Translate

Thursday 15 September 2011

சோனியா சொன்னதைத்தான் நாங்களும் சொல்கிறோம்! - வைகோ சுளீர்.

சென்னை - டெல்லி - குமாரபாளையம் - டெல்லி - கோவை - சென்னை - ஆத்தூர்... நித்தமும் வேறு வேறு ஊர்கள். மூன்று தமிழர்களின் உயிர் காப்பு, முல்லைப் பெரியாறுக்காக உண்ணாவிரதம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு, போர்க் குற்ற விசாரணை... வைகோவுக்கு நித்தம் நித்தம் யுத்தம்தான்!

''ஜெயலலிதா, தனது 100 நாட்கள் ஆட்சியைச் சாதனை விழாவாகக் கொண்டாடிவிட்டார். இந்த 100 நாட்கள்பற்றிய உங்களது கருத்து என்ன?''



''இலங்கையைப் போர்க் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியது, இலங்கை மீது பொருளாதாரத் தடை வேண்டும் எனக் கேட்டது, கச்சத் தீவை மீட்க வேண்டும் என்றது, மூன்று தமிழர்களின் உயிர் காக்க தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தது என வரவேற்கத் தக்க பல்வேறு முயற்சிகளை முதலமைச்சர் இந்த 100 நாட்களில் செய்து காட்டிவிட்டார். ஆனால், சமச்சீர்க் கல்வி விவகாரத்தில் அவரது அணுகுமுறை தவறானது. ஒருமுறை உச்ச நீதிமன்றம் கண்டித்த பிறகும், தனது போக்கை மாற்றிக்கொள்ளாமல் மறுபடியும் டெல்லிக்கு ஓடியது, அவரது பிடிவாதக் குணத்தையே காட்டியது. இது சரியான ஜனநாயக அணுகுமுறை அல்ல!

பொதுவாகவே, இலவசங்களை அறிவித்து ஆட்சியைத் தக்கவைப்பது சரியானது அல்ல. 'உழைப்பே உயர்வு தரும்’ என்று சொல்லி வளர்க்கப்பட்ட தமிழ்ச் சமூகத்தில் உழைக்கும் மனோநிலையைக் குறைக்கும் இத்தகைய இலவசத் திட்டங்களை முதலமைச்சர் குறைக்க வேண்டும். கருணாநிதி இத்தகைய திட்டங்களைக் கொண்டுவந்தபோது விமர்சித்த இன்றைய முதல்வரும், அதையே பின்பற்றுவது தவறானது. இத்தகைய திட்டங்களால்தான் தமிழகத்தில் வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல், பீகார், ஒடிஷாவில் இருந்து ஏராளமானவர்கள் இங்கு வேலைக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.

தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே நாசமாக்கும் டாஸ்மாக் மது விற்பனையை ஓர் அரசாங்கம் தனது சாதனையாகச் சொல்வது அருவருப்பானது. உழைக்கும் வர்க்கமான இளைய தலைமுறையின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாத அக்கறையற்ற போக்கு எனக்குக் கவலையைத் தருகிறது!''

''திருச்சி மேற்கு தேர்தலைப் புறக்கணிக்கும் ம.தி.மு.க. உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா?''

''நிச்சயம் போட்டியிடுவோம்! 'ஊழலற்ற உண்மையான உள்ளாட்சி நிர்வாகத்துக்கு உறுதி அளிக்கும் ம.தி.மு.க.’ என்ற முழக்கத்தோடு வரப்போகிறோம். அ.தி.மு.க-வுடன் கூட்டணிக்கு நாங்கள் முயற்சிக்கவும் இல்லை. தி.மு.க - வுடன் கூட்டும் கிடையாது. எங்களை மட்டுமே நம்பி நாங்கள் இருக்கிறோம். பண பலம், அதிகார பலம், விளம்பர பலம் மூன்றுமே இல்லாமல், மக்களின் நம்பிக்கையைக் கடந்த ஐந்து மாதங்களில் அதிகமாகப் பெற்றுள்ளோம். ஊழல் கறை படியாதவர்கள் என்ற தகுதி எங்களைத் திரும்பிப் பார்க்கவைக்கிறது. மாற்றுச் சக்தியாக ம.தி.மு.க. வரும். அதை இந்த உள்ளாட்சித் தேர்தல் சொல்லும்!''

