Translate

Wednesday 5 September 2012

இலங்கையை மையப்படுத்தி பனிப் போர் மோகம் சூழ்கிறது

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் போன்று இது வெளிப்படையாக உணரப்படாத போதிலும் ஒழுங்குமுறையில் இந்தியாவும் சீனாவும் பயங்கரமான விதத்தில் இலங்கையில் பலப்பரீட்சையில் ஈடுபடும் நிலை உருவாகியுள்ளது.
 எங்களில் எவருக்கும் வெளிப்படையாகத் தெரியாதபோதிலும் நாங்கள் எவரும் அறியாத விதத்தில் இலங்கையை மையப்படுத்தித் தற்போது பனிப்போரொன்று உருவாகி வருகிறது. இந்தப் பனிப்போரில் சீனாவும் இந்தியாவும் நேருக்கு நேர் மோதிக்கொள்ள ஆரம்பித்துள்ளன.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் போன்று இது வெளிப்படையாக உணரப்படாத போதிலும் ஒழுங்கு முறையில் இந்தியாவும் சீனாவும் பயங்கரமான விதத்தில் இலங்கையில் பலப்பரீட்சையில் ஈடுபடும் நிலை உருவாகியுள்ளது. வேறொரு விதத்தில் கூறுவதானால் இலங்கையை மையப்படுத்தி இவ்விரு நாடுகளும் அரசியற்போர் ஒன்றில் இறங்கியுள்ளன என்பதே மிகப் பொருத்தமானதாகும். 
 
ஆசிய வட்டகையின் இரு பலமிக்க தரப்புகளின் பலப்பரீட்சையின் மத்தியில் இலங்கை சிக்கிக் கொண்டிருப்பது பயங்கரமானது. இன்றைய இலங்கை அரசின் கொள்கை நிலைப்பாடே இத்தகைய பயங்கர நிலைக்கு நாட்டைத் தள்ளிவிட்டுள்ளது. இந்தியாவைத் தனது மூத்த சகோதரன் எனக் குறிப்பிட்டு எத்தனை தூரம்தான் இலங்கை உயர்த்திப் பேசுகின்றபோதிலும் இலங்கை அரசு சீனாவுடன் தான் மிக நெருக்கமான உறவைப் பேணிவருகிறது.
 
 
அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப் பணியைச் சீனா பொறுப்பேற்றதையடுத்தே இலங்கை அரசு சீனாவுடன் நெருக்கமான உறவைப் பேண முயல்வதாக இந்தியா உணரத் தலைப்பட்டது. இலங்கை அரசு இரு கை நீட்டி மேற்கொண்ட வலிந்த அழைப்பின் பேரிலேயே சீனா, அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப்பணிகளில் கைபோட்டது.
 
 
 
ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப் பணியில் சீனா ஈடுபடாது புறமொதுங்க வைக்க பல தரப்பட்ட வழிகளில் இந்தியா முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அந்த முயற்சிகளில் இந்தியாவால் வெற்றியீட்ட இயலவில்லை. அந்தக் கௌரவப் போரில் வெற்றியீட்டிய சீனா இன்று அம்பாந்தோட்டை துறைமுகத்தை முற்றுமுழுதாகச் செயற்பட வைக்கும் நிலையை ஏற்படுத்தி வைத்துள்ளது.
 
 
 
அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப் பணியை சீனா கையேற்று எதிர்பார்த்த பலன் அதன் மூலம் கிட்டாது. இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையேயான நெருங்கிய நட்பு விரிசலடையக் கூடுமென்ற இந்தியாவின் கணக்கு தப்புக் கணக்காக ஆன நிலையே தற்போதைய களநிலையாகக் கொள்ளத்தக்கது.
 
 
 
அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை முழு அளவில் செயற்படச் செய்ய சீன அரசு ஏற்பாடுகளை மேற்கொண்டு வரும் நிலையில் திரைக்குப் பின்னால் அரசியல் ரீதியில் ராஜதந்திர காய்நகர்த்தல் ஒரு புறம் பயங்கர நிலையொன்றை உருவாக்கி வருகிறது.
 
 
 
சீன இராணுவத்தினரின் உதவியுடன் இலங்கை அரசு, வடபகுதியில் இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கான குடியிருப்புத் தொகுதியொன்றைக் கட்டியெழுப்ப திட்டமிட்டு வருகிறது. இதனை இந்தியா நன்கு கண்காணிக்கிறது.
 
