Translate

Sunday 18 November 2012

ஆசியாவின் மற்றொரு மியன்மாராக இலங்கை; சபையில் மங்கள விமர்சனம்

ஆசியாவின் மற்றொரு மியன்மாராக இலங்கை; சபையில் மங்கள விமர்சனம்
news
இலங்கை இன்று சர்வதேச சமூகத்திடமிருந்து அந்நியப்படுத்தப்பட்டு வருகின்றது. ஆசியாவில் மற்றும் ஒரு மியன்மாராக உருவாகி வருகின்றது என ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர நேற்று  விமர்சித்தார். நாடாளுமன்றில் வரவு செலவுத்திட்ட உரை மீதான எட்டாவது நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே மங்கள சமவீர மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது:


ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தால் நாட்டில் வாழும் 99.9 வீதமான மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் கிடையாது. 0.1 வீதமான தனவந்தர்களின் மேம்பாட்டை கருத்தில் கொண்டே அது தயாரிக்கப்பட்டுள்ளது.

முன்பு சாதாரணமான ஒரு காரை வைத்து ஒடியவர்கள் இந்த அரசின் காலத்தில் பலகோடி ரூபா பெறுமதியான சொகுசுக்கார்கள் பலவற்றுக்கு சொந்தக்காரர்களாக இருக்கின்றார்கள்.

ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பங்குச் சந்தையில் கொடிகட்டிப் பறக்கின்றனர். இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கருத்திட்டங்களுக்கு 120 கோடி ரூபா முதல் 180 கோடி ரூபாவரை வருடாந்தம் தரகுப் பணமாக (கொமிசன்) பெறுகின்றனர்.

கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் கறுப்புப்பணமும் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணமும் பங்குச் சந்தையில் உலாவுவதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.

"சிறிலங்கன் எயார் லைன்ஸ்' தலைவரின் மகன் இதில் முக்கிய பங்காளியாக இருக்கின்றார். வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து கமிஷனாகக் கிடைக்கும் பணம் சுவிஸ் வங்கியில் வைப்பிடப்பட்டுள்ளன. மற்றும் ஒரு பகுதி இங்கு உள்நாட்டில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. சீன இணையத்தளம் ஒன்று இதனைத் தெளிவாகச் சுட்டிக் காட்டி உள்ளது.

நாட்டில் அப்பட்டமாக மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன. இனப்படுகொலைகள் இடம்பெறுகின்றன. பிரதம நீதியரசருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள குற்ற விசாரணை நீதித்துறை மீதான அரசின் தலையீட்டை, ஆக்கிரமிப்பை உறுத்திப்படுத்தி உள்ளது எனச் சர்வதேச சமூகமே குற்றம் சாட்டி உள்ளது.

அதுமட்டுமல்ல இலங்கை இன்று மோசடிகளின் கேந்திர நிலையமாக மாறி வருகின்றது. இதனால் நமது நாடு இன்று சர்வதேச சமூகத்தினால் அந்நியப்படுத்தப்பட்டுள்ளது  என்றார்.

No comments:

Post a Comment