Translate

Tuesday 20 November 2012

தமிழ்ப் பெண்ணின் போராட்ட வாழ்க்கை! -கனேடிய பத்திரிகை

Posted Image
சன் சீ கப்பலில் வந்த அகதிகளின் தற்போதைய நிலைபற்றி வன்கூவரில் இருந்து வெளிவரும் ரைம்ஸ்கொலெனிஸ்ற் என்ற பத்திரிகை விவரணக் கட்டுரையொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கான உதாரணமாக அக் கப்பலில் வந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் பற்றிய அந்தக் கட்டுரையில்,

தற்போது கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் கனடியத் தமிழர் பேரவையின் (தமிழ்க் காங்கிரஸ்) பராமரிப்பில் உள்ள நிரஞ்சலா என்ற புனைபெயரையுடைய பெண் கடல் வழியே எம்வி சன் சீ என்ற ஒரு பழைய துருப்பிடித்த கப்பல் மூலம் பன்னிரெண்டு வாரங்கள் பயணித்து கனடாவை வந்துச் சேர்ந்திருக்கிறார்கள் அவரும் அவரது கணவரும்.


Posted Image

இலங்கையில் வட பகுதியில் நடந்த இறுதிப் போர் நிரஞ்சலாவின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டிருக்கிறது. போரில் அவரது மூன்று சகோதரர்களில் ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார். சகோதரியின் கணவரும் கொல்லப்பட்டிருக்கிறார். அவரது உடல் கிடைக்கவேயில்லை. நிரஞ்சலாவும் அவரது கணவரும் குண்டுகளுக்கு பய்ந்து தப்பி ஓடிக் கொண்டே இருந்திருக்கிறார்கள். ஆனால் எங்கும் அபாயம் சூழ்ந்துக் கொண்டே இருந்திருக்கிறது. அரக்கத்தனமான இலங்கை ராணுவத்தின் தமிழர்கள் வேட்டை தொடர்ந்துக் கொண்டே இருந்திருக்கிறது. தமிழ் மக்கள் மீது குண்டு மழையைப் பொழிந்துக் கொண்டே இருந்திருக்கிறது.

‘நான் பிறந்திலிருந்தே அச்சத்துடன் தான் வாழ்ந்தோம். எப்போது ராணுவத்தினர் வருவார்களோ எப்போது எங்களை சுடுவார்களோ என்ற அச்சம் இருந்துக் கொண்டே இருந்தது என மேற்படி கட்டுரையில் தெரிவித்துள்ள நிரஞ்சலா உயிருக்கு மாத்திரம் நாங்கள் பயப்படவில்;லை எங்களை பாலியியல் பலாத்காரம் செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில்தான் அங்குள்ள பெண்கள் எல்லோரும் வாழ்ந்துக் கொண்டிருந்தோம்.’ ஏனத் தெரிவித்துள்ளார்.

Posted Image

இருபத்தொரு வயதில் ஏராளமான அனுபவங்கள். இத்தனை சோகத்திலும் அவர் குரலில் தன்னம்பிக்கை தெரிகிறது. அவர் பேசும் போது அவரது வாழ்க்கை அனுபவங்களை மறக்க விரும்புவது தெரிந்தது. இந்த ஓடி ஒளிந்து அச்சத்திலேயே வாழும் வாழ்க்கை வேண்டாம் என்று அவரும் அவது கணவரும் முடிவெடுக்கிறார்கள். தாய் நாட்டிலேயே சிங்கள அரசினால் வெறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு துரத்தப்பட்டு அகதிகள் போல் வாழும் வாழ்க்கை அவர்களுக்குப் பிடிக்கவில்லை. எனவே தங்களது சொந்த ஊரான வன்னியை விட்டு வெளியேறுகிறார்கள்.

அந்த சமயத்தில் இலங்கைத் தமிழர்கள் பலர் தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு தப்பிப் போவார்கள். காரணம் அந்த நாடுகளுக்கு சுற்றுலா பயணிபோல் விசா வாங்குவது எளிது. அங்கு போய் தங்கிவிட்டு அங்கிருந்து வேறு நாடுகளுக்கு பயணிப்பார்கள். தாய் நாடு இருந்தும் வேறு நாடு தேடும் பரிதாப நிலை இலங்கைத் தமிழர்களுக்கு.

