Translate

Monday 3 September 2012

முஸ்லிம் சமூகத்தை அரவணைத்து அவர்கள் திருப்தியடையக்கூடிய தீர்மானங்களை மேற்கொள்வோம்

முஸ்லிம் சமூகத்தினை அரவணைத்து அவர்களின் ஆதரவினைப் பெற்று அவர்களும் திருப்தியடைக்கூடிய வகையில்தான் எங்களுடைய முடிவுகளை நாம் எடுப்போம். முஸ்லிம்களுக்கு மாறாகவோ, எதிராகவோ அல்லது அவர்களைப் பலவீனப்படுத்தும் வகையிலோ நாம் செயற்படமாட்டோம். நீதியினைக் கேட்கின்ற நாங்கள் எவருக்கும் அநீதியினை இழைக்க முடியாது என தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.


கிழக்கு மகாணசபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து துறைநீலாவணை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம் முன்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையின் கீழ்  தமிழ் மக்களின் முக்கியமான பிரச்சினைகளை கையாள வேண்டிய நிலைமைக்கு இலங்கை அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில்தான் தற்போதைய கிழக்கு மாகாணத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தத் தேர்தல் நடைபெற வேண்டிய அவசியம் இல்லை. ஏறத்தாழ ஒரு வருடம் முன்பாக இந்தத் தேர்தலை நடத்துகின்றார்கள். இதில் ஒரு கபடமான யோசனை இருப்பது குறித்து மக்கள் அறிவீர்கள்.

கிழக்கு மாகாணத் தேர்தலை நடத்துவதன் நோக்கம் குறித்து அரசாங்க அமைச்சர்களே பகிரங்கமாக கூறியிருக்கின்றார்கள். சர்வதேச சமூகத்தின் முயற்சிகளைத் தோற்கடிக்க வேண்டும். கிழக்கு மாகாணத் தேர்தலில் அரசாங்கம் வெற்றி பெற்றால், தமிழ் - முஸ்லிம் மக்கள் அரசாங்கத்தை ஆதரிக்கின்றார்கள். எனவே, சர்வதேச சமூகம் எந்தவிதமான அழுத்தங்களையும் அரசாங்கம் மீது பிரயோகிக்கத் தேவையில்லை என்பதை வலியுறுத்த முடியும். அதற்கு இந்தத் தேர்தலில் அரசாங்கம் வெற்றிபெற வேண்டும் என்று அவர்கள் கூறியிருக்கின்றார்கள். இதுதான் இந்தத் தேர்தலுடைய பின்னணியாகும். கிழக்குத் தேர்தலின் முடிவினை சர்வதேச சமூகம் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறது.

இந்தத் தேர்தலில் அரசாங்கத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து போட்டியிடும் என்றே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நம்பினார். அவ்வாறு இணைந்து போட்டியிட்டால் வெற்றி இலகுவானதாகி விடும். அந்த வெற்றியினைக் காட்டி சர்வதேச சமூகத்தின் முயற்சிகளைப் புறந்தள்ள முடியும் என்று அவர் நினைத்தார். ஆனால், முஸ்லிம் மக்களும் - முஸ்லிம் காங்கிரஸும் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவதை விரும்பவில்லை. அதன் காரணமாக தற்போது முஸ்லிம் காங்கிரஸ் தனித்துக் களமிறங்கியுள்ளது. இதனால் நிலைமை முழுமையாக மாறியிருக்கின்றது. அரசாங்கம் எதிர்பார்த்த வெற்றியினை அடைய முடியாததொரு நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ் பேசும் மக்கள்  குறிப்பாக தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் எவ்வாறு வாக்களிக்கவுள்ளனர் என்பதை சர்வதேசம் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது. தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு போதியதொரு சுயாட்சி தமக்கு வேண்டும் என்கின்ற இலக்கின் அடிப்படையில் வாக்களிக்கப்போகின்றார்களா? இதன் மூலமாக சர்வதேசத்தின் பங்களிப்பு தமக்குத் தேவை என்றும் அது தொடர வேண்டும் என்கிற கருத்தினை முன்வைக்கப் போகிறார்களா? அல்லது மஹிந்த ராஜபக்ஷ கூறுவது போல் என்னை நம்புங்கள். உங்களில் நான் ஒருவன் என்பதை நம்பி வாக்களிக்கப்போகின்றார்களா? என்பதை சர்வதேச சமூகம் அவதானித்துக் கொண்டிருக்கிறது. இதற்குப் பதில் அளிக்க வேண்டியது எம் மக்களின் கடமையாகும்.