''ராஜீவ் காந்தியைக் கொன்ற கொலையாளிகளை ஆதரித்து நீங்கள் பேசுவது, அந்தக் கொலையைவிடக் கொடூரமானது என்று காங்கிரஸ் கட்சியினர் கொந்தளிக்கிறார்களே?''

''ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்தை நியாயப்படுத்தி நான் எந்த இடத்திலும் பேசவே இல்லை. மேலும், அந்தச் சம்பவத்துக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கும் துளி அளவும் சம்பந்தம் இல்லை. நாங்கள் தூக்கு மேடையில் இருந்து காப்பாற்றத் துடிப்பது கொலையாளிகளை அல்ல... அப்பாவிகளை. அசைக்க முடியாத ஆதாரங்களைவைத்து, அந்த வழக்கு போடப்பட வில்லை. ஜோடிக்கப்பட்ட கதைகளை வைத்து புனையப்பட்ட நாடகம் இது. ஒரே ஓர் உதாரணம் மட்டும் சொல்கிறேன்... பேட்டரி செல்களை வாங்கிக் கொடுத்ததாக பேரறிவாளன் மீது குற்றச்சாட்டு. பேட்டரி செல் வாங்கினால், எந்தக் கடையிலாவது பில் கொடுப்பானா? அதுவும் 21 ஆண்டுகளுக்கு முன்னால் கொடுப்பானா? சரி, கொடுத்தான் என்றே வைத்துக்கொள்ளுங்கள். மே மாதம் 21-ம் தேதிக்கு முன்னால் தரப்பட்ட அந்த பில்லை, ஜூன் மாதம் 10-ம் தேதி வரை யாராவது சட்டைப் பையில் வைத்திருப்பாரா? கொலைச் சதியில் உடந்தையாக இருந்தவர் என்றால், அவருக்கு இதுவே முக்கிய ஆதாரமாக மாறும் எனத் தெரியாதா? கிழித்துப்போட்டு இருக்க மாட்டாரா? போலீஸ் கைதுசெய்ய வரும்போது, எடுக்க வசதியாக மேல்சட்டையில் வைத்து இருப்பாரா? இப்படி எத்தனையோ கேள்விகளைக் கேட்டுக் கொண்டே போகலாம். இப்படிப்பட்ட அப்பாவிகளுக்காகத்தான் பேசுகிறோம். இவர்களுக்குக் கொலையிலும் சம்பந்தம் இல்லை. கொலைச் சதியிலும் பங்கேற்பு இல்லை. இதுதான் உண்மை!

இவர்களைத் தூக்கில் போடக் கூடாது என்று நாங்கள் சொல்வது கொலைக்கான ஆதரவு என்றால், 'இவர்களைத் தூக்கில் போடக் கூடாது’ என்று சோனியா சொன்னாரே, அவர் மீதும் இதையே சொல்வார்களா? 'எனக்கோ, என்னுடைய குடும்பத்துக்கோ, எனது பிள்ளைகளுக்கோ இவர்கள் நால்வரையும் தூக்கில் போட வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை’ என்று 99-ம் ஆண்டு அன்றைய ஜனாதிபதியிடம், சோனியா சொன்னதைத்தான் நாங்கள் சொல்கிறோம்!

நளினி, பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய நால்வருக்கும் தூக்குத் தண்டனையை உறுதிப்படுத்திய உச்ச நீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ், தூக்குத் தண்டனைக்கு எதிராக இப்போது கருத்துச் சொல்லி இருக்கிறார். நீதிபதி சொல்வதைத்தான் நாங்கள் சொல்கிறோம். பூந்தமல்லி தடா நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி, சி.பி.ஐ. சிறப்புப் புலனாய்வுக் குழுவைக் கண்காணித்த அதிகாரி வி.ஆர்.கார்த்திகேயன். அவரும் தூக்குத் தண்டனை அவசியம் இல்லை என்கிறார். கார்த்திகேயன் சொல்வதைத்தான் நாங்கள் சொல்கிறோம். சோனியா உள்ளிட்ட இவர்களையும் கொலைகாரர்கள் என்பார்களா காங்கிரஸ்காரர்கள்?''

