மீது மிகப்பெரிய இனவழிப்பையும் அப்பட்டமான மனிதவுரிமை மீறல்களையும் இந்த 21 ஆம் நூற்றாண்டில் உலகில் எங்கும் இல்லாதவாறு மிகத் தீவிரமாக இழைத்துவருகிறது.


எம்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட மிகத்தீவிரமான திட்டமிட்ட இனவழிப்பை சர்வதேச சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டுவருவது இன்றைய சூழலில் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களின் தலையாய கடமையாக உள்ளது. எங்களது உரிமைகளை போராடி மீட்பதற்கான எமது ஆயுதப் போராட்டம் உலகநாடுகளின் துணைகொண்டு நசுக்கப்பட்ட நிலையில், எமது நீதிக்கான, சுதந்திரத்திற்கான தொடர் கவனயீர்ப்பு மக்கள் போராட்டங்ளை தொடர்ந்து ஓயாது சர்வதேச நாடுகளில் நிகழ்த்த வேண்டியது எமது விடுதலைக்கான வரலாற்றுக் கடமையாகும்.
எனவே, அனைத்துலக மட்டத்தில் எடுத்துச் செல்லப்படக்கூடிய ஒரு வாய்ப்பில், ஒரு பகுதியாக மனிதநேயன் திரு.கோபி.சிவந்தன் அவர்கள் தொடர் உண்ணாநிலை கவனயீர்ப்புப் போராட்டத்தை செய்துவருகிறார். அதேவேளை, எதிர்வரும் 27.07.2012 வெள்ளிக்கிழமை குறித்த நேரத்தில் அனைத்து பிரித்தானிய வாழ் தமிழீழ உறவுகள் அனைவரும் காலத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டாயத்தை உணர்ந்து பெரும் மக்கள் வெள்ளம்போல் ஒன்றுதிரண்டு இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க வருமாறு அன்புடன் வேண்டப்படுகிறீர்கள்

No comments:

Post a Comment