Translate

Friday 10 August 2012

டெஸோ - விமர்சனத்துக்கு அப்பால் !!!!!!!


[இந்த கட்டுரை தொடங்கும் முன் ஒன்று தெளிவாக சொல்லிக் கொள்கிறேன். நான் கலைஞரின் இலக்கிய மேடைப்பேச்சு ரசிகனே தவிர, தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. தி.மு.கவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.]  ஆக்ஸ்ட் 12 டெஸோ மாநாடு அறிவித்ததும், கலைஞர் ஈழ மக்களுக்காக இப்பொது ஏன் கண்ணீர் வடிக்கிறார் ? போர் சமயத்தில் மத்திய அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்று ஈழ ம்க்களை காப்பாற்றி இருக்க வேண்டாமா ? இது வெறும் முதலை கண்ணீர் என்று பல விமர்சனங்கள் வந்துக் கொண்டு இருக்கின்றன. இனிமேலும் வரும். 

முதலில் ஒன்று தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும். ஈழப் பிரச்சனையால் தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும், யாருக்கும் ஓட்டு வங்கி பெருகவில்லை. பெருக போவதில்லை. இலங்கைப் போர் உச்சத்தில் இருக்கும் போது, 2009ல் நடந்த பாராளமன்ற தேர்தலில் தி.மு.க போட்டியிட்ட 18 இடங்களில் 16 இடங்கள் வெற்றிப் பெற்றது. [ காங்கிரஸ் 18ல் 9 இடங்கள் வெற்றி பெற்றதே என்று கேட்கலாம். இந்த வெற்றியே அவர்களுக்கு அதிகம். இந்த கதை இங்கு வேண்டாம்.] 


ஈழப்பிரச்சனை அதிகம் பேசி வை.கோ எந்த தேர்தலிலும் சொல்லிக் கொள்ளும் படியாக பெரிய வெற்றிப் பெறவில்லை. கலைஞர் டெஸோ மாநாட்டை வெற்றிக்கரமாக நடத்தினாலும், அடுத்த நான்கு ஆண்டு தமிழ்நாட்டில் அம்மாவின் ஆட்சி தான். பாராள மன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு வருடம் இருக்கிறது. அதற்குள் மக்கள் டெஸோ மாநாட்டை மறந்துவிடுவார்கள். அரசியல் ரிதியாக கலைஞருக்கோ அல்லது தி.மு.கவுக்கோ டெஸோ மாநாடு எந்த பயனும் இல்லை.


பெரும்பான்மையான தமிழக மக்கள் ஈழப்பிரச்சனையை பக்கத்து நாட்டு பிரச்சனையாக தான் பார்க்கிறார்கள். ஈழப்போரில் கலைஞர் மௌனமாக இருந்தது குற்றம் என்றால், எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதியாக கலைஞரின் ஒரு ரூபாய் அரிசி வாங்கி மக்கள் அதைவிட குற்றவாளிகள். இதை ஈழத்தை வைத்து அரசியல் செய்யும் துணிச்சலாக சொல்வார்களா !!!! 

** 

கலைஞருக்கு எதிரான விமர்சனம் 

ஈழத்தின் வீழ்ச்சி... தமிழர்களின் ஒற்றுமையின்மையே !!!!! ராஜபக்ஷேக் கூட அடுத்த இடத்தில் தான் வருகிறார். 40,000 தமிழர்கள் இறந்தும், அங்கு இருக்கும் அரசியல் கட்சிகள் இன்னும் தனித் தனியாக தான் இயங்கிக் கொண்டு இருக்கிறார்கள். இந்தியாவில் இருந்து சென்று பார்த்த தூது குழுவினர்களை தனித்தனியாக தான் பார்த்தார்கள். பாதிக்கப்பட்ட அவர்களே இன்னும் ஒற்றுமையில்லாமல் இருக்கும் போது, இங்கு இருக்கும் தமிழ்நாடு என்ன செய்ய முடியும் ? 

இன்னும் பிரபாகரன் வருவர். ஐம்பதேழு வயதில் புது இராணுவம் அமைத்து, அவர்களுக்கு பயிற்சி கொடுத்து ஈழம் மீட்பார் என்று அரசியல் நடத்துபவர்கள், ஏன் இருக்கும் ஈழ தமிழ் உயிர்களை மீட்க அல்லது காக்க எந்த நடவடிக்கை இல்லை ? பிரபாகரன் இருக்கும் போது ஈழம் சென்று போட்டோ எடுத்துக் கொண்டவர்கள், இப்போது ஏன் அங்கு சென்று அவர்களுக்கான உதவியை செய்யவில்லை. இவர்களில் வை.கோ கொஞ்சம் பரவாயில்லை. ஈழ நாட்டுக்காக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் போன்ற ஆக்கப்பூர்வமாக பேசுகிறார். மற்றவர்கள் ம்ம்ம். 

