Translate

Monday 30 July 2012

இலங்கையில் இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள் -இதயச்சந்திரன்

'சர்வதேசத்தின் உதவியை நாடாமல் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்குள் இணைந்து கொள்ளுங்கள்' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார் இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்தா.

தீர்வின்றி நீடிக்கும் தேசிய இன முரண்பாடு, இந்தியாவின் பிராந்திய நலனிற்கும் அதன் பாதுகாப்பிற்கும் பல சிக்கல்களை உருவாக்குகின்றது என்பதையே காந்தாவின் இணக்கப்பாட்டிற்கான அறிவுரை உணர்த்துகிறது. 

அதேவேளை புதுடெல்லியிலுள்ள பாதுகாப்பு கற்கைகளுக்கான ஆய்வு மையம் (Institute for Defense Studies & Analyses) வெளியிட்ட இந்த ஆண்டிற்கான அறிக்கை, "இந்தியாவின் அயல்நாடுகள்  -அடுத்த இரு தசாப்த காலத்தின் சவால்கள்'' என்கிற தலைப்பில் வெளிவந்துள்ளது.

ஒரு நாட்டின் அரசியல் -மூலோபாய மற்றும் பொருளாதார நிலைமைகள், அதன் அரசியல் ஸ்திரத்தன்மை, வளர்ச்சியுறும் தகைமை, முதலீட்டுச் சூழல் மற்றும் பயிற்றுவிக்கப்பட்ட தொழிலாளர் சக்தியிலேயே தங்கியுள்ளதென எதிர்வு கூறப்படுவதாக ஆரம்பிக்கும் இவ்வறிக்கையானது இலங்கையின் யுத்த மற்ற சூழ்நிலை முதலீட்டுக்கு உகந்ததென கணிப்பிடுகிறது.

இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து குறிப்பிடும் போது, நிதி திட்டமிடல் அமைச்சின் 2010 ஆம் ஆண்டிற்கான அறிக்கையை மட்டுமே ஆய்விற்கு உட்படுத்தியுள்ளார்கள்.

2010 இல் கடனாகவும், மானியமாகவும் ஜப்பான் 438.9 மில்லியன் டொலர்களையும், சீனா 828.9 மில்லியனையும் இந்தியா 483.8 மில்லியனையும் ரஷ்யா 300 மில்லியனையும் வழங்கியுள்ளதோடு ஆசிய அபிவிருத்தி வங்கி 372.2 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் உலக வங்கி 347.4 மில்லியனையும் கடனாக வழங்கியது.

இதில் சீனா, இலங்கைக்கு வழங்கிய கடன் அதிகமானது. அமெரிக்காவானது மானியமாக (Grant) 44.2 மில்லியன் டொலர்களை மட்டுமே கொடுத்து உதவியுள்ளது.

இவை தவிர இலங்கையின் மொத்த உள்ளூர் உற்பத்தி (GDP) அதிகரிப்பதை, முதலீட்டிற்கான சாதகமான சூழல் என்று கணிப்பிடும் இவ் ஆய்வு மையம், சென்மதி நிலுவை நெருக்கடி (Balance of Payment) இலங்கையில் இல்லை என்று மேம்போக்கான முடிவொன்றினை எட்ட முயல்கிறது.

எண்ணெய் இறக்குமதிப் பிரச்சினையாலும் ரூபாய் நாணயத்தின் வீழ்ச்சியினாலும் சென்மதி நிலுவை சிக்கலுக்குள்ளாவதை பல ஆய்வுகள் அண்மைக் காலமாக வெளிப்படுத்தி வருவதை இந்த ஆய்வுமையம் கருத்தில் கொள்ளவில்லை போல் தெரிகிறது.

அத்தோடு அடுத்த 20 வருடங்களில் இலங்கையானது, கடல்சார் வர்த்தக மையமாக மாறுமாம்.

ஆயினும் வெளிநாட்டு நிதி மூலதன வரவு, கடந்த இரண்டு ஆண்டுகளில் எத்தகைய மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது என்பதைக் கணிப்பிட புதுடெல்லி ஆய்வு மையம் தவறியுள்ளதை, பின்வரும் புள்ளி விபரங்கள் புலப்படுத்துமென நம்பலாம்.