 
 
அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப் பணி சீனாவிடம் வழங்கப்படுவதைத் தவிர்த்து விட இந்தியா முடிந்த அளவுக்கு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அது இயலாமற்போய் கடைசியில் தான் ஒதுங்கிக் கொள்ள நேர்ந்ததுபோல ஆகிவிடாமல், இந்த விடயத்தில் தான் தோல்வியுறக் கூடாதென இந்தியா தீர்க்கமாக முடிவு செய்து கொண்டுள்ளதாகத் தோன்றுகிறது.
 
 
 
வட பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கென குடியிருப்புத் தொகுதியொன்றை நிர்மாணிக்கும் பணி சீனாவுக்கு வழங்கப்படுவதற்கு இந்தியா காட்டும் தீவிர எதிர்ப்பு நிலையினின்றும் இது தெளிவாகப் புலப்படுகிறது. ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப் பணியை சீனாவிடம் ஒப்படைப்பது குறித்து இந்தியா காட்டிய எதிர்ப்பை விட, தற்போதைய ராணுவ குடியிருப்பு நிர்மாணப் பணி குறித்து இந்தியா காட்டும் எதிர்ப்பு மூன்று நான்கு மடங்கு அதிகமானது.
 
 
 
இந்தியா வெறுமனே இவ்விடயத்தில் எதிர்ப்பை வெளிப்படுத்துவதோடு நிறுத்திக் கொள்ளத் தயாராயில்லை என்பது அண்மைய நாள்களில் இந்தியா முன்னெடுத்து வரும் செயற்பாடுகள் மூலம் உறுதியாகிறது. இந்தியாவுக்கு அண்மையில் அமைந்துள்ள அந்தமான் தீவில் தனது இராணுவ நடவடிக்கைகளைப் பல மடங்கால் அதிகரித்திருப்பதன் மூலம் இந்தியா, இலங்கையின் பக்கம் சிவப்பு விளக்கு சமிக்ஞையைக் காட்ட முயல்வதாகக் கருத முடிகிறது. 
 
 
 
அந்தமான் தீவைப் பயன்படுத்தி காட்டப்படும் சிவப்பு விளக்கு சமிக்ஞையை இலங்கைக்கான அபாய அறிவிப்பு மட்டுமல்ல. இராணுவப் பிரசன்னத்தை அதிகரித்தும், புதிதாக விமானப்படை முகாமொன்றை நிறுவியும், மேன்மேலும் உளவுப் பிரிவுகளைப் பயன்படுத்தியும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் பயணிக்கும் சீன நாட்டுக் கப்பல்களை வேவு பார்க்கும் நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொண்டு வருகிறது. சீனாவிலிருந்து இலங்கைக்கு வரும் கப்பல்களை வேவு பார்ப்பதற்கு இந்தியாவுக்குக் கிட்டியுள்ள சிறந்ததொரு வாய்ப்பு அந்தமான் தீவே.
 
 
 
அந்தமான்தீவு இத்தகைய உளவுபார்க்கும் வேலைகளுக்கெனவே அமைந்ததுபோன்ற பொருத்தமான தொரு இடமாகும். அதனை இன்று இந்தியா நன்கு பயன்படுத்திக்கொள்வது புதுமையானதொன்றல்ல.
 
 
 
இந்தியா, இலங்கைப் பிரச்சினை விடயத்தில் அமெரிக்காவுடன் இணைங்கிச் செயற்பட விழைவது அண்மைக்காலமாக இந்தியாவின் நிலைப்பாட்டில் அவதானிக்கக் கூடியதாகவுள்ள மற்றொரு தெளிவான மாற்றமாகும். அமெரிக்காவும் கூட சீன விரோதப் போக்கைக் கொண்டுள்ளமையே இதற்கான அடிப்படைக் காரணமாகும்.
 
 
 
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் உருவாகியுள்ள இப் புதிய நெருக்கம் மற்றொரு விடயத்தைச் சொல்லாமல் சொல்லிப் புரிய வைப்பதாகக் கொள்ளத்தக்கது. அது அந்தமான் தீவில் இந்தியப் படைகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு, அமெரிக்கப் படைகள் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருவதாகும்.
 