ஈழப்போர் முடியும் போது கலைஞர் முதலமைச்சாராக இருந்தார். அவ்வளவு தான். கலைஞர் விமர்சனம் செய்பவர்கள் ஏன் எம்.ஜி.ஆரை விமர்சனம் செய்யவில்லை ? 1987ல் ராஜீவ் - ஜெயவர்தனே - பிரபாகரன் ஒப்பந்தம் செய்யும் போது எம்.ஜி.ஆர் எங்கு சென்றார். உடல்நலம் சரியில்லாமல் இருந்தால், அவரது கட்சி என்ன நிலைப்பாட்டில் இருந்தது ? அந்த ஒப்பந்தத்தில் இருப்பது எல்லாம் அவர் எற்றுக் கொண்டாரா ? புலமைப்பித்தன் ‘இலங்கை பிரச்சனையில் ராஜீவ் காந்தி எம்.ஜி.ஆரை மிரட்டினார்’ என்று கூறினாரே ! அதற்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து என்ன பதில் ? என்று பல கேள்விகள் கேட்கலாம். ஆனால், மீண்டும் இது ஒரு விமர்சன கட்டுரையாக முடியும். நமது நோக்கம் அதுவல்ல.

ஈழப்போர் பொருத்தவரை மத்திய அரசு என்ன நிலைப்பாடில் இருந்ததோ, மாநில அரசு அதே நிலைப்பாடில் தான் இருந்தது. இந்திரா காந்தி ஆதரித்த போது ஆதரித்தார்கள் (எம்.ஜி.ஆர்). ராஜீவ் எதிர்க்க தொடங்கியதும் மௌனமானார்கள். அன்று முதல் இன்று வரை தமிழ முதலமைச்சர்களாக இருந்த எம்.ஜி.ஆர், கலைஞர் மௌனமாக தான் இருந்தார்கள். 

கலைஞர் மீது அதிகம் வைக்கப்படும் விமர்சனம் இது தான். ஈழப்போர் சமயத்தில் கலைஞர் மத்தியில் இருந்து தனது ஆதரவை திரும்ப பெற்று இருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், அனைத்து மாநிலங்களும் தமிழகம் உட்பட கலைஞரை வசைப்பாடியிருப்பார்கள். நாடு முழுக்க மறு தேர்தல் நடந்திருக்கும். தமிழ்நாட்டுக் கூட மக்களே கலைஞரை தீட்டி தீர்த்து இருப்பார்கள். தன் மாநில மக்களே ஆதரிக்காத ஒன்றை கலைஞர் செய்ய வேண்டும் என்று எப்படி எதிர்ப்பார்க்க முடியும் ?

இன்று கூடாங்குளத்தில் அனு மின்நிலையத்திற்காக போராடும் மக்களுக்கு சென்னையில் என்ன ஆதரவு இருந்தது ? முல்லை பெரியால் நீர் போராடும் விவசாயிகளுக்கு வேலூரில் இருந்து என்ன ஆதரவு கிடைத்தது ? சென்னையில் வாழ அதிகமாக பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களுக்கு ( என்னையும் சேர்த்து) மத்தியில் கூடாங்குளத்தில் என்ன நடந்தால் என்ன மனநிலை தான் பலருக்கும். மக்கள் ஆதரவு, மக்கள் ஒற்றுமை இல்லாத எந்த போராட்டமும் வெற்றிப் பெறாது. 

*** 

டெஸோவில் விவாதிக்கப்பட வேண்டியது 

டெஸோ வில் தனி ஈழம் கோரியோ அல்லது இலங்கை அரசை வசைப்பாடியோ, இருக்கும் உயிர்களுக்கு பிரச்சனை உண்டு பண்ணுவதற்கு பதிலாக அவர்களை காக்க எடுக்கப்படும் கூட்டம். நாளையே ஈழம் மலர வேண்டும் என்று துடிப்பவர்கள் அங்கு வாழ மக்கள் வேண்டும் என்று யோசிக்க வேண்டும் !! 

முதலில் மக்களை காப்போம், பிறகு ஈழத்தை மீட்டு கொள்ளுங்கள். ஈழத்தில் அகதி முகாமில் பலரது குரல், " எங்களை வாழ விடுங்கள்" என்று கெஞ்சும் நிலையில் விடுப்பட வேண்டும். அதை முதலில் செய்ய வேண்டும்.