2010 இல் முழுமையான வெளிநாட்டு நிதி வரவு 3261 மில்லியன் டொலர்கள்.
2011 இல் கடனாக 1945 மில்லியனும் மானியமாக 131 மில்லியனும், மொத்தமாக 2076 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

2010 ஐ விட ஏறத்தாழ 1100 மில்லியன்கள் 2011 இல் குறைவாகக் கிடைத்துள்ளது.
2005 இலிருந்து 2010 வரை வெளிநாட்டு உதவிகள் அதிகரித்து பின்னர் 2011 இல் வீழ்ச்சியடைவதைக் காணலாம்.

கிட்டத்தட்ட 84 சதவீதமான கடன்களை சீனா, ஜப்பான், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி போன்றவையே கொடுத்துள்ளன.
மானியமாக வழங்கப்பட்ட 131 மில்லியன் டொலரில் 69 சதவீதமானவை ஐ.நா. சபை அமைப்புகளால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் [2011]சீனா கடனாகக் கொடுத்த தொகை 784.7 மில்லியன் டொலர்கள். இந்தியா கடன் கொடுக்கவில்லை. ஆனால் மானியமாக 9.1 மில்லியன் டொலர்களை மட்டுமே இலங்கைக்கு வழங்கியுள்ளது.

இருப்பினும் 2011 டிசெம்பரில் இந்தியா உடன்பட்ட 484 மில்லியன் டொலர் கடன் தொகையின் 382 மில்லியன்கள், ஜனவரி 2012 இல் வழங்குவதாக இணக்கம் காணப்பட்டது.

ஆகவே இந்த வருடம் இந்தியா தனது கடன் தொகையை அதிகரிக்கும் வாய்ப்புண்டு.
 
சென்ற வருடம், ஜனவரியிலிருந்து டிசெம்பர் 31 ஆம் திகதிவரை சீனா இலங்கைக்கு வழங்கிய கடன்கள் குறித்த விபரங்களைப் பார்க்கலாம்.

முக்கியமான வீதிகளின் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டிற்காக 500 மில்லியன் டொலர்களை சீனா கடனாகக் கொடுத்துள்ளது.

அத்தோடு "பின்னதுவ' விலிருந்து "கொட்டகொட' வரையான நெடுஞ்சாலைக்கு 75.1 மில்லியன்களையும், "கொட்டகொடவிலிருந்து "கொடகம' வரையான சாலை புனரமைப்பிற்கு 63.1 மில்லியனையும், 67 கிலோ மீற்றர் நீளமான நாவற்குழி, காரைதீவு, மன்னார் வீதி புனரமைப்பிற்கு 48.4 மில்லியனையும். 113 கி.மீ. நீள புத்தளம், மறிச்சுக்கட்டு, மன்னார் வீதி மேம்பாட்டிற்கு 73.2 மில்லியன் டொலர்களையும் அபிவிருத்திக் கடனாக சீனா வழங்கியது குறிப்பிடத்தக்கது.

ஆனால் 9.2 மில்லியன்களை மானியமாக மட்டுமே இந்தியா கொடுத்துள்ளது.
அதேவேளை 45.3 மில்லியனைக் கடனாகவும் 1.6 மில்லியனை மானியமாகவும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிப் பகுதிகளுக்கான நீர் வழங்கல்களுக்காக பிரான்ஸ் நாடு வழங்கியுள்ளது.

இவையனைத்தும் இலங்கையின் உள்கட்டுமான அபிவிருத்திக்காக வழங்கப்பட்ட கடன்களாகும்.

ஆயினும் இலங்கையின் பொருளாதார நிலைமை சீரடைவதாக தனது ஆய்வின் முடிவுகளை அறிவிக்கும் இந்திய வெளியுறவுக் கொள்கை வகுப்பில் ஆளுமை செலுத்தும் அமைப்புகள், யதார்த்த நிலைமை வேறுவிதமாக இருந்தாலும், இலங்கையில் முதலீடு செய்ய முன் வாருங்களென்று இந்திய முதலீட்டாளர்களை அழைப்பது போலிருக்கிறது.