Posted Image

நிரஞ்சலாவும் அவரது கணவரும் தாய்லாந்துக்கு சென்றார்கள். அங்கே விசா காலம் முடிந்த பின்னும் மறைந்து மறைந்து ஒரு சிறு அறை வீட்டில் வசித்தார்கள். அங்கிருந்து கனாடவுக்கு ஒரு கப்பல் கிளம்புகிறது என்று கேள்விப்பட்டு அந்தக் கப்பலில் பயணிக்க முடிவு செய்தார்கள். கட்டணம் ஒருவருக்கு மூவாயிரம் டாலர்கள். தங்கள் பொருட்களையெல்லாம் விற்று அந்தப் பணத்தைக் கட்டி கப்பலில் ஏறினார்கள்.

மிகப் பழைய துருப் பிடித்த சின்ன கப்பல் அது. மொத்தம் 492 பேர் அதில் பயணிக்க வேண்டும். இத்தனைப் பேருக்கு இரண்டே இரண்டு கழிப்பிடம் தான். பயணிப்பவர்கள் யாரும் மேல் தளத்துக்கு வரக் கூடாது. குடிக்க தண்ணீர்கூட அளந்து அளந்துதான் கொடுப்பார்கள். ஏனென்றால் பயண காலம் மிக நீண்டது. கிட்டத்தட்ட பன்னிரெண்டு வாரங்கள். கப்பலில் ஏறியதுமே, ‘இந்தக் கப்பல் பயணம் மிக ஆபத்தானது. மரணம் ஏற்படலாம்’ என்ற எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. பயணத்தின் போது ஒருவர் மரணமடைய அவரை கடலிலேயே ‘அடக்கம்’ செய்து விட்டு தொடர்ந்து பயணித்திருக்கிறார்கள்.

‘இலங்கையில் இருந்து சாவதை விட இந்த கப்பல் பயணம் மேல்’ என்கிறார் நிரஞ்சலா. பன்னிரெண்டு வாரங்கள் நிலப்பரப்பையே பார்க்காமல் வாழ்க்கையை கப்பலில் நகர்த்தியிருக்கிறார்கள். ‘ எங்களுக்கு வேறு வழியில்லை. நாங்கள் வாழ வேண்டுமென்றால் இதுதான் வழி’ என்று சொல்லும் நிரஞ்சலாவிடம வாழ வேண்டும் என்ற பிரியம் இருக்கிறது. மெல்லிய தேகமும் தீர்க்கமான கண்களும் கொண்ட தமிழை மிக வேகமாக பேசுகிறார். ஆங்கிலமும் அவரால் பேச இயலுகிறது.

கனடாதான் பன்னிரெண்டு வாரங்களுக்குப் பிறகு அவர்கள் கண்கள் கண்ட நிலப் பரப்பு. கனடா கரை அடைந்ததும் கனடிய குடியுரிமை அதிகாரிகள் அவர்களை சூழ்ந்துக் கொண்டார்கள். மருத்துவ பரிசோதனைகளும் புகைப்படம் எடுத்தலும் முடிந்ததும் பெண்களும் ஆண்களும் தனித் தனியாக பிரிக்கப்பட்டார்கள். பெண்கள் பார்னபி தடுப்பு மையத்துக்கு அனுப்பப்பட்டார்கள் கனடா மண்னை மிதித்ததில் நிரஞ்சலாவுக்கு மகிழ்ச்சிதான் என்றாலும் கணவரிடமிருந்து பிரித்தது அவருக்கு வருத்தம். வாரத்துக்கு ஒரு முறை தொலைப் பேசியில் கணவருடன் ஐந்து நிமிடங்கள் பேச அனுமதி தருவார்கள்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு நவம்பர் 20ஆம் தேதி 2010ஆம் வருடம் நிரஞ்சலா வெளியில் விடப்பட்டார். அவரது கணவர் வெளிவர இன்னும் நான்கு மாதங்கள் ஆகின. அவர் இனி அகதி நிலைக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் அதில் ஒரு சிக்கல். அகதிகள் குடியுரிமை வாரியம் அவரது விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டாலும் கனடிய எல்லை பணி வாரியம் அவரது கணவருக்கு அகதி நிலை கொடுக்க எதிர்க்கிறது. காரணம் அது நிரஞ்சலாவின் கணவெ விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் பங்கேற்றவரோ என்ற சந்தேகம் அதற்கு இருக்கிறது. கனடாவில் விடுதலைப் புலி இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது.

