Translate

Friday 30 November 2012

சம்பூர் என்ற கிராமமே இலங்கையின் வரைபடத்திலிருந்து அழிக்கப்பட்டிருக்கின்றது


சம்பூர் என்ற கிராமமே இலங்கையின் வரைபடத்திலிருந்து அழிக்கப்பட்டிருக்கின்றதுஒரு அரசாங்கம் தான் செய்ய வேண்டிய கடமையைப் புறந்தள்ளிவிட்டுதனது இராணுவ முன்னெடுப்புகளால் உயிருக்கு அஞ்சி நாட்டைவிட்டு வெளியேறி அங்கு அகதிகளாக வாழும் தமிழ் மக்களிடம் உள்நாட்டில் அகதிகளாக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவ வேண்டும் என்று எதிர்பார்ப்பது வெட்கக்கேடான விடயம். 

ஆயினும் தங்களது கடின உழைப்பில் ஈட்டிய சொற்ப வருமானத்தில் தங்களது செலவுகளைக் குறைத்துக்கொண்டு எமது மக்களுக்கு அவர்கள் செய்திருக்கின்ற உதவிகள் அளப்பரியவை. 


2013
ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்புமீது இன்று 29.11.2012மீள்குடியேற்றம் தொடர்பாக நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளரும் யாழ். பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆற்றிய உரையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

அவரது உரையின் முழுவிபரம் வருமாறு: 

நாங்கள் தற்போது இனப்பிரச்சினையுடன் தொடர்புடைய மீள்குடியேற்றத்திற்கான நிதியொதுக்கீடு தொடர்பாக விவாதித்துக் கொண்டிருக்கின்றோம். மீள்குடியேற்றத்திற்கென்று இந்த வரவு-செலவுத்திட்டத்தில் மூலதனச் செலவாக ரூ.26 கோடியே 32 இலட்சத்து 30ஆயிரம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. 

இத்தொகையில் தமிழ் மக்களின் அழிக்கப்பட்ட வீடுகளைக் கட்டுவதற்கும் வாழ்வாதாரங்களுக்கும் எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை அரசாங்கம் இச்சபைக்குத் தெரிவிக்க வேண்டும். 

யாழ் மாவட்டம் வலிகாமம் வடக்கில் மட்டும் 24 கிராமசேவையாளர் பிரிவுகளுக்குட்பட்ட கிராமங்களில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மீள்குடியேற்றப்பட வேண்டியுள்ளனர். இவர்கள் இடம்பெயர்க்கப்பட்டு இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாகிவிட்டது. இவர்களது வீடுகள் அனைத்தும் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன. யாழ் மாவட்டத்தின் 11முகாம்களிலும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனும் இவர்களில் பல்லாயிரம் பேர் வாழ்கின்றனர். 

மாதகலில் உள்ள மக்களின் காணிகளைப் பலவந்தமாகப் பிடித்து வைத்திருக்கும் கடற்படையினர் காணிகளைத் தமக்கு எழுதிக்கொடுக்குமாறு மக்களை மிரட்டுகின்றனர். திருகோணமலை சம்பூர் பிரதேசத்தில் 1500க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 7000க்கும் மேற்பட்ட மக்கள் மீள்குடியேற்றப்பட வேண்டியுள்ளனர். இவர்களின் வீடுகள் முழுமையாகவும்நான்கு பாடசாலைகள்வைத்தியசாலை பல கோயில்கள் என்பனவும் போர் முடிந்த பின்னர் இராணுவம் புல்டோசர் மூலம் இடித்துத் தரைமட்டமாக்கி அடையாளம் தெரியாமல் மண்ணுக்குள் புதைத்திருக்கின்றது. 

இன்று சம்பூர் என்ற கிராமமே இலங்கையின் வரைபடத்திலிருந்து அழிக்கப்பட்டிருக்கின்றது. இந்த மக்கள் மழையிலும் வெயிலிலும் நான்கு முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கான உலர் உணவு நிறுத்தப்பட்டு எட்டு மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. இவர்களது வாழ்வாதாரத்திற்கான உதவிகள் எதுவுமே இல்லை. கிழக்கு மாகாண ஆளுநரும்இராணுவத்தினரும் அதிகாரிகளும் இவர்களை மிரட்டி தண்ணீரற்ற விவசாயம் செய்ய முடியாத காட்டுப் பிரதேசத்தில் இவர்கட்கு காணிகளைக் காட்டுகின்றனர். 