இந்த ஆண்டின் ஜனவரியிலிருந்து மே மாதம் வரையான ஏற்றுமதி வர்த்தகத்தால் வந்த வருவாய் 4.023 பில்லியன் டொலர்களாகும்.
கடந்த ஆண்டின் இதே காலப் பகுதிக்கான வருவாயை விட 5.4 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.

இவ்வாண்டின் முதல் 5 மாதங்களில் இறக்குமதிச் செலவு 8.2 பில்லியன் டொலர்கள்.
வர்த்தகப் பற்றாக்குறை 4.184 பில்லியன் அமெரிக்க டொலர்கள். கடந்த ஆண்டை விட 24.7 சதவீதம் அதிகரித்துள்ளது.

இத்தரவுகளைக் கருத்தில் கொள்ளாமல், சென்மதி நிலுவை (BOP) சீரடைந்து விட்டதாக இந்திய ஆய்வாளர்கள் சரியான தகவல்களை வழங்காமல் உண்மையை மூடி மறைக்க முற்படுவதன் தாத்பரியம் புரிந்து கொள்ளப்பட வேண்டியது.

அதேவேளை, அடுத்த மாதமளவில் இந்திய வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ஆனந்த் சர்மா தலைமையில் 105 பெரு வர்த்தக நிறுவனங்கள் "இந்திய கண்காட்சி' ஒன்றினை இலங்கையில் நடாத்தவிருக்கின்றன.

இருதரப்பு வர்த்தக ஒத்துழைப்பினை இந்நிகழ்வு அதிகரிக்க உதவுமென அமைச்சர் நியாயப்படுத்த முற்பட்டாலும், நீண்ட காலமாக இரு நாடுகளுக்கிடையே இருக்கும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தினை (Free Trade Agreement), முழுமையான பொருளாதார இரு தரப்பு ஒப்பந்தமாக (CEPA) மாற்றும் முயற்சியை இந்தியா இன்னமும் கைவிடவில்லை என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும்.

இந்தியாவிற்கும் இலங்கைக்குமிடையே உள்ள இருதரப்பு வர்த்தகம் 5 பில்லியன் டொலர்களை எட்டியுள்ளதாகக் குறிப்பிடும் சின்குவா (XINHUA) என்கிற சீன ஊடகம், "சீபா' ஒப்பந்தம் பற்றியும் அண்மையில் குறிப்பிட்டுள்ளது.

ஆகவே இலங்கையில் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான முதலீட்டு ஆதிக்கப் போர் ஆரம்பமாகியுள்ளதை இச் செய்திகள் எடுத்துக் காட்டுவதை அவதானிக்கலாம்.

சீனாவிற்கு இலங்கை கொடுக்க வேண்டி மொத்த கடன் 4.9 பில்லியன் டொலர்கள்.
இந்நிலையில் பன்னாட்டுக் கம்பனிகளுக்கு நிலங்களை விற்கும் அரசு, மன்னார், காவேரி கடல்படுகையில், எண்ணெய்- எரிவாயு அகழ்விற்காக, அக்கடல் பரப்பினை 15 துண்டுகளாகப் பிரித்து வெளிநாட்டு நிறுவனங்களிற்கு விற்க முற்படுவதைக் காணலாம்.

ஏற்கனவே இதில் ஒரு துண்டு, இந்தியாவின் கெயின் (CAIRN) நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு விட்டது.
மீதமுள்ள 14 துண்டுகளில் 8 -10 வரையான துண்டுகளிற்கான உரிமம் வழங்கும் ஏலம், இவ்வருட இறுதியில் நடாத்தப்படுமென்று பெற்றோலிய வள அபிவிருத்தி சபையின் செயலாளர் சாலிய விக்கிரமசூரிய அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதில் பலத்த போட்டியினை ஏனைய மேற்கு மற்றும் சீன நிறுவனங்களோடு இந்தியா எதிர்கொள்ளுமென எதிர்பார்க்கலாம்.