இந்திய ஊடகங்கள் ஈழப்பிரச்சனையில் கவனம் செலுத்த வேண்டும் என்றால் தமிழகத்தில் இரண்டு கட்சிகள் கையில் தான் உள்ளது. ஒன்று தி.மு.க, இன்னொன்று அ.தி.மு.க. வேறு எந்த கட்சியும் காட்டு கத்து கத்தினாலும் தமிழகம் தாண்டி கேட்காது. தி.மு.க ஈழப்பிரச்சனை கையில் எடுத்துள்ளதை, ஆதரித்து இருக்கும் ஈழ உயிர்களை காப்பாற்ற வேண்டும். டெஸோவில் முக்கியமான விவாதிக்கப்பட வேண்டியதாக நாம் கருதுவது....

1. இந்தியாவுக்கு குடிபெயர்ந்த அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கினால் இந்தியாவில் நிம்மதியான அவர்களால் வாழ முடியும். 

2.போரில் பாதிக்கப்பட்ட இடங்களை சரி செய்து, மீண்டும் தமிழ் மக்கள் வாழ வழி வகுக்க வேண்டும். குறிப்பாக கல்வி, மருத்துவ வசதி போன்றவற்றை அமைத்துதர வேண்டும். இலங்கை அரசுக்கு பணம் தேவைப்பட்டால், ஆயுதம் வழங்கிய கையால் பண உதவி செய்ய இந்திய அரசு தயாராக இருக்க வேண்டும்.

3.போரால் உடலால், மனதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும். தொழில், வேலை போன்றவற்றை விவாதிக்கப்பட வேண்டும். 

4.போர் முடிந்து மூன்று வருடங்களாகியும், பல ஆயிரக்கணக்கான ஈழ தமிழர்கள் சிறையில் இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்து, இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அரசு உதவி செய்ய வேண்டும். 

5. தங்க வீடு வசதி செய்துக் கொடுத்து, அவர்களும் இலங்கை முதல் தர குடி மக்களாக நட்த்த வேண்டும். 

இன்னும் விவாதிக்க எவ்வளவோ உள்ளது. ஆனால், ”கலைஞர் சொல்லியாச்சு ஈழம் உறுதியாச்சு” போன்ற பேனர் வாசகங்கள் மீண்டும் அரசியலாக்க தான் பார்க்கிறார்கள். கலைஞர் கவனத்தை பெற டெஸோவை விமர்சனமாக்குகிறார்கள். 

ஈழப்பிரச்சனை வைத்து யார் அரசியல் செய்தாலும், ஒன்று தெளிவாக புரிந்துக் கொள்ளுங்கள். ஈழத்தால் உங்களுக்கு ஒரு ஓட்டுக்கூட அதிகமாக கிடைக்க போவதில்லை. இதைப் பற்றி எதையும் டெஸோவில் விவாதிக்கப்படவில்லை என்றால்.... இதுவும் சாதான மாநாடாக தான் முடியும். 

[ தனி ஈழம் பற்றி பேசவில்லை. ராஜபக்‌ஷே மீது போர் குற்றம் சுமத்த வேண்டும் போன்ற வாதங்களை கொஞ்ச நாளுக்கு பேசாமல் இருப்பது, அங்கு இருக்கும் தமிழர்களுக்கு நல்லது. இப்போதை அங்கு அகதி முகாமில் இருக்கும் தமிழர்களுக்கு இந்த இரண்டும் பலனில்லை.]

 ** 

இதற்கு மேலும், ”கலைஞர் துரோகி, அவர் எப்படி ஈழத் தமிழருக்காக மாநாடு நடத்தலாம் என்று கேட்பவர்கள், ஈழப் பிரச்சனைக்கான மாநாடு யார் நடத்த வேண்டும் என்று நீங்கள் கூறுங்கள். வை.கோ, சீமான், பழ.நெடுமாறன் என்று கூறலாம். எத்தனையோ மாநாடுகள் அவர்கள் நடத்திவிட்டார்கள். போர் முடிந்து மூன்று வருடத்தில், அங்கு எந்த முன்னேற்றமும் இல்லை. கொட நாடு சென்ற அம்மா நடத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களா !! தராளமாக நடத்தட்டும். யார் வேண்டாம் என்றார்கள். 

[விட்டா... சோனியா காந்தி, ராஜபக்‌ஷே நடத்த வேண்டும் என்று இவன் சொல்லுவான் என்று விமர்சிப்பீர்கள். ஆட்சியில் இருப்பவர்கள் போராட தொடங்கிவிட்டால் அவர்கள் இருக்கும் பதவிக்கு மரியாதை கிடையாது.] 

நம் கருத்து இருக்கும் ஈழ உயிர்களை பாதுகாக்க வேண்டும். உலகளவில் ஈழப்பிரச்சனை எடுத்து செல்ல வேண்டும். அவர்களுக்கு ஒரு விடிவு காலம் பிறக்க வேண்டும். அதை யார் செய்தால் என்ன ?

No comments:

Post a Comment