Translate

Wednesday 3 October 2012

இலங்கைத் தமிழர்களுக்கான இந்திய அரசின் பணிகளில் திருப்தி இல்லை: மு.கருணாநிதி

இலங்கைத் தமிழர்களுக்காக இலங்கையில் இந்திய அரசு மூலம் நிறைவேற்றப்படும் பணிகள் திருப்தியாக இல்லை. இலங்கையில் தமிழர்கள் சுதந்திரமாகவும், சுயமரியாதையுடனும் வாழ வேண்டும். இதற்கான தீர்மானங்கள் டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்டு உள்ளன. இந்த தீர்மானங்கள் ஐ.நா.சபையில் இந்திய அரசின் ஆதரவுடன் ஏற்கப்பட வேண்டும்' என்று தி.மு.க.தலைவர் மு.கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். 


டெசோ அமைப்பின் கலந்துரையாடல் கூட்டம் இன்று புதன்கிழமை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றியுள்ள கருணாநிதி, 

'டெசோ மாநாட்டு தீர்மானங்களை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரிடமும் ஜெனீவாவில் உள்ள மனித உரிமைப் பேரவையிடமும் கையளிக்கவுள்ளோம். ஏற்கனவே அறிவித்தவாறு  தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. நாடாளுமன்ற  தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் இந்த தீர்மான அறிக்கையை எடுத்தச் செல்வது குறித்த விளக்கங்களை இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விவாதித்தனர். 

கூட்டத்தில் இது தொடர்பாக ஒப்புதல் வழங்கப்பட்டது. ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவை ஆணையாளரைப் பார்ப்பதற்கும், நியூயோர்க்கில் ஐ.நா. பொதுச் செயலாளரை பார்ப்பதற்கும் திகதி கிடைத்தவுடன் இருவரும் டெசோ தீர்மான நகல்களுடன் செல்ல இருக்கிறார்கள். அங்கிருந்து உறுதியான திகதி இதுவரை வரவில்லை. 
 
இது தொடர்பாக அவர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி வருகிறோம். உறுதியான திகதி தொடர்பில் அறிவிக்கப்பட்டவுடன் தெரியப்படுத்தப்படும். 

இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் இலங்கையில் இந்திய அரசு மூலம் நிறைவேற்றப்படும் பணிகள் திருப்தியாக இல்லை. அந்த தகவல்களும் இந்த நகல்களுடன் இணைத்து அதுபற்றி தெளிவாக எடுத்துச் சொல்ல இருவரும் இந்த பயணத்தை மேற்கொள்கிறார்கள். 

இலங்கையில் தமிழர்கள் சுதந்திரமாகவும், சுயமரியாதையுடனும் வாழ வேண்டும். இதற்கான தீர்மானங்கள் டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்டு உள்ளன. இந்த தீர்மானங்கள் ஐ.நா.சபையிலும் இந்திய அரசின் ஆதரவுடன் ஏற்கப்பட வேண்டும்' என்றார். (மாலைமலர்)

No comments:

Post a Comment