மன்னார் கடல் படுகையில் 10 துண்டுகளையும் காவேரி கடல் படுகையில் 5 துண்டுகளையும் இலங்கை அரசு கொண்டிருந்தாலும், காவேரிப் படுகையை ஏனைய நாடுகளுக்கு விட்டுக் கொடுக்க இந்தியா விரும்பாது என்பதை புரிந்து கொள்ளலாம்.

இருப்பினும் இலங்கையின் சீனா குறித்த சாய்வு நிலை, இந்தியாவின் முக்கியத்துவத்தை இலங்கையில் குறைப்பதற்கான ஒரு முக்கிய நிலைப்பாடென இந்திய ஆய்வாளர்கள் கணிப்பிடுகின்றார்கள்.

அதேவேளை, போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை குற்றச்சாட்டுக்களை முன் வைக்கும் சர்வதேசத்திடமிருந்து காப்பாற்றுவதற்கு இந்தியாவின் வகிபாகம் அவசியமென்பதை இலங்கை அரசு உணர்வதாகவும் இதே ஆய்வு நிறுவனம் குறிப்பிடுகிறது.

ஆகவே சர்வதேச அழுத்தங்களிலிருந்து விடுபட, மிக மெதுவாக, இந்தியாவுடனான பொருளாதார இணைவிற்கு இலங்கை தள்ளப்படுகிறது என ஊகிக்கின்றார்கள்.
அத்தோடு "சீபா' விற்கு மாற்றீடாக குறிப்பிட்ட சில துறை சார்ந்த பகுதிகளை இந்தியாவிற்கு வழங்க இலங்கை முன் வரலாமென்றும் இவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

ஆயினும் இலங்கையைப் பொறுத்தவரை வெளிநாட்டு முதலீடுகளைக் கையாளும் போது, சீனா, ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் போன்றவற்றை சமநிலைப்படுத்துமளவிற்கு இந்தியாவோடு அதன் வர்த்தக உறவினை மேற்கொள்ள முயல்கிறது.

உதாரணமாக பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் ஒரு நிதி முதலீட்டு நிறுவனமானது, தனது சகல நிதியையும் ஒரு கம்பனியில் போடுவதில்லை.
வெவ்வேறு கம்பனிகளுக்கு தமது நிதி வளத்தை பிரித்து முதலீடு செய்வார்கள்.

இதன் மறுதலையாக, வேற்று நாடுகளிடமிருந்து கடனடிப்படையில் முதலீடுகளை பெறும் போது, ஒரு நாட்டிலிருந்து முழுக் கடனையும் பெறாமல் பல்வேறு நாடுகளிடமிருந்து இலங்கை அரசு கடனைப் பெறுகிறது.
ஒரு நாட்டில் முழுமையாக சார்ந்திருக்கக் கூடாது என்பதற்காக இந்நகர்வு மேற்கொள்ளப்படுகிறது.

ஆகவே இலங்கையின் இத்தகைய இராஜதந்திர உறவுக் கையாளலைப் புரிந்து கொள்ளும் இந்தியா, தனது முதலீட்டு ஆதிக்கத்தை அதிகரிக்க இலங்கை மீது அழுத்தங்களை கொடுக்க ஆரம்பிக்குமென நம்பலாம்.

இருப்பினும் தீர்வினை எட்டாத தேசிய இன முரண்பாடும், தமிழகத்தின் ஈழ ஆதரவுப் போக்கும், இந்தியாவின் இத்தகைய நகர்வுப் போக்கின் தடைக் கற்களாக அமைவதை இந்திய கொள்கை வகுப்பாளர்கள் உணர்கின்றார்கள்.

'இலங்கை அரசோடு இணக்கப்பாட்டு அரசியலிற்குச் செல்லுங்கள்' என்று தூதுவர் அசோக் கே. காந்தா வலியுறுத்துவதன் பின்னணியில் இச்சிக்கல் கலந்து இருப்பதைக் காணலாம்.

ஆகவே இந்திய நலனிற்குள் ஈழத் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகள் கரைந்து விடுமா? என்கிற கேள்விக்கான பதிலை, இந்தியா இல்லாமல் தீர்வு இல்லை என்போர் கூற வேண்டும்.
 
-வீரகேசரி வாரஇதழ்   [29/07/2012]

No comments:

Post a Comment