 
 
மற்றொருபுறம் அமெரிக்கா அண்மைக்காலமாக முன்வைத்து வரும் கருத்தையும் புறம் தள்ளிவிட இயலாது. அல்கெய்தா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் தென்னாசிய நாடுகளில் ஊடுருவி அந்த நாடுகளில் மறைந்திருந்தவாறே புகலிடம் பெற்று வருவதாக அமெரிக்கா தெரிவித்து வருகிறது. இலங்கையிலும்கூட அவ்விதம் அல்கெய்தா தீவிரவாதிகள் மறைந்து வாழ்ந்து வருகின்றனர் என்று அமெரிக்கா நம்புகிறது.
 
 
 
அமெரிக்கா இவ்விதம் அல்கெய்தா தீவிரவாதிகள் குறித்து கருத்து வெளியிட்டு வருகையில், இந்தியாவோ, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேச தீவிரவாதிகள் இலங்கைக்குள் ஊடுருவி, இங்கிருந்தவாறே தமது திட்டங்களைத் தீட்டி வருகின்றனர் எனத் தெரிவித்துவருகிறது.
 
 
 
இந்தியாவும் அமெரிக்காவும் வெளியிட்டு வரும் இத்தகைய கருத்துக்கள் மூலமும், மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மூலமும் இவ்விரு நாடுகளும் சூட்சுமமான விதத்தில் ஏதோ காரணங்களை முன்வைத்து இலங்கையில் கால் பதிக்கத் திட்டமிட்டு வருவதை உணரமுடிகிறது.
 
 
 
இவ்விரு நாடுகளுக்கும் இலங்கையில் கால்பதிக்க வாய்ப்பை உருவாக்கிக் கொடுப்பது இன்றைய அரசே. சீனா தொடர்பாக எமது அரசு கடைக்கொள்ளும் கொள்கை நிலைப்பாடே அதற்கு வழி சமைத்துக் கொடுத்துள்ளது.
 
 
 
சீனாவின் உதவியுடன் இலங்கை அரசு வடபகுதியில் நிர்மாணிக்கவுள்ள பாதுகாப்புப் படையினருக்கான தொடர் குடியிருப்புத் திட்ட வேலைகளை ஆரம்பித்து வைக்கவே சீன நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு வந்திருக்கிறார். இதுவும் அமெரிக்காவையும் இந்தியாவையும் மேலும் விழிப்பு நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது.
 
 
 
சீன நாட்டுப் பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் தொடர்பாக இந்தியா வெளிப்படுத்தவுள்ள பதில் நடவடிக்கை எதுவென கணிப்பதற்கு காலம் இன்னமும் கனியவில்லை. அதேவேளை இவ்விடயத்தில் இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கவுள்ள ஆதரவு குறித்தும் குறைத்து மதிப்பிட இயலாது.
 
 
 
இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து தற்போது போரொன்றுக்கு முகம் கொடுக்கத் தயாராகின்றனவா என்பது குறித்து எதுவும் தற்போது கூற இயலாதுள்ளது. ஆனால் மற்றொன்று குறித்து உறுதிப்படுத்த இயலும்.
 
 
 
இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து இலங்கையை மையப்படுத்தி சீனாவுடன் மோதத் தயாராகும் இந்நிலை, மேன்மேலும் தீவிரமடையுமா அல்லது அடங்கிவிடுமா என்பதை, இலங்கை அரசு இவ்விடயத்தில் மேற்கொள்ளவுள்ள முடிவு மற்றும் கடைக்கொள்ளவுள்ள கொள்கை நிலைப்பாடு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டது.
 
 
 
இலங்கையை மையப்படுத்தி உருவாகிவரும் இப்பனிப் போர் இலங்கையின் வாசற்கதவைத் தட்ட நேர்ந்துள்ள இன்றைய நிலையில், இலங்கை அரசு ஒன்றை மட்டும் மனதில் இருத்திச் செயற்பட வேண்டியுள்ளது. அது இந்தியா, அந்தமான் தீவில் இராணுவ முகாம் நிறுவுவதும், அதற்கு அமெரிக்காவின் உதவி ஒத்தாசை கிட்டுவதும், வெறுமனே இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் பயணிக்கும் சீன நாட்டுக் கப்பல்களை வேவுபார்ப்பதற்காக மட்டுமல்ல என்பதாகும்.

No comments:

Post a Comment