‘அவர் துப்பாக்கியைத் தொட்டது கூட கிடையாது. சுட்டது கிடையாது’ என்கிறார் நிரஞ்சலா. இவருக்கு இப்போது பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருக்கும் கனடிய தமிழர் பேரவையின் பி.சி. பிரிவு தலைவர் சாம் நல்லையாவும் இதை மறுக்கிறார். ‘இவரது கணவர் மிக அமைதியானவர், அவரால் துப்பாக்கி தூக்கி சுட்டிருக்க முடியும் என்று எனக்கு தோன்றவில்லை’ என்கிறார் நல்லையா,

கனடிய அரசு இவர்களுடைய பிரச்சனையை என்று விசாரித்து முடிவெடுக்கும் என்று இன்னும் தேதி எதுவும் சொல்லவில்லை. அதனால் மன பாரத்துடன் காத்திருக்கிறார்கள். கணவருடைய அகதி நிலை விண்னப்பம் தள்ளுபடி செய்யப்பட்டால் நிரஞ்சலாவும் அகதி நிலைக்கு விண்ணப்பிக்க இயலாது. இருவரும் நாடு கடத்தப்படுவார்கள். மேல் முறையீடும் செய்ய இயலாது.

கனடிய அரசு இப்போது பலவித ஆதாரங்களை அகதிகளாய் வருபவர்களிடம் கேட்கிறது. அவர்களை நாட்டுக்குள் அனுமதிக்காமல் இருக்க விடுதலைப் புலிகளுடன் இருந்தார்கள் போன்ற பலவீனமான காரணங்களைக் கூடச் சொல்லுகிறது. குடியுரிமை மற்றும் அகதிகள் வாரியம் அனுமதித்தால் கூட அதை எதிர்க்கிறார்கள். நீதிமன்றம் அனுமதித்தாலும் மேல் முறையீடு செய்கிறார்கள்’ என்று கனடிய அகதிகளுக்கான கூட்டமைப்பு குறிப்பிடுகிறது. இந்த அமைப்பில் அமெனெஸ்டி அமைப்பு, கனடிய தமிழ்ப் பேரவை, சர்வதேச சமூக உரிமை கண்காணிப்பு அமைப்பு போன்றவை உறுப்பினர்களாக இருக்கின்றன.

‘சன் சீ கப்பலில் வந்தவர்களை சாதரண அகதிகளாய் வந்தவர்களைப் போல் அரசு நடத்தவில்லை. அவர்களை வித்தியாசமாய் நடத்துகிறார்கள்’ என்கிறார் ஜேனட் டென்ச். இவர் கனடிய அகதிகளுக்கான கூட்டமைப்பின் செயல் இயக்குநர். ‘என்னை பலவிதமான கேள்விகள் கேட்டார்கள். நான் ஏன் தாய் நாட்டை விட்டு வெளியேறினேன்? பொருளாதரத்துகாக கனடாவுக்கு வந்தேனா அல்லது உண்மையிலேயே அகதிதானா? இப்படி பல கேள்விகளைத் திரும்பத் திரும்பக் கேட்டார்கள்’ என்கிறார் நிரஞ்சலா.

‘நாங்கள் எங்கள் நாட்டில் நிலவும் மோசமான நிலை காரணமாக இங்கு வந்தோம். பணம் சம்பாதிப்பது என்றால் எங்கள் நாட்டிலேயே சம்பாதிக்கலாம். எங்கள் நாடும் அழகான அருமையான நாடு. அதைவிட்டு நாங்கள் வர வேண்டும் என்றால் என்ன காரணம்? என்று சொன்னேன். எங்கள் நாட்டில் நடந்தவற்றை அவர்களுக்கு புரிய வைக்க முயன்றேன். இங்கே நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. கடுமையாக உழைக்கிறோம் எந்த பிரதிபலனும் இல்லாமல்’ என்கிறார் நிரஞ்சலா. தற்போது இவர் வான்கூவரில் ஒரு பீட்சா கடையில் பணி புரிகிறார். இவரது கணவர் ஒரு பெட்ரோல் நிலையத்தில் வேலை செய்கிறார். எதிர்காலத்தில் மருத்துவ தாதியாக பணியாற்ற இவருக்கு விருப்பம். அதற்காக படிக்க வேண்டும் என்கிறார். இவரது கணவருக்கு தச்சுத் தொழிலில் ஆர்வம். அவரது வழக்கு விசாரணை முடிந்ததும் இருவரும் கனடாவில் முறைப்படி திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்திருக்கிறார்கள்.

‘எனக்கு வான்கூவரிலேயே வசிக்க ஆசை. அத்தனை அழகாய் இருக்கிறது’ வியப்புடன் கூறுகிறார் நிரஞ்சலா நடக்குமா?

http://www.canadamir...anada/1565.html
 

No comments:

Post a Comment