''ஸ்ரீபெரும்புதூர் தாக்குதலில் இறந்த ராஜீவ் நீங்கலான 16 பேரின் குடும்பத்தினர் உண்ணாவிரதம் இருந்துள்ளனர். 'மூன்று பேரையும் தூக்கிலிட்டே தீர வேண்டும்’ என்று அவர்கள் சொல்வதற்கு உங்கள் பதில் என்ன?''

''அவர்களது துயரத்தில் நானும் பங்கேற்கிறேன். 'போன உயிர் திரும்பி வரப்போவது இல்லை’ என்று அவர்கள் பேட்டி அளித்து இருப்பதையும் நான் பார்த்தேன். அவர்களைத் தங்களது அரசியல் சுய லாபங்களுக்காக காங்கிரஸ்காரர்கள் தூண்டி விட்டுக் குளிர்காயப் பார்க்கிறார்கள். உச்ச நீதிமன்றம் வழங்கிய தனது தீர்ப்பில், 'இது தனிப்பட்ட ஒரு நபரைக் கொலை செய்ய நடந்த தாக்குதல்தான். மற்ற 16 பேர் இறந்தது தற்செயலானது. எனவே, இதை 17 பேர் இறப்புக்குக் காரணமான கொலையாகக் கருத முடியாது. அரசுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த வேண்டும், மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கமும் இல்லை’ என்று கூறிஉள்ளது. இதை காங்கிரஸ்காரர்கள் படிக்க வேண்டும்.

மும்பையில் 93 பேர் கொலையான சம்பவத் துக்குக் காரணமானவராகச் சொல்லப்படும் அபுசலீம், போர்ச்சுக்கல் நாட்டில் மறைந்து இருந்தார். இந்தியா அவரை ஒப்படைக்கச் சொன்னது. 'உங்கள் நாட்டிடம் ஒப்படைத்தால், அவரைத் தூக்கிலிட்டுக் கொல்வீர்கள்’ என்று தர மறுத்தார்கள். 'நாங்கள் தூக்கில் போட மாட்டோம்’ என்று போர்ச்சுக்கல் அரசுக்கு வாக்குறுதி கொடுத்தது இந்தியா. அது எந்த அடிப்படையில்?

பாகிஸ்தான் அரசு சரப்ஜித் சிங்கைத் தூக்கிலிடக் கூடாது என்று எந்த அடிப்படையில் இந்தியா சொல்கிறது?

இன்றைக்கு நீலிக்கண்ணீர் வடிக்கும் காங்கிரஸ்காரர்கள், லட்சக்கணக்கான தமிழர்கள் ஈழத்தில் கொல்லப்பட்டபோது, ஒரு நிமிடம் கண்ணீர் சிந்தியது உண்டா? இலங்கைப் படுகொலைகளுக்கு காங்கிரஸ் அரசும் பதில் சொல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தம் நெருங்கிக்கொண்டு இருப்பதால், அதைத் திசை திருப்ப மூன்று தமிழர்களைத் தூக்கிலிடத் திட்டமிட்டார்கள். அது நடக்காது.

மக்கள் மன்றம் இதை ஏற்காது என்பதற்கு ஆதரவாக எத்தனையோ போராட்டங்கள் நடந்தன. இதை ஏற்று சட்டமன்றமும் தீர்மானம் நிறைவேற்றியதன் மூலம் மகத் தான சாதனையை முதல்வர் செய்துகாட்டிவிட்டார். இனி இருப்பது நீதிமன்றம் மட்டும்தான். ஏராளமான முன்னுதாரணத் தீர்ப்புகளைவைத்து, சட்டரீதியான வாதங் களிலும் வென்று எடுப்போம். தூக்குமரம் முறியும். இவர்கள் மூவருக்காக மட்டும் அல்ல... நிரந்தரமாகவே முறிய வேண்டும்!''

நன்றி - விகடன்

No comments:

Post a Comment