முல்லைத்தீவு கேப்பாபிலவில் 110 குடும்பங்கள் தங்களது காணிகளுக்குச் செல்ல விடாமல் தடுக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் சீனியாமோட்டையில் காடாக இருக்கும் தனியார் நிலத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளனர். அவர்களது ஆயிரக்கணக்கான ஏக்கர் காணியும் வீடுகளும் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. 
மன்னார் முள்ளிக்குளத்தைச் சேர்ந்த 400 குடும்பத்தினர் தங்களது காணிகளுக்குச் செல்லவிடாமல் தடுக்கப்பட்டுள்ளனர். இப்பிரதேசம் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நகரத்தின் மையத்தில் பரவிப்பாஞ்சான் என்று அழைக்கப்படும் ஒரு கிராமம் முழுமையாக இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அங்கு மக்கள் மீளக்குடியமர முடியாமல் இருக்கின்றனர். 
நான் மேற்கூறியவை ஒருசில உதாரணங்கள் மாத்திரமே. இவர்கள் தவிர சொந்த இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டவர்களில் மிகப் பெரும்பான்மையோர் தற்காலிகக் கொட்டகைகளின்கீழும் மரங்களின்கீழுமே வாழ்கின்றனர். ஐ.நா.சபையின் கணக்குப்படி வன்னியில் மட்டும் இரண்டரை இலட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாகவோ பகுதியாகவோ அழிக்கப்பட்டுள்ளன. அவை கட்டிக்கொடுக்கப்பட வேண்டும். மீள்குடியேற்றத்திற்கான பாரிய தேவை வடக்கு-கிழக்கில் மட்டுமே இருக்கும்போது மீள்குடியேற்றத்திற்கு ஒரு அற்பத் தொகையே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
இத்தொகைகூட வடக்கு - கிழக்கிற்குரியதா அல்லது முழு நாட்டிற்குமுரியதாஇதற்கான வேலைத்திட்டம் என்னஎன்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும். இந்த நாட்டில் வெள்ளையரிடமிருந்து ஆட்சி கைமாறியது தொடக்கம் நாற்பதாண்டுகள்வரை வெளிநாடுகளிலிருந்து பெற்ற மொத்த கடன்தொகையைவிட அதிகமான தொகையை இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகளில் வாங்கியுள்ளது. இப்பெருந்தொகை இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கெதிரான முழு அளவிலான படையெடுப்புக்காகச் செலவிடப்பட்டுள்ளது. 
இப்படையெடுப்பின் விளைவாக யுத்தத்தின் இறுதியில் 1,46,000 தமிழ் மக்களுக்கு என்ன நடந்தது என்பதே தெரியாமலுள்ளது. இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பேரவலத்தை இவ்வரசாங்கம் சர்வ சாதாரணமாக அலட்சியம் செய்தது மட்டுமன்றி அதனை மூடி மறைப்பதற்கும் பகீரதப் பிரயத்தனம் செய்து வருகின்றது. 
மேலும் இப்படையெடுப்பால் இரண்டரை இலட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள்வர்த்தக நிலையங்கள்பாடசாலைகள்வைத்தியசாலைகள் என வடக்கு-கிழக்கின் பெரும்பகுதி மக்களின் சொத்துக்களும் பொதுச்சொத்துக்களும் அழித்தொழிக்கப்பட்டன. இப்பேரழிவை சற்றேனும் ஈடுசெய்ய இந்த அரசாங்கம் கிஞ்சித்தும் அக்கறை செலுத்தவில்லை. 
பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கவீனர்களாகவும் நோயாளர்களாகவும்,மனநலம் பாதிக்கப்பட்டவர்களாகவும்விதவைகளாகவும் ஆக்கப்பட்டனர். எம்மக்களுடைய வாழ்வாதாரங்களாக இருந்த அசையும் மற்றும் அசையா சொத்துக்களான நிலம்வாகனங்கள் முதற்கொண்டு கால்நடைகள்வரை அனைத்தும் சூறையாடப்பட்டன. மூன்று இலட்சம் வரையான மக்கள் இடம் பெயர்க்கப்பட்டு ஆடு மாடுகளைப்போல் முட்கம்பி வேலிகளின் பின்னால் அடைத்து வைக்கப்பட்டனர். 
எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் இத்தகைய பேரழிவின்பின் அதிலிருந்து மக்களை மீட்டு சகஜநிலையை ஏற்படுத்துவதற்கான சிறப்பான செயற்றிட்டங்களும் அதற்கென போதிய நிதி ஒதுக்கீடுகளும் வரவு-செலவுத் திட்டங்களில் மேற்கொள்ளப்படும். ஆனால் இங்கு தமிழ் மக்களையும் அவர்களது சொத்துக்களையும் அழிப்பதற்கு மிகப் பெரும் ஒதுக்கீடுகளை மேற்கொண்ட அரசுக்கு இன்று அந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்கும் வாழ்வாதாரத்தை மீட்பதற்கும் ஒரு சதமேனும் ஒதுக்க மனம் வரவில்லை. 

இப்படையெடுப்பை புலிகளின் பிடியிலிருந்து தமிழ் மக்களை மீட்டெடுப்பதற்கான மனிதாபிமான நடவடிக்கை என இந்த அரசு உலகிற்குக் காட்ட முனைந்தது. ஆனால் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்தபோது வீடுவாகனம்வயல்,கால்நடைகள் என வளமோடு வாழ்ந்த மக்களில் அழித்தொழிக்கப்பட்டவர்கள் போக மீதிப்பேரை அடிமைகளாக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை போருக்குப் பின்னரான அனைத்து வரவு-செலவுத் திட்டங்களும் அதிகரித்தவகையில் நிரூபித்து வருகின்றது. 


உயிரழிப்புக்கள் சொத்தழிப்புக்கள்மக்கள் அங்கவீனம் ஆக்கப்பட்டமை விதவைகள் ஆக்கப்பட்டமை ஆகிவற்றிற்கு இழப்பீடுகளோ அல்லது மறுவாழ்வுத் திட்டங்களோ எதுவுமற்ற நிலையே இன்றும் காணப்படுகின்றது. இவற்றிற்கு ஒருசத நிதிகூட குறிப்பாக ஒதுக்கப்படவில்லை. மாறாகபிரச்சினைகளே இல்லாத அமைதியான ஒரு ஜனநாயக நாட்டின் வரவு-செலவுத் திட்டம் போன்று இனவாத உள்நோக்கம் கொண்ட பாசாங்கான வரவு-செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 
மீள்குடியேற்றம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக இடம்பெயர்ந்தோர் உரிமைகள் தொடர்பான வழிகாட்டு நெறிகளுக்கு முரணாகவும் ஜெனிவா தீர்மானத்திற்கு முரணாகவும் மீள்குடியேற்றம் என்ற பெயரால் அரங்கேற்றப்படும் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிலைநாட்டும் வேலைத்திட்டங்கள் சிலவற்றை இங்கு பட்டியலிட விரும்புகின்றேன். 
பெருமளவு மக்களுக்கு சொந்த நிலங்கள் மறுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களால் வளப்படுத்தப்பட்ட வாழ்வாதாரங்களை வழங்கக்கூடிய பயன்தரும் நிலங்களையும் இராணுவம் ஆக்கிரமித்துள்ளதுடன் அதனைத் திரும்பத் தரும்படிக் கோரக்கூடாது என்று ஒருபுறம் மக்களுக்கு எச்சரிக்கை செய்வதுடன்மறுபுறம் அவற்றைத் தனக்கு உரித்தாக்கும்படி அரசாங்க நிர்வாகத்திற்கு நெருக்கடிகளையும் கொடுத்து வருகின்றது. 
இராணுவத்தினரின் அதீதப் பிரசன்னமும் மக்களின் அன்றாட வாழ்க்கையில் அவர்களின் தலையீடுகளின் காரணமாகவும் பெருமளவு மக்கள் தமது நிலங்களுக்குத் திரும்ப முடியாத நிலையில் உள்ளனர். இவர்கள் ஏனைய மாவட்டங்களில் தமது நண்பர்களுடனும் உறவினர்களுடனும் தங்கி வாழ்ந்து வருகின்றனர். 
மேலும்போர்ச்சூழலில் வாழமுடியாமல் தமது உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு வெளிநாடுகளுக்குச் சென்ற பெருமளவு மக்களும் பிரதானமாக இந்தியாவிற்குச் சென்ற பெருமளவு மக்களும் வடக்கு-கிழக்கில் இராணுவ ஆட்சி காரணமாகவும் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படாமையாலும் தமது இடங்களுக்குத் திரும்ப முடியாமல் உள்ளனர். 
இவர்களின் நிலங்களை கபளீகரம் செய்யும் நோக்கில் வடக்கு-கிழக்கில் காணிமீள்பதிவு என்கின்ற ஒரு சூழ்ச்சியான செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது. கடந்த 19ஆம் திகதி இந்த மன்றத்தில் பேசிய கௌரவ அமைச்சர் சுசில் பிரேமஜெயந் அவர்கள் வடபகுதியைக் கட்டியெழுப்புவதற்குப் புலம்பெயர் தமிழர்களோ அரசசார்பற்ற நிறுவனங்களோ உதவவில்லை என்று குற்றம் சுமத்தியதுடன் இந்த அரசாங்கம் பெருமளவு நிதியொதுக்கி மீள்குடியேற்றத் திட்டங்களை நிறைவேற்றி வருகின்றது என்று கூறினார். 


இதுதொடர்பாக கூட்டமைப்பு உண்மையைப் பேசவேண்டும் என்றும் கூறினார். அதுமாத்திரமல்லாமல்மீள்குடியேற்றிய தமிழ் மக்களுக்கு ரூபாய் 25ஆயிரம் கொடுப்பனவுசீமெந்துதகரம்விவசாய உபகரணங்கள்நெல் விதைகள் போன்ற பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பட்டியலிட்டுள்ளார். ஆனால் இது கடைந்தெடுத்த பொய்யாகும். 
மீள்குடியேற்றம் என்ற பெயரில் சொந்த மாவட்டங்களில் இறக்கிவிடப்பட்ட மக்களுக்கு இந்திய அரசுதான் தகரங்களும் 8மூடை சீமெந்தும் கொடுத்ததே தவிர இலங்கை அரசாங்கம் அல்ல. அதேபோன்று விவசாய நிலங்களைத் துப்புரவு செய்வதற்காக விவசாய உபகரணங்கள் என்ற அடிப்படையில் மண்வெட்டிகத்திகோடாரி உள்ளிட்ட கருவிகளையும் இந்தியா கொடுத்தது. 
அதேபோன்று மெனிக்பாம் முகாமிலிருந்து அவர்களது சொந்த மாவட்டங்களுக்கு அழைத்துச் செல்வதற்கான பொறுப்பை ஐ.ஓ.எம். நிறுவனம் ஏற்றிருந்தது. மீள்குடியேற்றக் கொடுப்பனவாக ரூ.5000ஐயும் வாழ்வாதாரக் கொடுப்பனவாக ரூ.25,000ஐயும் அகதிகளுக்கான ஐ.நா.உயர்ஸ்தானிகராலயம் வழங்கியது. 
இதுதவிரஅந்தந்த மாவட்டங்களில் குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிற்சிறு வாழ்வாதார உதவிகளைச் சர்வதேசத் தொண்டு நிறுவனங்களும் அவற்றுடன் இணைந்து செயற்படுகின்ற உள்நாட்டுத் தொண்டு நிறுவனங்களும் வழங்கின. இதில் அரசாங்கம் தனது நிதியிலிருந்து எத்தனை ரூபாவைச் செலவழித்ததுஅந்த நிதி எந்த ஒதுக்கீட்டிலிருந்து ஒதுக்கப்பட்டதுஆகவே உலகநாடுகள் கொடுத்த உதவிகளை இலங்கை அரசாங்கம் தனது உதவிகள் என சொல்லிக் கொள்வது வெட்கக்கேடானது. 
வன்னி யுத்தம் முடிவுற்ற கையோடு மக்களை வவுனியா மெனிக்பாம் முகாம்களுக்கு அழைத்து வருவதற்கான பொறுப்பை சர்வதேச தொண்டு நிறுவனங்கள் ஏற்றிருந்தன. முகாமிற்குள் கொட்டில் அமைப்பதுகழிவறை கட்டுவதுமருத்துவமனை அமைப்பதுஉணவுப்பொருட்கள் வழங்குவதுபொதுவான சமையலறைகள் அமைப்பது,பாடசாலை நிறுவுவது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுமானப் பணிகளைத் தொண்டு நிறுவனங்களே மேற்கொண்டிருந்தன. இவற்றிற்கு அரசாங்கம் தனது பங்களிப்பாக ஒரு சதமேனும் செலவிட்டதா


முகாம்களினுள்ளே மருத்துவமனை அமைத்து மருத்துவர்களை நியமித்து சர்வதேச தொண்டு நிறுவனத்தினரும் இந்திய மருத்துவக் குழுவினரும் சிகிச்சைகளை மேற்கொண்டனர். இந்த அரசாங்கம் தனது பங்கிற்கு என்ன செய்தது
ஆகவே கௌரவ அமைச்சர்கள் சரியான தரவுகளைப் பெற்றுக்கொண்டு பேசவேண்டுமே தவிரஇந்த மன்றத்தைப் பிழையான வழியில் வழிநடத்தக்கூடிய வகையில் செய்திகளை வெளியிடுவது தவறானதாகும். 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அனுமதித்தால் எங்கே நாங்கள் உண்மைகளைச் சொல்லிவிடுவோமோ என்று அஞ்சியே எங்களை கடைசிவரை முகாமிற்குள் நுழைய விடாமல் பார்த்துக்கொண்டார்கள். இன்று உண்மைகள் வெளிவரத் தொடங்கிவிட்டன. 
வாழ்வாதாரக் கொடுப்பனவாக வழங்கப்பட்ட ரூ.25,000த்தில் பலருக்கு ரூ20,000 மட்டுமே வழங்கப்பட்டது. அந்த நிதியும்கூட பின்னர் வழங்கப்படவில்லை. சர்வதேச தொண்டு நிறுவனங்கள் வழங்கிய உதவிகளைக்கூட தட்டிப்பறித்த இந்த அரசாங்கம் கோடிக்கணக்கில் எமது மக்களுக்குச் செலவழித்ததாகக் கூறுவது கேலிக்கூத்தாகும். 

 அது மட்டுமின்றிஇவ்வாறு ஐ.நா தொண்டு நிறுவனத்தினால் வழங்கப்பட்ட நிதியை வடக்கு-கிழக்கைச் சார்ந்த கௌரவ அமைச்சர்களும் வடமாகாண ஆளுநரும் நேரடியாக இந்த மக்களிடம் கையளித்து தாங்கள் கொடுத்ததாக மேற்கொண்ட விளம்பரங்களின் மூலம் தமது சொந்தப்பணத்தைக் கொடுத்தது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி அதனைத் தமது குறுகிய அரசியல் ஆதாயத்திற்குப் பயன்படுத்திக்கொண்டனர். 
இந்த அரசு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழ் மக்களின் வரிப்பணமும் பயன்படுத்தப்பட்டுள்ளது. எமது வரிப்பணத்தைப் பயன்படுத்தியே எம்மைக் கொன்றொழித்த இந்த அரசாங்கம் எமது மக்களின் சிதைக்கப்பட்ட வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கு எமது வரிப்பணத்தில் எத்தனை ரூபாவை செலவழித்துள்ளது என்பதை இந்த சபைக்கு அமைச்சரால் தெளிவு படுத்த முடியுமா
ஒரு அரசாங்கம் தான் செய்ய வேண்டிய கடமையைப் புறந்தள்ளிவிட்டு,தனது இராணுவ முன்னெடுப்புகளால் உயிருக்கு அஞ்சி நாட்டைவிட்டு வெளியேறி அங்கு அகதிகளாக வாழும் மக்களிடம் இங்கு அகதிகளாக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்று எதிர்பார்ப்பது வெட்கக்கேடான விடயம். ஆயினும் தங்களது கடின உழைப்பில் ஈட்டிய சொற்ப வருமானத்தில் தங்களது செலவுகளைக் குறைத்துக்கொண்டு எமது மக்களுக்கு அவர்கள் செய்திருக்கின்ற உதவிகள் அளப்பரியவை. 

தமது பிள்ளைகளின் பிறந்தநாள்திருமணநாள்பெற்றோரின் நினைவுதினம்மனைவியின் நினைவு தினம்கணவனின் நினைவுதினம்பிள்ளைகளின் நினைவுதினம் என்று எந்தவொரு தினத்தையும் தாயகத்தில் உள்ள தமது உறவுகளுக்கு உதவுவதற்கான சந்தர்ப்பமாக அவர்கள் பயன்படுத்திக்கொள்கின்றனர். 

முட்கம்பி வேலிக்குள்ளிருந்த மக்களை அவர்களது இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டதன் பின்னர்வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாறாவிலுப்பை பாடசாலைக்குச் சென்று நாம் பார்வையிட்டோம். குண்டுகளால் பிளக்கப்பட்ட அந்தப் பாடசாலையின் அவல நிலையைப்போக்க அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தற்காலிக கூடாரம் அமைப்பதற்கு உதவியதுடன்மாணாக்கர்களுக்கான சப்பாத்துபுத்தகப்பை என்பனவற்றையும் வழங்கியது. 

உலக உணவுத்திட்ட நிறுவனம் வழங்கிய உணவுப்பொருட்களைச் சமைப்பதற்குப் பாத்திரங்களையோ கோப்பைகளைக்கூடவோ இந்த அரசாங்கம் வழங்கவில்லை. இதனையும் அவர்களே தமது நேயர்களின் அன்பளிப்பிலிருந்து வழங்கினார்கள். 

இதனைப் போன்றே குளவிசுட்டான் பாடசாலைக்கும்திருமுறிகண்டி பாடசாலைக்கும்,போரில் பாடசாலை இருந்த இடமே தெரியாமலிருந்த வவுனியா பெரிய தம்பனை பாடசாலைக்கும் அவர்கள் சப்பாத்துபுத்தகப்பை என்பனவற்றை வழங்கியிருந்தார்கள். வவுனியா மருத்துவமனையில் கண்பார்வை குறைபாடடைந்த சுமார் 54பேருக்கு இவர்களது நிதியுதவியில் கேட்ராக்ட் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. 

ரி.ஆர்.ரி என்றழைக்கப்படும் பரிசிலிருந்து ஒலிபரப்பாகும் தமிழ்ஒலி வானொலி நிலையத்தினர் வன்னியில் பல பாடசாலைகளுக்கும் கிழக்கில் பொத்துவில் பாடசாலைக்கும் மாணாக்கர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் மற்றும் சப்பாத்து போன்றவற்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். வவுனியா இந்து அன்பகத்திற்கு தண்ணீர்வசதி செய்து கொடுத்துள்ளனர். நூற்றுக்கணக்கானவர்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கியுள்ளனர். பாடசாலை முதல் பல்கலைக்கழக மாணவர்கள்வரை பலநூறு ஆதரவற்ற மாணவர்கள் தமது கல்வியைத் தொடர்வதற்காகப் பல்வேறு பொருளாதார உதவிகளைச் செய்து வருகின்றனர். 

சுவிசிலிருந்து செயற்படும் உதவும் கரங்கள் என்ற நிறுவனமும் இந்துக்கோயில்களும் யாழ்ப்பாணம்கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களில் மாணவர்களுக்கும் அனாதைக் குழந்தைகளுக்கும் யுத்தத்தால் ஊனமுற்றவர்களுக்கும் தம்மாலியன்ற வாழ்வாதார உதவிகளைச் செய்து வருகின்றனர். 

இதனைப் போன்றே கூட்டமைப்பின் பல்வேறு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாகவும்,தனிப்பட்ட ரீதியிலும்தினக்குரல் போன்ற ஊடகங்கள் வாயிலாகவும் ஐரோப்பாவின் பலநாடுகளிலிருந்தும்அவுஸ்திரேலியாகனடாஅமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்தும் புலம்பெயர் உறவுகள் பல்வேறு வாழ்வாதார உதவிகளைச் செய்து வருகின்றனர். இவை சில உதாரணங்கள் மட்டுமே. இந்தசபையில் அவர்களுக்கும் அவர்களைப்போல் உதவி செய்த பல நல்லுள்ளங்களுக்கும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன். 

ஆகவே அவர்கள் ஒன்றும் செய்யவில்லை என்று சொல்வது அரசாங்கத்தின் அறியாமை மட்டுமல்ல சர்வதேச நிறுவனங்கள் வழங்குகின்ற உதவிகளைக்கூடத் தட்டிப்பறிக்கும் இந்த அரசாங்கத்திற்கு அவர்களை நோக்கி விரல்நீட்டும் தகுதியும் கிடையாது. மீள்குடியேறிய மக்கள் தமது வாழ்வாதாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக இந்தியாவால் வழங்கப்பட்ட ஐந்நூறு உழவு இயந்திரங்களில் பெரும்பகுதி பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடையாமல் தட்டிப்பறிக்கப்பட்டது. 

இதேபோன்று இந்தியாவால் வழங்கப்பட்ட துவிச்சக்கர வண்டிகளும் தட்டிப்பறிக்கப்பட்டன. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் வழங்கப்பட்ட இருசக்கர உழவு இயந்திரங்கள் தட்டிப்பறிக்கப்பட்டதையும் அதைக்கண்டு அதிர்ச்சியுற்ற பெண் அதிகாரி கண்ணீர்விட்டு அழுததையும் உலகமே கண்ணுற்றது. யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் கைவிடப்பட்ட ஆயிரக்கணக்கான உழவு இயந்திரங்கள்லொறிகள்மோட்டார்சைக்கிள்கள்துவிச்சக்கர வண்டிகள் போன்ற பல வாகனங்களை உரிமையாளரிடம் இந்த அரசு கையளிக்கவில்லை. மாறாக அவற்றைக் கொள்ளையடித்துள்ளது. 

இன்று அனைத்தையும் இழந்த தமிழ் மீனவர்களுக்கு வாழ்வாதார உதவியாக இந்தியா வழங்க முன்வந்த இயந்திரப் படகுகளையும்வலைகளையும்கூட தட்டிப்பறிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. 
தம்மால் அழித்தொழிக்கப்பட்ட வீடுகளில் ஒன்றையேனும் கட்டிக்கொடுப்பதற்கு நிதியொதுக்க விரும்பாத இந்த அரசாங்கம் போரில் வீடிழந்த மக்களுக்கு இந்தியா கட்டிக்கொடுக்க முன்வந்த வீடுகளைத் தட்டிப்பறிப்பதற்குப் பல்வேறு முறைகேடான வழிகளைப் பின்பற்றி வருகின்றது. 

அமைச்சர்களே தமது அமைச்சுப் பணிகளைச் சுதந்திரமாக முன்னெடுக்க முடியாத நிலையில் இருக்கின்றனர். கடல்வளத்துறை அமைச்சர் மீன்பிடிப்பதற்குப் பாஸ்முறை எதனையும் விதிக்கவில்லை. அப்படியொரு சட்டமும் இல்லை. பாஸ்கேட்டால் இராணுவத்தினருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யுமாறு தெரிவித்துள்ளார். 
பாதிக்கப்பட்டவர்களை நீதிமன்றம் செல்லுமாறு ஆலோசனை வழங்கும் நிலையிலேயே அமைச்சர் இருக்கிறார். அவர் தனது இலாகாவில் இராணுவம் மூக்கை நுழைப்பதனைத் தட்டிக் கேட்க முடியாதவராகவே இருக்கின்றார். 
மீள்குடியேற்ற அமைச்சரோ அனைவரும் தமது சொந்தக் காணிகளில் குடியேற்றப்படுவர் என்று தெரிவித்திருந்தார். ஆனால் அந்த மக்களின் சொந்த நிலங்களை இராணுவம் ஆக்கிரமித்திருப்பதையும் சொந்த நிலங்களை அம்மக்கள் உரிமைகோரக்கூடாது என்று இராணுவத்தால் மிரட்டப்படுவதையும் தடுத்து நிறுத்த முடியாதவராகவே அவர் இருக்கின்றார். ஆக அமைச்சர்கள் சொல்வது எதுவுமே நடைபெறுவதில்லை. ஆணைவழங்க வேண்டிய அமைச்சர்கள் எதிர்கட்சி உறுப்பினர்கள் போல் கவலைகளை வெளியிடுபவர்களாக இருக்கின்றனர். 

இது இந்த அரசின் அனைத்து அமைச்சுக்களுமே பாதுகாப்பு அமைச்சுக்குக் கட்டுப்பட்டுச் செயற்படுவதைத் துலாம்பரமாக வெளிக்காட்டுகின்றது. உலகில் இராணுவ ஆட்சி நடைபெறும் நாடுகளில் மட்டுமே ஏனைய அமைச்சுக்கள் பாதுகாப்பு அமைச்சினால் கட்டுப்படுத்தப்படும் என்பதை இந்த சபைக்கு நினைவூட்ட விரும்புகின்றேன். 

தமிழ் மக்களையும் அவர்களது சொத்துக்களையும் அழிக்கத் தயக்கமின்றிச் செயற்பட்ட இந்த அரசுகொல்லப்பட்டவர்கள் தொடர்பில் பொறுப்புக்கூறுவதற்கும்அழிக்கப்பட்ட உயிர்களுக்கும் சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கும் மறுக்கிறது. போருக்குப் பின்னரான அனைத்து வரவு-செலவுத் திட்டங்களும் இன்றுவரை தமிழின ஒழிப்பை வேகப்படுத்துவதற்கான வரவு - செலவுத் திட்டங்களாகவே பார்க்க முடிகின்றது. 

சர்வதேச நிறுவனங்களோசர்வதேச சமூகமோ எமது மக்களுக்கு உதவ விடாமல் இவ்வரசு தடுக்கின்றது. அவற்றிற்கும் மேலாக செய்யப்படும் உதவிகளையும் தட்டிப்பறிக்கின்றது.Presidential Task Force என்னும் பெயரில் பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படும் அமைப்பானது வடக்கு மாகாணத்தில் செயற்படும் சகல தொண்டு நிறுவனங்களையும் கட்டுப்படுத்துவதனூடாக அவைகளின் சேவைகளை மக்களுக்குக் கிட்டாமல் செய்யும் பணியைச் செய்து வருகின்றது. மேற்கண்ட இந்த அமைப்பின் செயற்பாட்டை இல்லாதொழிப்பதன் மூலமே சர்வதேசத் தொண்டு நிறுவனங்களும் உள்நாட்டுத் தொண்டு நிறுவனங்களும் மக்களுக்கான சேவையைச் செய்ய முடியும் என்பதை அமைச்சரின் கவனத்திற்கும் சபையின் கவனத்திற்கும் கொண்டுவருகின்றேன். 
ஆக தமிழினத்தை அழிப்பதிலும் இருப்பவர்களை உய்ய விடாமல் தடுப்பதிலும் அரசு பலமுனைகளில் செயற்படுவதனையே இச்செயற்பாடுகள் தெளிவாகப் புலப்படுத்துகின்றன. கடந்த எழுபதாண்டு காலமாக இவ்வொடுக்குமுறை தொடர்கின்றது. இதன் விளைவாகவே இந்த நாட்டில் தனிநாடுகோரி நீண்ட நெடிய போராட்டமும் நடைபெற்றது. 

ஒருபுறம் இனமோதலுக்குத் தீர்வெதனையும் மறுதலிக்கும் இந்த அரசு,மறுபுறம் இனவழிப்பு நடவடிக்கைகளை இதுவரையில்லாத வகையில் வேகமாகச் செயற்படுத்தி வருகின்றது. இத்தகைய சிங்கள பௌத்த மேலாதிக்கவாத மனோநிலையானது எமது போராட்டத்தின் நியாயத்தை மென்மேலும் வலுப்படுத்துவதாகவே அமைகின்றது. 

ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ்வதற்கான தமிழ் மக்களின் கோரிக்கைகள் முயற்சிகள் யாவும் நிராகரிக்கப்பட்டு அவர்களது சொந்தப் பிரதேசங்களில் அவர்கள் சிறுபான்மையாக்கப்படும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதுமட்டுமன்றிதமிழ் மக்கள் இந்த நாட்டில் சிங்கள மக்களுடன் சமத்துவமாக வாழ்வதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளும் நிராகரிக்கப்பட்டே வருகின்றது. 
மாறாகசிங்களக் குடியேற்றங்களும் இராணுவ ஆக்கிரமிப்புக்களும் மிகப் பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருகின்றது. இவ்வாறான சூழ்நிலையில் இந்த நாட்டில் நாங்கள் ஒன்றுபட்டு வாழமுடியுமா என்பது பற்றி வெளிப்படையானதும் மனம் திறந்தவகையிலுமான விவாதத்தை மேற்கொள்ள இந்தசபை முன்வரவேண்டும். 

No comments:

Post a Comment