இந்த மாகாணசபை முறைமையானது எங்களுக்கு உரிய தீர்வென்று நாம் கூறவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையினால் நிறைவேற்றப்பட்டுள்ள சிபாரிசுகளின் அடிப்படையில், அதிகபட்ச அதிகாரப் பகிர்வுடன்  எமக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.

இந்தத் தேர்தலில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. இதை மஹிந்த ராஜபக்ஷ கூட எதிர்பார்க்கவில்லை. இது கடவுளுடைய செயல். நீண்டகாலமாக நாம் துன்பங்களையும் துயரங்களையும் எதிர்நோக்கி வருகின்றோம். இறைவன் எமக்கொரு சந்தர்ப்பத்தினை வழங்கியுள்ளான். இதை நாம் உறுதியாகப் பயன்படுத்த வேண்டும்.

கிழக்குத் தேர்தல் தொடர்பில் சர்வதேச சமூகம் பகிரங்கமாக தொடர்புபடாது. நாமும் சர்வதேச சமூகத்தின் மீது மாத்திரம் நம்பிக்கை வைத்துக்கொண்டிருக்கவும் முடியாது. மக்களும் தமது முடிவுகளின் மூலமாக தங்களுடைய விருப்புகளை வெளிக்காட்ட வேண்டியது அவசியமாகும். அதற்கானதொரு சந்தர்ப்பமாகவே இந்தத் தேர்தல் அமைந்துள்ளது. சர்வதேச சமூகத்துக்கு இதன் மூலம் நாம் தெளிவானதொரு செய்தியை வழங்க முடியும்.

இன்னும் சில மாதங்களில் வடக்கு மாகாணசபைத் தேர்தலும் இடம்பெறவுள்ளது. அந்தத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிச்சயமாக வெற்றிபெறும். அதன்போது வட மாகாணமும் கிழக்கு மாகாணமும் இணைந்து பல விடயங்கள் தொடர்பில் ஒருமித்துச் செயற்படக் கூடியதொரு நிலைமை உருவாக வேண்டும். அப்படியென்றால் கிழக்கு மாகாணத்திலும் நாம் வெற்றியீட்ட வேண்டும்.

நாம் எவருக்கும் அநீதி இழைக்கமாட்டோம். குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினை அரவணைத்து அவர்களின் ஆதரவினைப் பெற்று அவர்களும் திருப்தியடைக்கூடிய வகையில்தான் எங்களுடைய முடிவுகளை நாம் எடுப்போம். முஸ்லிம்களுக்கு மாறாகவோ, எதிராகவோ அல்லது அவர்களைப் பலவீனப்படுத்தும் வகையிலோ நாம் செயற்பட மாட்டோம். நீதியினைக் கேட்கின்ற நாங்கள் எவருக்கும் அநீதியினை இழைக்க முடியாது.

ஆனால், எமது தமிழ் மக்கள் கௌரவத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ வேண்டும். பாதுகாப்புடன் வாழ வேண்டும். எமது மக்கள் போதிய சுயாட்சியின் மூலமாக தங்களுடைய அபிலாஷைகளை நிறைவேற்றி, சரித்திர ரீதியாக வாழ்ந்துவந்த மண்ணில் தொடர்ந்தும் அவர்கள் வாழ வேண்டும். அதற்கு அவர்களுக்கு உரித்துண்டு. அதை எவரும் மறுக்க முடியாது' என்றார்.

இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், பொன்.செல்வராசா, எஸ்.யோகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment